தகவல்
தொழில்நுட்பமும், தகவல்தொடர்பு கருவிகளின் வளர்ச்சியும் கற்பனைக் கதைகளாக
இருந்தவற்றையும் கூட நடைமுறையில் நிகழ்த்திக்காட்டி வருகின்றன.
எண்பதுகளில் (1980) இணையம் உருவாகி வளர்ந்து உலகத்தின் தகவல்கள் அனைத்தும்
மேசை விளிம்பிற்கு– கணினி திரைக்கு வந்தன. பின்னர் கைபேசிகள் அறிமுகமாகி,
அவை மீள்திறக் கைபேசி (Smart Phone) என வளர்ந்த போது உலகமே விரல்நுனியில் வந்து சேர்ந்ததாக
கருதப்பட்டது.
இன்றைய
நவின தொழில்நுட்பமோ தகவல்களை கண் அசைவில் கொண்டுவந்து சேர்த்து விடுமளவு
வளர்ந்திருக்கிறது. ஆனால் அவை என்ன தகவல்களை தேர்வு செய்து கொண்டு வருகிறது
என்பது சிந்தனைக்குரியது.
மனிதர்கள் அணிந்து கொள்ளும் மூக்குக்
கண்ணாடி வடிவிலான சிறு கணினியை கூகிள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த
கூகிள் ’கண்ணாடி’ (Google Glass) நாம் விரும்பும் தகவல்களை நம் கண்களுக்கு
அருகில் ஒளி ஊடுருவும் மெய்நிகர் திரையில் (Virtual Transparent Screen)
காட்டும்.
கூகிள் கண்ணாடி உள்ளடக்கம்
கூகிள்
கிளாசானது தன்னுள்ளே ஒரு செயலி (Processor), புவியிடங்காட்டி (GPS),
கம்பியில்லா வலை இணைப்பு (Wi-Fi), ஒலி வாங்கி, ஒலிபெருக்கி (Mic, Speaker), ஒளிப்படக்கருவி (Camera) இவற்றுடன் ஒரு ஒளியுருக்காட்டி
(Projector) ஆகியவற்றுடன், இவையனைத்தும் செயல்பட மின்கலத்தையும் கொண்டுள்ளது.
நாம்
பார்க்கும் காட்சிகள் கண்களில் கருவிழியின் வழியே ஒளியாக சென்று
விழித்திரையில் (Retina) செய்தியாக மாற்றப்பட்டு மூளையை சென்றடைகிறது.
கூகிள் கிளாசில் இருக்கும் ஒளியுருக்காட்டி நேரடியாக ஒருவரது
விழித்திரைக்குள் மெய்நிகர் ஒளிஊடுருவும் திரை போன்ற ஒன்றில், தகவல்களை
காட்டும். இந்த மெய்நிகர் திரையானது நாம் நேரில் காணும் உண்மைக் காட்சிகளை
பாதிக்காதவாறு அதன் மீது மெல்லிய அடுக்காக தோன்றும்படி
வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் கணினி திரையையோ, கைபேசி திரையையோ
பார்க்கவேண்டியதற்கு பதிலாக நேரடியாக உங்கள் கண்களின் விழித்திரைக்குள்ளேயே
தகவல்களை பார்த்துக்கொள்ளலாம்.
கூகிள்
கிளாசை குரல் கட்டளைகள் மூலம் நேரடியாக கட்டுப்படுத்தலாம். இந்த கண்
கணினியை மீள்திறக் கைபேசியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், தேவையான எந்த
தகவலையும் உடனடியாக கண் விழிகளுக்குள்ளேயே பெறலாம். மேலும் இதிலுள்ள படக்கருவியின் உதவியால் தன் நோக்கு நிலையில் (first person view point)
படங்களை எடுக்கவும், அவற்றை உடனுக்குடன் இணையத்தில் பகிரவும் முடியும்.
கூகிள் கண்ணாடி பாதுகாப்பானதா?
கண்
விழித்திரைக்குள்ளேயே ஒளியை பாய்ச்சுவது கண்களுக்கு தீங்கை
விளைவிப்பதுடன், கண்களின் புலனுணர்வு திறனை பாதிக்கும் என்ற சர்ச்சை
கிளம்பியுள்ளதையடுத்து, கூகிள் தனது கண்ணாடிக் கணினியை குழந்தைகள் மற்றும்
கண்களில் சிக்கல் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை
விடுத்துள்ளது.
இதை
ஆய்வு செய்த வல்லுநர்கள் “கூகிள் கண்ணாடி அற்புதங்களை நிகழ்த்தும். ஆனால்
அது தனிக்கவனம் செலுத்தும் மனிதத் திறனை ஒழிக்கும்” என்று கூறியுள்ளனர்.
நாம் பெறும் ஒவ்வொரு தகவலும் நமது மூளையில் அறிவாக சேமிக்கப்படுவதில்லை.
மாறாக பெறப்படும் தகவல்கள் நடைமுறையில் ஆய்வுசெய்து உறுதி செய்யப்பட்ட
பின்னரே மூளையில் சேமிக்கப்படுகிறது. இந்த வகை கணினிகள் வழியாக அனைத்து
தகவல்களையும் பெற கணினிகளையும், இணையத்தையும் பயன்படுத்துவதால் மூளையின்
சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடக்கூடும் என்று அறிவியலாளர்கள் சிலர்
எச்சரித்துள்ளனர்.
மறுசாரார்
கூகிள் கண்ணாடி போன்ற அணிந்து கொள்ளக்கூடிய கணினிகளால் தேவையான தகவல்களை
உடனுக்குடன் இணையத்தில் பெற முடியும் போது, அதை நமது மூளைக்குள் சேமித்து
வைக்கவேண்டிய அவசியம் குறைகிறது. அதனால் மூளையில் குறிப்பிடத்தகுந்த அளவு
'நியூரான்கள்' விடுவிக்கப்படுகின்றன. அவற்றை மற்ற திறன் மிக்க செயலகளுக்கு
சிந்திப்பதற்குப் பயன்படுத்துவதன் மூலம் மனிதனின் செயல்பாடுகள் புதிய
பரிணாமத்தை எட்டும் என்று வாதிடுகின்றனர்.
கணினியைக் கடந்து, கைபேசியைக் கடந்து, கையடக்கக் கருவிகளைக் கடந்து தொழில்நுட்பம் கண்ணுக்குள்ளேயே சென்று மூளையை இயக்கும் அளவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றம் மாந்தவினத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுசெல்லப் போகின்றதா? அல்லது மனிதப் பண்பாட்டை புரட்டிப்போடப் போகின்றதா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.