
இந்தியாவின் பழமையான மொழிகள் வரிசையில் முதல் இடத்தில் சமஸ்கிருதம் இருந்ததாம். அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ் என்று வந்ததாம். இது உண்மையா என்பதுதான் அந்தத் தோழியார் கேட்ட விவரம். அவருக்கு விளக்கம் சொல்லிவிட்டேன். அதனை இங்கு எழுதலாமே? இந்தப் புளித்துப்போன செய்தியை எழுதவும் வேண்டுமா? என்ற இரு மனதோடு போராடி, சரி எழுதித்தான் வைப்போமே என்று எழுதுகிறேன்.
இந்தியாவைப் பொறுத்த வரையில், பன்னெடுங்காலமாகவே இருக்கும் ஒரு போராட்டம், எது மூத்த மொழி சமஸ்கிருதமா? அல்லது தமிழா? என்பது. இந்திய இறையாண்மை சமஸ்கிருதத்தைக் கொண்டாடும் அளவுக்கு.. சமஸ்கிருதத்தை அங்கீகரிக்கும் அளவுக்கு.. சமஸ்கிருதத்தை மூத்த மொழியென பறைசாற்றும் அளவுக்கு.. சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு என்றுமே தமிழ்மொழியைச் செய்தது கிடையாது.
ஏதோ, இந்திய மொழிகளில் பத்தோடு பதினொன்றாக வைக்க முடியாதா இக்கட்டான சூழ்நிலைகளும் சான்றுகளும் ஆவணங்களும் உறுதியாக இருப்பதால் செம்மொழி தகுதியை ஒரு பெயருக்குக் கொடுத்துவிட்டு வாளாவிருக்கிறது இந்திய இறையாண்மை என்பதுதான் உண்மை என்ற விவரம் எல்லாருக்கும் வெள்ளிடை மலை.
சமஸ்கிருதம் பழையதா? அல்லது அதற்கும் பழையது தமிழா? என்ற ஆராய்ச்சிக்கே அவசியம் இல்லாத அளவுக்கு, தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்கு தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார். யார் இவர்?
பல துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள் தந்திருக்கின்றார். அமெரிக்காவில் உள்ளமாசாச்சுசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃவ் டெக்னாலஜியில் (MIT) பல்லாண்டுகள் பணியாற்றி, பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.மொழியியல் துறையில்தோற்றுவாய் இலக்கணம்(generative grammar) என்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். மொழியியல் துறையில் தலைசிறந்த பேரறிஞர்களில் ஒருவராய் அறியப்படுகின்றார். உள்ளம், அறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத் தொடர்பு கொள்ளும்அறிதிறன் அறிவியல் (cognitive science) என்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.மொழியியல், அறிதிறன் அறிவியல், கணினியியல் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமின்றி, இவர் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உட்பட பன்னாட்டு வெளியுறவுக் கொள்கைகளையும் செயல்பாடுகளை மிக முனைப்புடன் திறனாய்வு செய்து பரவலாக பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றார். கலை, இலக்கியம் பற்றிய தலைப்புகளில் எழுதுகின்ற உயிர் வாழும் அறிஞர்கள் யாவரைக் காட்டிலும் அதிக அளவு எண்ணிக்கையில் மேற்கோள்கள் காட்டப்பட்ட புகழ் மிக்க எழுத்தாளராக இருப்பவர் இவர். அண்மையில் நடத்திய ஆய்வின் படி 1980-1992 ஆம் காலப்பகுதியில், மேற்குல வரலாற்றிலேயே அதிக அளவு மேற்கோள் சுட்டப்பட்ட ஆசிரியராக அல்லது படைப்புகளில் முதல் 10 ஆக அறியப்படுபவர். - விக்கிபீடியா.
நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.
இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இங்கே தருகின்றேன்.
1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.
2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.
3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.
4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு(தெலுங்கு), தா(இலத்தின்)]
5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)
6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.
7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.
8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.
9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.
10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.
11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.
12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல். [எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]
13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]
இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது மொழியியல் அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்.


_300.jpg)












