Friday, September 01, 2006

தொடர் 7 : அடிமையனாலும் அழியாத தமிழ்

உலக மொழிகளில் தமிழுக்கு ஏற்பட்ட இன்னல்களும் இடர்களும் வேறு எந்தமொழிக்கும் ஏற்படவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு தமிழுக்கு இயற்கையாலும், எதிரிகளாலும், அன்னியர்களாலும் ஏன் சொந்த இனத்துக்காரர்களாலும் காலங்காலமாகத் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

குமரிக்கண்டத்தில் நடந்த மூன்று கடற்கோள்களாலும் அதன் பின்னர் 'கைபர் கணவாய்' வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய ஆரியர்களாலும் பெரும் தாழ்ச்சிநிலைக்குச் சென்றுவிட்ட தமிழுக்கு அடுத்து இன்னும் பல போராட்டங்கள் காத்திருந்தன.

தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருங்கிப் போய்விட்ட நிலையில் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் (1700 ஆண்டுகளுக்கு முன்) களப்பிரர் என்போர் தமிழகத்திற்குள் நுழைந்தனர். பாண்டிய மன்னர்களை முறியடித்து வெற்றிபெற்ற இவர்களின் ஆட்சி கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் இருந்தது. களப்பிரர் காலத்தில்தான் முதன் முதலாக 'சமணம்' என்ற புதிய மதநம்பிக்கை தோன்றியது. பின்னர், புத்த சமயம் சமணத்திற்கு எதிராகத் தோன்றி வளர்ச்சிப்பெற்றது.

களப்பிரருக்குப் பின் தமிழ்மண் பல்லவர்களின் கையில் வீழ்ந்தது. பல்லவ மன்னர்களின் ஆட்சி கி.பி.பத்தாம் நூற்றாண்டு வரை நீடித்தது. பல்லவ ஆட்சியாளர்கள் வடமொழியையே போற்றியுள்ளனர். அடுத்து, சோழப் பேரரசின் ஆதிக்கம் இந்தியாவின் தென் பகுதியில் எழுச்சிப்பெற்றது. பல்லவ ஆட்சியாளர்களை வீழ்த்திவிட்டு சோழ மரபினர் ஆட்சியை அமைத்தனர். இவர்களின் ஆட்சி சுமார் நானூறு ஆண்டுகள் தென் இந்தியாவில் நிலைப்பெற்றிருந்தது.

14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (700 ஆண்டுகளுக்கு முன்), தமிழ் நாட்டிற்கு கெட்ட காலம் உருவாகிவிட்டது எனலாம். மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிகள் நிலைகுலைந்து போகவே, கி.பி.1327இல் தில்லி மன்னன் முகம்மது துக்ளக் தமிழக ஆட்சியைக் கைப்பற்றினான். அதுதொடங்கி, கி.பி.1376ஆம் ஆண்டு வரை தமிழ் நாட்டில் முசுலிம் ஆட்சி நடைபெற்றது
.
இதனைத் தொடர்ந்து, அரிகரன், புக்கன் என்னும் இரண்டு சகோதரர்கள் நிறுவிய விசய நகர அரசு தமிழகத்தில் இருந்த முகம்மதியர் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. கி.பி.1555 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் விசயநகர ஆட்சி நீடித்தது. இதற்கிடையில், நாயக்கர் ஆட்சியும், மாராட்டியர் ஆட்சியும் முகம்மதியர் ஆட்சியும் மாறிமாறி தமிழகத்தில் இக்காலத்தில் இருந்துள்ளன. இப்படியாக, 14, 15, 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் வேற்று மொழி, இனத்தாரின் ஆட்சிகள் நடைபெற்றுள்ளன.

இத்தனையையும் அடுத்து, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர் ஆட்சி தமிழகத்திற்குள் நுழையத் தொடங்கியது. இவ்வாட்சி தமிழகத்திற்கு வெளியே இருந்துகொண்டு செயல்பட்டுத் தமிழ்நாட்டின் நிலங்களைப் பெருமளவில் கைப்பற்றிக்கொண்டது.
ஆக, மேற்குறிப்பிட்ட பல ஆட்சிகளின் கீழ் பல நூற்றாண்டு காலமாக அடிமைபட்டிருந்த தமிழும் தமிழரும் எதிர்நோக்கிய சிக்கல்களும் சிரமங்களும் எண்ணிலடங்காதவை. கடந்த 20 நூற்றாண்டுகளாக பிற ஆட்சியாளருக்கும், பிற இனத்தவருக்கும், பிற மொழியினருக்கும், பிற மதத்தினருக்கும் ஆட்பட்டும் அடிமைப்பட்டும் கிடக்கவேண்டிய பரிதாபத்திற்குரிய நிலைமை தமிழுக்கும் தமிழருக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படியரு நெருக்கடி உலகில் வேறு எந்த மொழிக்கும் எந்த இனத்தார்க்கும் ஏற்பட்டிருக்கவில்லை.

தமிழ் கடந்து வந்துள்ள பாதை மிகவும் கரடு முரடானது; கல்லும் முள்ளும் நிறைந்தது; கண்ணீரும் செந்நீரும் நிறைந்தது. தமிழ் மற்ற மொழிகளைப் போல் அரசுகளாலோ ஆட்சியாளராலோ செல்வச் சீமான்களாலோ வளர்க்கப்பட்ட மொழி கிடையாது. மாறாக, பல நூற்றாண்டுகளாகத் தாங்கமுடியாத கொடுமைகளுக்கு ஆளாகி, எளிய மக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மொழியாகும். தமிழின் இந்த வரலாற்றை அறிந்தால் ஒவ்வொரு தமிழ் உள்ளமும் நிச்சயமாக உருகிப்போகும்; தமிழை உணர்ந்துகொள்ளும்.

No comments:

Blog Widget by LinkWithin