

- நன்றி:முரசு அஞ்சல்
தொடர்பான செய்திகள்:-
தொடர்பான செய்தி:
அறிவியல், கணிதப் பாடங்கள் தற்பொழுது ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவை, அடுத்த கல்வி ஆண்டு முதல் தாய் மொழியிலேயே பயிற்றுவிக்கப்படவிருக்கின்ற நிலையில், ஆரம்ப பாடசாலையில் முதல் வகுப்பு முதல் ஆறாம் ஆண்டு வரை உள்ள கணித, அறிவியல் பாட நூல்கள் தமிழ், மலாய், சீன மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன.
2012ஆம் கல்வி ஆண்டிலிருந்து தமிழ்ப்பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்கள் கணித, அறிவியல் பாடங்களைத் தாய்மொழியில் கற்க இருக்கின்றனர்.
இதனால் தமிழ்மொழியில் கணித, அறிவியல் பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. கல்வி அமைச்சின் தமிழ்மொழிக்கான கலைத்திட்ட மேம்பாட்டுக் குழுவின் வழிகாட்டுதலில் பாடநூல் பிரிவு அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருவது பாராட்டுக்குரியது.
ஆனால், இவ்விரு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் நல்லதமிழ்ச் சொற்களை அடியோடு புறக்கணிப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, சுழியம் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பூஜியம் என்ற சொல்லை வலிந்து பயன்படுத்துகின்றனராம்.
அரசு தமிழ் வானொலியான மின்னல் வானொலி, தனியார் வானொலியான தி.எச்.ஆர் ராகா, அசுட்ரோ வானவில் தொலைக்காட்சி அலைவரிசை எல்லாம் சுழியம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனரே, நாமும் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புதிய தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்துவோமே என்ற எண்ணமெல்லாம் இல்லாமல், பூஜியம் என்று போடலாமா? அல்லது புஜ்ஜியம் என்று அச்சிடலாமா? என்றெல்லாம் ஆலோசிக்கின்றார்களாம்.
மின்னல் வானொலிக்கு இதற்கு முன்னால் வேறொருவர் தலைவராக இருந்த காலத்தில் இதே குழுவினர் கல்வி அமைச்சின் சார்பில் கடிதம் எழுதி சுழியத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் கேட்டுக்கொண்டனராம்.
இந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்களில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழராக உள்ள நிலையில் தமிழ்மொழிக்காக அரசு ஏற்படுத்தியுள்ள அமைப்புகளில் அமர்ந்துகொண்டு, தமிழ்மொழியின் ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் துணைபுரியாமல், கி.மு 6, 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தமிழும் தமிழரும் ஆட்சியை இழந்த நிலையில், தமிழில் இடைசெருகப்பட்ட பூஜியம் என்ற சொல்லுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ் அதிகாரிகள் சமுதாயத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் என்று இரெ.சு.முத்தையா தெரிவித்தார்.
2002ஆம் ஆண்டில் அறிவியல், கணிதப் பாடங்கள் தாய்மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டன. அப்போதைய பிரதமர் துன் மகாதீர் மலேசிய மாணவர்கள் ஆங்கில மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இதைக் கொள்கை முடிவாகவே அறிவித்தார்.
ஆனாலும், தமிழ்மொழியில் இவ்விரு முக்கியப் பாடங்களும் பயில வேண்டும் என்று கல்வியாளர்களும் சமுக ஆர்வலர்களும் ஆரம்பம் முதலே குரல் கொடுத்தனர். 2003ஆம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட இத்திட்டத்தின்படி 2008ஆம் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்கள் கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் எழுதினர்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, உலக மொழிக்கெல்லாம் சொற்களை ஈகம் செய்து பல மொழிகளை ஈன்று புறம்தந்த தமிழ்மொழியில் காலத்தால் மறுமலர்ச்சி பெறுவதற்கான கடமைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும்.
ஆங்கில மொழிகளில்கூட எத்தனையோ மாற்றம் பெற்றுள்ள நிலைமையில் தமிழும் வளர்ச்சி காணவேண்டும். அப்போதுதான் அது காலத்தால் தழைக்கும்; நிலைக்கும். இதற்கு, அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று இரெ.சு.முத்தையா வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
எது எப்படி இருப்பினும் “0”ஐ சுழியம் என்று தமிழில் சொல்லுவதே இனிதாகவும் எளிதாகவும் இருப்பதாக எனக்குப் படுகிறது.
சுழி, சுன்னம் அல்லது பூச்சியம் ஆகிய மூன்றையும்விட சுழியம் என்பது ஏற்புடையதாக இருக்கிறது.
நம் நாட்டில் இந்தச் “சுழியம” பட்ட பெரும் பாடு அறிவீர்களா?
தமிழ் அறிஞர்கள் ஒரு பக்கம் கூடிநின்று “சுழியம்”தான் சரி என்றும், கிரந்தப் பற்றுள்ள அன்பர்கள் “பூ” என்ற எழுத்தில் தொடங்கும் வடிவம்தான் (எது சரியானது என்று தெரியாததால் முதல் எழுத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்) சரி என்றும் மல்லுக்கு நின்ற காலம் உண்டு.
கல்வித் துறை சார்ந்த ஆசிரியர்கள் “பூ” என்று தொடங்கும் வடிவத்தையே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் சிலர் எழுதப்படாத சட்டத்தைப் பல கூட்டங்களில் அறிவிப்பு செய்ததாக சிலர் சொல்லிய கதையும் உண்டு.
தமிழ் நாளிதழ்கள் மக்களுக்குப் புரியும்படி எழுதுவதாகப் பறைசாற்றிக்கொண்டு “பூ” என்று தொடங்கும் சொல்லையே பயன்படுத்தினர். இன்றும் அதுதான் நிலைமை. அவர்கள் சுழியத்திற்கு மாறுவதாக இல்லை. காரணம் மக்களுக்குப் புரியாதாம். (ஆனால், அதே நாளிதழ்கள் கடப்பிதழ், அகன்ற அலைவரிசை, இணையம், கையூட்டு போன்ற பற்பல நற்றமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை வாசகர்களுக்கு எப்படி புரிகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியாது)
இதுமட்டுமா? இந்தச் சுழியத்தால் நமது மின்னல் பண்பலை வானொலி நிலையத்தில் சுனாமியே ஏற்பட்ட கதையும் இருக்கிறது. சுழியம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்திய “மிகக் கடுமையான” குற்றத்திற்காக அதன் ஊழியர்களாக இருந்த அருமையான – ஆற்றல்மிக்க இளம் அறிவிப்பாளர்கள் சிலர் தண்டிக்கப்பட்டார்கள் – அங்கிருந்து தூக்கியெறியப்பட்டார்கள்.
வானொலி நிலைய ஒலிக்கூடத்தில் “சுழியம் என்று அறிவிப்புச் செய்யக்கூடாது” என்று கொட்டை எழுத்தில் சுவரொட்டி எழுதி வைக்கப்பட்டதாக அப்போது கேள்விப்பட்டதுண்டு.
(சுழியம் என்று உச்சரித்த இளம் அறிவிப்பாளர்களுக்குத் தண்டனை வழங்கிய அதிகாரி பிறகு, இருக்கிறாரா? இல்லையா? என்று அரவமே இல்லாமல் காணாமல் போய்விட்டார் என்பது வேறு செய்தி)
இப்படியெல்லாம் சுழியம் சம்பந்தமாக நடந்த கூத்துகள் ஏராளம். அஃது ஒரு காலம். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறி இருக்கிறது.
“சுழியம்” என்ற சொல் இன்று மக்கள் வழக்கில் மிக இயல்பாக ஆகியிருக்கிறது. முன்பு முடியாது என்று தடைபோட்ட அதே மின்னல் வானொலி இன்று நாள்தோறும் சுழியம்.. சுழியம்.. சுழியம் என்று முழங்கி காற்றலையில் தமிழ்மணம் பரப்புகிறது.
தி.எச்.ஆர் ராகா தனியார் தமிழ் வானொலிகூட சமயங்களில் சுழியம் என்று முழங்குகிறது. குறிப்பாக, சில விளம்பரங்களில் சுழியத்தைக் கேட்க முடிகிறது.
அசுட்ரோ வானவில் பல நிகழ்ச்சிகளில் சுழியத்தைச் சொல்லி பெரிய அளவில் விளம்பரத்தைக் கொடுத்துள்ளது.
இப்படியாக, ஊடகங்கள் முழங்கிய சுழியம் எனும் நற்றமிழை இன்று நாட்டில் மாணவர்கள் தொடங்கி மாண்புமிகு (சிலர்) வரையில் தாராளமாகப் புழங்கி வருகின்றனர். நாளிதழ்களில் சிலர் எழுத்தும் கட்டுரைகளில், குயில், உங்கள் குரல், மயில் முதலான மாத இதழ்களில், கவிஞர்கள் சிலருடைய பாக்களில், உள்நாட்டு நூல்களில், நம் நாட்டிலேயே உருவான கலைச்சொல் அகராதியில், தமிழ் இலக்கிய மேடைகளில் என பல இடங்களில் சுழியத்தைப் பரவலாகக் காண முடிகிறது.
(1992இல் கோலாலம்பூர், ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வெளியிட்ட 'கலைச்சொல் அகர முதலியிலிருந்து எடுக்கப்பட்டது )
இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு வளர்ச்சி எனலாம். இதேபோல இன்னும் முயன்றால் பல நல்லதமிழ்ச் சொற்களை மக்கள் வழக்கில் கொண்டுவர முடியும் என்பதற்கு இது நல்ல சான்றாகும்.
சரி, இந்தச் சுழியம் என்பது பொருத்தமான சொல்தானா? என்று பார்ப்போமா?
சுழி என்ற அடிச்சொல்லுடன் ‘அம்’ என்ற விகுதி சேர்ந்து உருவானதுதான் “சுழியம்”. இது புதிய சொல்லாட்சியாக இருந்தாலும் “சுழி” பழங்காலமாக மக்கள் வழக்கில் உள்ள சொல்தான்.
பிறந்த குழந்தையின் தலையைப் பார்த்து, “இவன் ரெண்டு சுழிக்காரன்; ரெண்டு பெண்டாட்டி கட்டுவான்” என்று பாமர மக்கள் இன்றும் பேசிக்கொள்வதைக் காணலாம். அதேபோல் சுற்றி எழுதும் எழுத்துகளைச் “சுழி” என்று சொல்கிறோம். இரண்டு சுழி “ன”, மூன்று சுழி “ண” என்பது மக்கள் வழக்கு. சுற்றுவதை “சுழல்” என்கிறோம். சுற்றி அடிக்கும் காற்றைச் சுழல் காற்று என்கிறோம். பம்பரம் சுழலும் என்கிறோம்.
ஆக, சுழி என்பது வளைவுக் கருத்துகொண்ட ஒரு சொல் என்பது தெளிவு. ஒரு புள்ளியில் தொடங்கி அப்படியே சுற்றிவந்து அதே புள்ளியை வந்து மீண்டும் அடைவதைச் “சுழி” எனக் குறிப்பிடுகிறோம்.
அந்த வகையில் “சுழியம்” என்பது மிகவும் சரியான சொல்லாட்சியாகவே இருக்கிறது. “0” என்பது ஒரு புள்ளியில் தொடங்கி சுற்றிவந்து அதே புள்ளியில் சேரும் வடிவம்தான். ஆகவே, ‘சுழியத்தையே” அனைவரும் பயன்படுத்துவது நன்று.
ஆயினும், சிலர் இன்னும் விடாப்பிடியாக “பூ” என்று தொடங்கும் சொல்லையே பிடித்துக்கொண்டு தொங்குவதைப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் உள்ளது.
அதே வேளையில், அந்தப் “பூ” என்று தொடங்கும் சொல்லைப் பயப்படுத்த வேண்டியதற்கான ஏரணமான (Logical) கரணியத்தை (Rational) சொல்லுவதற்கு இயலாமல், தடுமாறும் அவர்களை – நா தளுதளுக்கும் அவர்களை – குரல் கம்மிப்போகும் அவர்களை – திருட்டு முழி முழிக்கும் அவர்களைப் பார்க்கும்போது நம்மால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.
இப்படிப் பட்டவர்களுக்காக நம் மலேசியப் பாவலர் ஒருவர் எழுதியுள்ள ஒரு பாடலின் சில வரிகளை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.
பூச்சியந்தான் எல்லாருக்கும் புரியுமாம் – அதைப்
பூந்தமிழில் சுழியமென்றால் சிலருக்குள்ளே எரியுமாம்!
பூச்சியத்தைச் சுழியமென்ற *வானொலி – சில
பூச்சியங்கள் பேச்சைக் கேட்டு மாற்றியதாம் மறுபடி!
தமிழனென்றால் பிறமொழிதான் பிடிக்குமோ – பிள்ளை
தாயைவிட்டு வேறொருத்தி தாள்பணிந்து கிடக்குமோ?
அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட
அடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ!
பிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல
பெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான்!
குழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக்
குப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான்!
வடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர்
வந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது!
விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ! – இவன்
வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ!
-கவிஞர் செ.சீனி நைனா முகம்மது
(*) முன்பு வானொலியில் “சுழியம்” தடைசெய்யப்பட்டபோது எழுதியது.