
பாரிட் புந்தார், மார்சு 16, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ்த்தாயை மீட்பதும் காப்பதும்தான் நமது முதல் வேலை.எழுத்துச் சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல நமது வேலை என்று மலேசியா வந்துள்ள தமிழகத் தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் புலவர் மதுரை இரா.இளங்குமரனார் கூறினார்.
தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அப்படி தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்தால் தமிழ்மொழி சிதைந்து சின்னாபின்னப்பட்டுப் போகும் என்று புலவர் பெருமகனார் நினைவுறுத்தினார்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எனதுத் தாயை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறேன்.அவளை சோதனை செய்த அந்த மருத்துவர் எனது தாயின் உயிரை மீட்பதில் கவனம் செலுத்தாமல்.என் தாயின் கை வலைந்திருக்கிறது அதை சரி செய்ய வேண்டும் என்கிறார்.
என்தாயின் உயிரை முதலில் மீட்டுத்தாருங்கள்.அவள் கையை சரி செய்வதா காலை சரி செய்வதா என்பது பற்றி பின்னர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அந்த மருத்துவருக்கு நான் பதிலளிக்கிறேன்.நான் மட்டுமல்ல தாயின் மீது பற்று கொண்ட எந்த மகனும் அதைத்தான் செய்வான்.
அப்படித்தான் இன்று தமிழ்த்தாய் உயிர் மீட்புக்கும் வாழ்வுக்கும் செய்ய வேண்டிய பற்பல பணிகள் அப்படியே செயல் முடங்கிக் கிடக்கும் போது சிலர் தங்களின் தன்னலத்திற்காக எழுத்துச் சீர்மை என்ற பெயரில் தமிழ் எழுத்துக்களை சிதைக்க முற்படுகிறார்கள் என்று புலவர் இளங்குமரனார் எடுத்துரைத்தார்.
இங்கு பேரா மாநில தமிழியல் ஆய்வுக் களம், பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்க, இணை ஏற்பாட்டில் பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற “தமிழரின் எழுச்சியும் வீழ்ச்சியும் ” என்ற தலைப்பிலான பொழிவு நிகழ்ச்சியில் செந்தமிழ் அந்தணர் மேற்கண்ட செய்தியை வலியுறுத்தினார்.
தற்போது தமிழ்நாட்டில் சிலர் தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்ய முனைந் திருக்கிறார்கள். அதன்படி இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளை மாற்றி அமைக்க வேலை செய்கிறார்கள்.
இது தமிழுக்கு எழுச்சியூட்டும் செயலல்ல. மாறாக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் செயலாகும்இந்தச் சீர்த்திருத்தால் தமிழ்மொழி பெரிய மாற்றத்திற்கு உள்ளாகும். நாளடைவில் தமிழ் சிதைந்துபோய் காலத்தால் அழிந்துபோகும் என்று புலவர் இரா.இளங்குமரனார் குறிப்பிட்டார்.
தமிழில் சீர்மை உண்டாகும், தமிழை எளிமையாகவும் விரைவாகவும் கற்கலாம் என்று எழுத்துச் சீர்த்திருத்தம் செய்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதில் சிறிதுகூட உண்மையில்லை. இப்போது இருக்கும் தமிழ் எழுத்து வடிவமே படிப்பதற்கும் எழுதுவதற்கும் எளிதானது.
கருவிலிருககும் குழந்தைக்கே ஆங்கில வழி பள்ளியில் இடம் கிடைக்க முன்பதிவு செய்யும் அளவிற்கு தமிழ்ப் பெற்றோர்களின் மனநிலையை இன்று உருவாகி இருக்கிறது.தமிழ் வழி கல்வி என்பதும்,தமிழ் கற்றால்தான் வேலை என்பதும் பற்றி தமிழ்ப்பெற்றோர்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.
அத்தகைய சூழ்நிலையில் தமிழ்த்தாய் குற்றுயிரும் குலை உயிருமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது சிலர் சீர்மை என்ற பெயரில் இவ்வாண்டு நடைபெறவுள்ள தமிழ் மாநாடு ஒன்றில் பரிந்துரைக்கப் போகும் இது போன்ற திட்டங்கள் தமிழை அழிக்கவும் சிதைக்கவும் மட்டுமே பயன்படும் என்று புலவர் பெருமகனார் எச்சரித்தார்.
அதுமட்டுமல்லாது, இப்போது நடப்பில் இருக்கும் எழுத்துகள் மிகவும் சிறந்த கட்டமைப்பைக் கொண்டது. வடமிருந்து இடப்பக்கமாக எழுதும் அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், சீர்த்திருத்தம் செய்யப்படும் உகர எழுத்து குறியீடுகளை தமிழ் எழுத்து மரபுக்கு மாறாக இடமிருந்து வலமாக எழுத வேண்டிய நிலைமை ஏற்படும். இப்படிப்பட்ட மாற்றங்கள் கண்டிப்பாகத் தமிழைச் சிதைந்த மொழியாக ஆக்கிவிடும்.
வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினர் கட்டிக்காத்த - தமிழருக்குச் சொந்தமான மரபுகள் பல உண்டு. எழுத்து மரபு அதில் ஒன்று. மரபு கெட்டுப்போனால் தமிழ் மொழியும் தமிழ் இனமும் அடையாளம் இழந்துபோகும். மரபு திரிபின் பிறிது பிறிதாகும் என்று தொல்காப்பியம் கூறுவதை நினைவில் நிறுத்து நம்முடைய மரபுகளை அழியவிடாமல் பாதுகாப்பது நம்முடைய கடமையாகும் என்றவர் வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர் தமிழ் எழுத்துகள் குறித்த வரலாற்றுப் பின்னணிகளையும் தமிழ் எழுத்துகளை எழுதும் முறைகளில் இருக்கும் மனவியல் அணுகுமுறைகளையும் எழுத்துகளை எழுதிக்காட்டி விளக்கம் அளித்தார். தமிழில் எ, ஏ, ஒ, ஓ ஆகிய நான்கு எழுத்துகள் வீரமாமுனிவரால் சீர்த்திருத்தம் செய்யப்பெற்றது. அது மிகவும் சிறிய மாற்றம்தான்.
பிறகு, பகுத்தறிவு பகலவன் பெரியார் சில எழுத்துச் சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.அவையும் ஏற்கனவே கல்வெட்டில் இருந்தவைதான்.பின்னர் ஓலைச்சுவடி வந்த போது பெரியார் பரிந்துரைக்கு முந்திய எழுத்துக்கள் இருந்தன.
அச்சுப்பணிகளையும் தட்டச்சுக்களையும் காரணம் காட்டி பெரியார் மீண்டும் பழைய எழுத்துககளையே முன் மொழிந்தார். அதனைத் தமிழறிஞர்கள் எதிர்த்தனர். இருந்தாலும், பிறகு பதின்மூன்று எழுத்துகளை மட்டும் சீர்த்திருத்தம் செய்தார்கள். இது தமிழ் எழுத்து வடிவங்களை மாற்றி அமைத்தாலும் பெரிய பாதகம் ஏற்பட்டு விடவில்லை.
ஆனால், இப்போது சிலர் மேற்கொண்டுள்ள எழுத்துச் சீர்த்திருத்தம் மிகவும் பாதகமானது. தமிழ் எழுத்துகளின் தனித்தன்மை முற்றிலுமாகச் சீரழிந்து போகும். தமிழின் அடையாளம் அற்றுப்போகும். ஆகவே இந்தப் புதிய எழுத்துச் சீர்த்திருத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் இந்தச் சீர்த்திருத்ததைச் செய்ய முயலும் முனைவருக்கு தாம் கைப்பட கடிதம் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த எழுத்துச் சீர்த்திருத்தம் குறித்து தனி நூல் ஒன்றை எழுதி முடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட என்பத்தொரு அகவையை அடைந்துள்ள புலவர் ஐயா இளங்குமரனார் வள்ளுவத்தை வாழ்விக்க வந்த தமிழ்ச்சான்றோராக விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.நூற்றுக்கணக்கான நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்திருப்பவர்.
தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ் வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.
இதே நிகழ்ச்சியில் புலவர் இரா.இளங்குமரானார் முன்னிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு அமைப்புக்களான பேரா தமிழியல் ஆய்வுக் களம்,பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்க பொறுப்பாளர்கள் ஏற்கனவே செய்திருந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் புதிதாக பரிந்துரைக்கப்படவுள்ள தமிழ் எழுத்துச் சீர்திருத்தற்கு கண்டனம் தெரிவித்தனர்.
வந்திருந்த பொது அமைப்புகளின் பொறுப்பாளர்களும் தமிழ்ப் பெருமக்களும் முன்னிலையில் அவை அறிவிக்கப்பட்டு,அனைவரும் ஒன்றிணைந்து இந்த எழுத்துச் சீர்த்திருத்தத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதற்கு அடையாளமாக எழுத்துச் சீர்த்திருத்தத்தால் தமிழுக்கு ஏற்படப்போகும் விளைவுகள் தொடர்பாக சுப.சற்குணன் தொகுத்திருந்த இணையத்தில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று புலவர் இரா.இளங்குமரனாரிடம் தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவர் இர.திருச்செல்வமும் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையனும் ஒப்படைத்தனர்.
தொடர்பான செய்திகள்:-
1.எழுத்துச் சீர்மை தேவைற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்
2. எழுத்துச் சீர்மை: மலேசியத் தமிழர்களின் 4 கோரிக்கை
தொடர்பான செய்திகள்:-
1. செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு! தமிழுக்கு வேட்டு!!
2.செம்ம ஓட்டு; செம்ம ஈட்டு! ராகாவுக்குச் செம்ம பாட்டு!!
சிலர் ஐ. ஔ ஆகிய இரண்டும் தேவையில்லை. ‘அய்’, அவ்’ என்று எழுதலாம் என்கிறார்கள்.
தமிழில் நெட்டெழுத்து ஏழு என்ற இலக்கணத்திற்கு ‘அய்’, அவ்’ ஆகிய இரண்டும் பொருந்துமா? எனச் சிந்தித்துப் பாருங்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஔ ஆகிய ஏழும் ச, ரி, க, ம, ப, த, நி என்பதற்கு ஒத்த ஏழிசை எழுத்துகள். திவாகரன் நிகண்டில் பார்த்தால் இது தெரியும்.
மொழி சம்பந்தப்பட்ட வேலைகளை மொழி அறிஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றவர்கள் வந்து அதில் தலையிடுவது முறையல்ல. இதனைக் குறித்து தந்தை பெரியாரே “இது மொழி அறிஞர்கள் செய்யவேண்டிய வேலை” என்று சொல்லியிருக்கிறார்.
மலேசியாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் பாவாணரே குறிப்பிட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதன்படி முப்பது உலக மொழிகளை இலக்கிய இலக்கண மரபுகளோடு கற்றறிந்தவரும், தமிழ் வரலாறு நூலில் 73 மொழிகளை மேற்கோள் காட்டி எழுதியவருமாகிய பேரறிஞர் பாவாணர் எழுத்து வடிவத்தில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது; வடிவ மாற்றம் பெருந்தவறு! பெருந்தவறு! என்று கண்டித்து இருக்கிறார்.
“மாற்றரும் சிறப்பின் மரபு” என்பது தொல்காப்பியம். மரபை நாம் மாற்றக் கூடாது. தென்னை மரத்தை பனை மரமாக மாற்ற நினைக்கக்கூடாது. பனை மரத்தை புன்னை மரமாக மாற்றக்கூடாது. தென்னை தென்னையாக இருக்கட்டும்; பனை பனையாக இருக்கட்டும்; புன்னை புன்னையாக இருக்கட்டும்.
மூவரி அணில் மாற்றரும் சிறப்பு. கோடு வாழ் குரங்கு மாற்றரும் சிறப்பு. மாற்றினால் என்னவாகும். பிறிது பிறிதாகும். மரபுநிலை மயங்கக் கூறக்கூடாது.
எழுத்துக்கு மரபு உண்டு. மொழிக்கு மரபு உண்டு. மரபுநிலை மயங்கல் கூடாது. அவரவர் மனம்போன போக்கில் மாற்றிக்கொள்வது மொழியாக இருக்காது.
ஒரு காலத்தில் எ, ஒ ஆகிய இரண்டின் மேல் புள்ளி வைத்து எழுதினார்கள். ‘க’ மேல் புள்ளி வைத்தால் ‘க்’ ஆகி அரை மாத்திரையாகக் குறைகிறது. அதுபோல, ‘எ’ மேல் புள்ளி வைத்தால் குறிலாக இருந்தது; ‘ஒ’ மேல் புள்ளி வைத்தால் குறிலாக இருந்தது.
இதனை வீரமாமுனிவர் சிறு மாற்றம் செய்கிறார். மேலே இருந்த புள்ளியை நீக்கிவிட்டு, ‘எ’வின் கீழே சிறு கோடு இழுத்து ‘ஏ’ ஆக்குகிறார். ‘ஒ’வின் கீழே சுழித்து ‘ஓ’ ஆக்குகிறார். அது கொஞ்சம் இயல்பாக இருந்ததாலும் அன்றைய அச்சுக்கலை மேலையரிடம் இருந்த கரணியத்தாலும் இந்த மாற்றம் நடப்புக்கு வந்துவிட்டது. இந்த மாற்றமானது தமிழ் எழுத்து வடிவத்தை பெரிதுமாகச் சிதைக்கவில்லை.
ஆனால், இன்று அச்சு போடுவதற்கும், தட்டச்சு செய்வதற்கும், கணினியில் எழுதுவதற்கும் எந்தத் தடையும் இல்லை. இன்று இந்த அத்தனை தொழில்நுட்பத்திலும் தமிழர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். அப்படியிருக்க ஏன் இந்த எழுத்து மாற்றம்?
காலுக்குத் தக்கபடிதான் மிதியடி இருக்க வேண்டுமே ஒழிய, மிதியடிக்குத் தக்க காலை வெட்ட முடியுமா?
இன்று தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி பேசுபவர்களுக்கு நான் கைப்பட கடிதம் எழுதி இருக்கிறேன். இந்தச் சீர்த்திருத்தம் தேவையில்லை என்பதை அவர்களிடம் வலியுறுத்தி இருக்கிறேன்.
அதுமட்டுமல்லாது, எழுத்துச் சீர்த்திருத்தம் சம்பந்தமாக தனி நூல் ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறேன். விரைவில் அந்த நூல் உங்கள் அனைவருடைய பார்வைக்கும் தருகிறேன். அதில் நிறைய வரலாற்றுச் சான்றுகளோடு எழுத்துச் சீர்மை தேவையில்லை என்பதைக் காட்டியிருக்கிறேன்.
நான் தமிழகம் திரும்பியது இந்தச் சிக்கல் குறித்து அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுவேன். நீங்களும் இங்கிருந்து தக்கனவற்றை முன்னெடுத்துச் செய்ய வேண்டும்.
இவ்வாறு, புலவர் ஐயா தம்முடைய உரைப்பொழிவில் பேசினார்.
தமிழகத்தில் சிலர் இ, ஈ. உ, ஊ வரிசை உயிர்மெய்களைச் சீர்மை செய்வதற்கு மேற்கொண்டிருக்கும் முயற்சியைக் கண்டித்து புலவர் ஐயா முன்னிலையில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:-
1)தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை மலேசியத் தமிழர்கள் நாங்கள் அனைவரும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
2)எழுத்துச் சீர்மை தமிழ்மொழிக்குக் கண்டிப்பாகத் தேவையில்லை என்பதை அறுதியிட்டுத் தெரிவிக்கின்றோம்.
3)எழுத்துச் சீர்மையை முன்னெடுக்கும் குழுவினர் உடனடியாக அதனைக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
4)தமிழக அரசு எந்த ஒரு எழுத்துச் சீர்த்திருத்தத்தையும் ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பிக்கக் கூடாது என தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்களைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
தவிர, எழுத்துச் சீர்மையைக் மறுத்தும் கண்டித்தும் எழுதப்பட்டு இணையக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றினை சுப.நற்குணன் அணியப்படுத்தியிருந்தார். அத்தொகுப்பு புலவர் ஐயாவின் பார்வைக்கும் அடுத்தக் கட்டப் பணிக்கும் பயன்படும் வண்ணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இப்போது தமிழ்நாட்டில் சிலர் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்யப்போவதாக புறப்பட்டு உள்ளனர். அவர்கள் இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளில் சீர்மை தேவை என வலியுறுத்தி வருகிறார்கள்.
உண்மையில் சொல்ல வேண்டுமானால், இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசை மட்டுமல்ல தமிழுக்கு எந்தச் சீர்த்திருத்தமும் தேவையில்லை. தமிழ் எழுத்துகள் மிகவும் செப்பமாக இருக்கின்றன; படிக்கவும் எழுதவும் தட்டச்சவும் கணினியில் பதியவும் எளிமையாக இருக்கின்றன.
“எழுத்தெனப் படுப
அகர முதல னகர இறுவாய்
முப்பஃது என்ப” என்று தொல்காப்பியம் சுட்டும்போது தமிழில் 247 எழுத்துகள் என சொல்லுவது பேதமைத்தனம்.
தமிழ் எழுத்துகளை இப்படி விரித்துக் காட்டி மருட்டுபவர்கள் ஆங்கில ரோமன் எழுத்துகளை உண்மையில் 26உடன் 4ஐ பெருக்கிக்கொள்ள வேண்டும். ரோமன் எழுத்துகளை 26 என்று சுருக்கிக் காட்டிவிட்டு தமிழ் எழுத்துகளை அதிகமாக்கிக் காட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பது சிலருடைய மூளைக் கோளாற்றின் வெளிப்பாடு.
மொழியைப் பரப்புவதற்கும் வளர்ப்பதற்கும் என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அதனைப் பார்க்க வேண்டும். மொழியை ஒழிக்கும் வேலையைப் பார்க்கக் கூடாது.
குழந்தை கருவில் இருக்கும்போதே தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆங்கிலவழிப் பள்ளியில் இலட்சங்களைக் கொடுத்து பதிவு செய்கிறார்கள்.
முதல் வகுப்புக்குப் போகும் குழந்தை எல்லாப் பாடங்களையும் தமிழ் படிக்க முடிகிறதா? தமிழ்க் கல்வி நாட்டில் நன்றாக இருக்கிறதா?
ஒரு பள்ளியில் தவறி விழுந்த குழந்தை “அம்மா” என்று கத்திவிட்டதற்காக கன்னத்தில் அறைகிறார்கள்; தலையைப் பிடித்து சுவரில் முட்டுகிறார்கள்; பள்ளியைச் சுற்றி முழங்காலிட்டு நடக்க வைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தமிழைக் கற்பதற்குரிய வழிகளைக் காணமாட்டாமல், எழுத்தைச் சீர்த்திருத்தி தமிழை வளர்க்கப் போகிறோம் என்பது நகைப்புக்குரியதாகும்.
இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். என்னைப் பெற்ற அம்மா மூச்சுவிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள். என் உயிர்; என் உடல்; என் வாழ்வு; என் வளம்; என் நலம்; என் தெய்வம்; என் மொழி எல்லாமே என் அம்மா. மருத்துவரிடம் காட்டுகிறேன். ஐயா என் அம்மாவைக் காப்பாற்றுங்கள் என்கிறேன். அதற்கு அந்த மருத்துவன் சொல்கிறான் “உன் அம்மாவைக் காப்பாற்றுவதற்கு முன் அவருடைய முதுகில் ஒரு எலும்பு வளைத்திருக்கிறது. அதை முதலில் சரி செய்கிறேன் என்றானாம்.
அப்படித்தான் இருக்கிறது தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் எழுத்தைச் சீர்த்திருத்தம் செய்கிறோம் என்று செயல்படுவது.
இவ்வாறு, புலவர் ஐயா தமது எழுச்சிமிகு உரையில் பேசினார்.
இதே நிகழ்ச்சியில், தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை மறுத்தும் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், எழுத்துச் சீர்மை தேவையில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் இணையத்தில் வெளிவந்த பலருடைய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு (சுப.நற்குணன் தொகுத்தது) ஒன்றினைத் தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவர் இர.திருச்செல்வனார் புலவர் ஐயாவிடம் வழங்கினார்.
புலவர் ஐயாவின் உரை தொடங்குவதற்கு முன்னதாக, ஏற்பாட்டுக்குழுச் செயலர் சுப.நற்குணன் எழுத்துச் சீர்மை தொடர்பான ஒளிக்காட்சித் தொகுப்பினைக் காட்டி விளக்கமளித்தார்.
இந்த அருமை நிகழ்ச்சியை தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் க.முருகையன் வழிநடத்தினார். எழுத்துச் சீர்மையால் தமிழுக்கு ஏற்படப்போகும் சிதைவுகளையும் விளைவுகளையும் தீர்மானமாக வாசித்துக் காட்டினார்.
மலேசியத் தமிழ்நெறிக் கழகப் பொறுப்பாளர்கள் அருள்முனைவனார், மாரியப்பனார், கு.மு.துரையனார் முதலியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், மகளிர், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பி.கு: எழுத்துச் சீர்மை குறித்த திருத்தமிழ் பதிவுகளைப் படிக்க இங்குச் சொடுக்கவும்