Showing posts with label சாதனைத் தமிழர். Show all posts
Showing posts with label சாதனைத் தமிழர். Show all posts

Tuesday, September 13, 2016

ஒரே மேடையில் 425 தமிழ் நூல்கள் வெளியீடு - உலக சாதனை



செப்தெம்பர் 13, 2016ஆம் நாள் உலக வரலாற்றில் ஒரு சாதனை நாள். நம் தமிழ்மொழி உலக அளவில் மாபெரும் வரலாற்றை எழுதிய சிறப்புமிக்க ஒரு நாள்.

தமிழ்நாடு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் நூல்கள் உள்பட 425 தமிழ் நூல்கள் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது. இளைஞர், விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ சரவணன், டத்தோ டி. மோகன் மற்றும் மலாயா பல்கலைகழகத் தமிழ்த் துறை பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்பட ஏராளமான மலேசியத் தமிழ் ஆர்வலர்கள் இந்த உலகச் சாதனை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். 


மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தனது 60 ஆண்டு (1956-2016) கல்விப் பணியினை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை மற்றும் சென்னை கலைஞன் பதிப்பகத்துடன் இணைந்து “மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர்” நூலாக்கம் திட்டத்தினைத் தொடங்கியது.

இத்திட்டத்தின்வழி கடந்தாண்டு 350 நூல்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்  ஒரே நேரத்தில் வெளியீடு செய்து சாதனை படைத்தது. அவற்றுள் 10 மலேசிய நூல்களும் அடங்கும். இவ்வாண்டு புதிய சாதனையை ஏற்படுத்தும் வகையில், 425 நூல்கள் வெளியீடு கண்டன. இதில் 80 நூல்கள் மலேசியப் பெருந்தகையோர் பற்றிய ஆவண நூல்களாகும்.

இந்த நூல் வெளியீட்டினை ஒட்டி இன்று கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் குறித்த கட்டுரைகளும் படைக்கப் படுகின்றன.

தமிழ்மொழி, இலக்கியம், தமிழ்க் கல்வி, தமிழர் கலை, பண்பாடு, விளையாட்டு, தமிழர் இனமான உணர்வு, தமிழர் மேன்மை, சமூக பொருளாதார அரசியல் வழி தமிழர் மேம்பாட்டிற்கு உழைத்து மறைந்த தமிழ்ப் பெருந்தகையோரும், தமிழ்ச் சமுதாயம் உய்ய தொடர்ந்து பணியாற்றி வரும் பெருந்தையோரும் “மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர்” நூலாக்கத் திட்டத்தின் கீழ் அடங்குவர்.


மலேசிய மண்ணில் தமிழர்கள் மேன்மையுற உழைத்த, வழிகாட்டிய பெருந்தகையோரை அடையாளங் காணப்பட்டு ஆவணப்படுத்தப் படுத்துவதே நூல் எழுதும் திட்டத்தின் நோக்கமாகும். தற்போதைய தலைமுறையும் அடுத்த தலைமுறையும் இவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்; வாழ்வில் முன்மாதிரியாகவும் கொள்ளவேண்டும். இவர்கள் இல்லாவிடில் மலேசியாவில் தமிழும் தமிழர்களும் வெற்றி பெற்றிருக்க இயலாது என்பதை உலகத்தாருக்கு மலேசியத் தமிழர்களை அடையாளம் காட்டும் கடப்பாடாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது. 

மலேசியப் பெருந்தகையோர் பற்றி ஒரே நேரத்தில் 80 நூல்கள் உருவாக்குவது மிகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொருவரைப் பற்றியும் 100 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. எழுத்தப் படுவோர் குறித்த குறிப்புகளையும் படங்களையும் சேகரித்து சிறுசிறு தலைப்புகளிட்டு எழுதும் பணியில் 80 பேர் ஈடுபட்டனர். 

எழுதப் படுவோரின் பிறப்பு வளர்ப்பு, கல்வி, இலக்கியப் பணி, சமூகப் பணி, தமிழ் மற்றும் தமிழர் சிந்தனை, அவர்கள் முன்னெடுத்த திட்டங்கள், இன்னும் பிற அரிய பணிகளையும் தொகுத்து நூலாக எழுதினர். மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவேண்டிய மிகப்பெரிய பணியினை இவர்கள் செய்துமுடித்துள்ளனர்.

இத்தகு வரலாற்றுச் சிறப்புமிக்க  சாதனைக்குப் பின்னணியில் நமது மலேசியாவைச் சேர்ந்த மலாயாப் பல்கலையின் முனைவர் சு.குமரன் அவர்கள் பெரும்பணி ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்க செய்தி. மலேசியாவில் தமிழ்ச் சார்ந்த பணிகள் ஆற்றிய 80 பெருந்தகையோர் பற்றி ஆவணப்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியும் அதற்காக எடுத்துக்கொண்ட சிரத்தையும் போற்றுதலுக்கு உரியது. அவருடைய இப்பணி மலேசியத் தமிழ்ப் பெரியோர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது; மலேசியாவில் நடைபெற்றுள்ள அருந்தமிழ்ப் பணிகளை உலகத்திற்கு அறியச் செய்துள்ளது எனில் மிகையன்று. அந்தவகையில் காலத்தால் செய்யத்தக்க அரியதோர் பணியை முன்னின்று செய்திருக்கும் முனைவர் சு.குமரன் அவர்களுக்குத் திருத்தமிழ் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், மலேசியாவைச் சேர்ந்த 80 நூலாசிரியர் பெருமக்களையும் மனாதாரப் பாராட்டுவதில் திருத்தமிழ் மகிழ்கிறது. 

மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் நூல் வரிசையில் சில:-






நூல் வெளியீட்டு விழா காட்சிகள் சில:-




@சுப.நற்குணன்

Thursday, September 06, 2012

சிவா ஐயாதுரை: முதன்முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழன்




இன்று உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அவரவர் வீட்டு முகவரி என நினைத்துவிடாதீர்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அதுதான் மின்னஞ்சல்(e-mail) முகவரி. இன்றைய நவின காலத்தில் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் மின்னஞ்சல் கண்டிப்பாகத் தேவை என்று ஆகிவிட்டது.

இந்த மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு ‘தமிழன்’ என அறியும்போது ‘தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா’ என்று நெற்றிப் புருவம் மேலே ஏறுகின்றது! நரம்புகளில் ஏதோ ஓர் உணர்வு முறுக்கேறுகின்றது.

வெள்ளைத் தாளில் தூவலைப்(பேனா)  பிடித்து கடிதம் எழுதிய பாரம்பரிய முறையை மாற்றிப்போட்டு மின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்மடல் எழுதும் புதிய பரிணாமம்தான் இந்த மின்னஞ்சல். ஆனால், இன்றோ அதனுடைய பயன்பாடு பல்வகைப்பட்டதாக மாறிவிட்டது. நவின உலகத்தில் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடியாதோ அப்படி ஆகிவிட்டது இந்த மின்னஞ்சல். இ-மெயில் எனப்படும் மின்னஞ்சல் இல்லாமல் இன்றைய உலகத்தில் வாழ முடியாது என்னும் நிலைமை வந்துவிட்டது.   

ஆகக் கடைசியாக வந்திருக்கும் முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter), கூகிள் + (g+) யூ டியூப் (You Tube) என்று எந்தத் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த மின்னஞ்சல் இல்லாமல் எதுவும் செயல்படாது; எதிலும் நாம் செயல்பட முடியாது.

அந்த அளவுக்கு முகமைத்தன்மை வாய்ந்த மின்னஞ்சலை முதன் முதலாகக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கிய அறிவியலாளர் - தொழில்நுட்பர் வி.ஏ.சிவா ஐயாதுரை என்பவராவார். மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையையும் (copyright) இவர் பெற்றிருக்கிறார். இவர் தமிழ்நாட்டில், தமிழ்க் குடும்பத்தில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய தமிழர். 

இளவயதில் சிவா ஐயாதுரை
தற்பொழுது 49 அகவை நிரம்பிய சிவா ஐயாதுரை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த பொழுது 14 வயது இளைஞராக இருந்தார் என்னும் செய்தியை அறியும்போது நமக்குப் பெரும் வியப்பும் பெருமிதமும் ஏற்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது அதனை அமெரிக்க அரசாங்கம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ இவருக்கு உரிய உறுதிபாட்டையும் காப்புரிமையையும் கொடுக்கவில்லை. இதனால், மின்னஞ்சலுக்குப் பலரும் சொந்தம் கொண்டாடினர்.

ஆனாலும், 4 ஆண்டுகள் கழித்து 1982ஆம் ஆண்டு ஆகத்து 30ஆம் நாள் சிவா ஐயாதுரையின் அரிய கண்டுபிடிப்புக்கு உரிய உறுதிப்பாடும் மின்னஞ்சல் காப்புரிமையும் (e-mail copyright)  வழங்கப்பட்டது.
காப்புரிமை ஆவணம்

இ-மெயில் (e-mail) என்ற பெயரை உருவாக்கியவரும் இவர்தான். அதோடு, மின்னஞ்சலின் உள்ளடக்கங்கள் (inbox, outbox, draft), செயல்முறைகள் (reply, forward, attachment, broadcasting), குறிப்பான்கள் (to, from, subject, Cc, Bcc, Date, Body) ஆகிய எல்லாவற்றையும் உருவாக்கியவரும் பெயரிட்டவரும் இவரேதான்.

சிவா ஐயாதுரை தற்பொழுது அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். முன்பு மாணவனாக இருந்தபொழுது தன்னுடைய கண்டுபிடிப்புக்கு சரியான உறுதிப்பாடு கிடைக்காமல் போனதால் மிகவும் மனமுடைந்து போனதன் காரணமாக, தன்னைப்போல் எந்தவொரு மாணவரும் உரிய மதிப்பு கிடைக்காமல் வருத்தமடைய கூடாது என்னும் எண்ணத்தில் இன்னோவேசன் கார்ப்சு (Innovation Corps) என்ற ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந்த நிறுவனம் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும் அவற்றைத் தொழில்படுத்தவும் உதவும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நோவார்க்கு நகர உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு இலக்கம் அமெரிக்க டாலர் (USD100,000) பரிசுத் தொகையை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க நாளிகை செய்தி - 30.10.1980

சிவா ஐயாத்துரையின் கண்டுபிடிப்பு இன்று உலகத்தையே கட்டிப்போட்டுத் தன் வயப்படுத்தி இருக்கிறது. தமிழனால் முடியும்! தமிழன் சாதிக்கப் பிறந்தவன்! என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் சாதனைத் தமிழன் சிவா ஐயாதுரை.

சிவா ஐயாதுரை பேசுகிறார்:-

 

சிவா ஐயாதுரை பற்றி மேலும் அறிய பின்வரும் தொடுப்புகளைச் சொடுக்கவும்.




@சுப.நற்குணன், திருத்தமிழ்


Wednesday, August 15, 2012

பூப்பந்து வாகையர் 'பஞ்ச்' குணாளன் இயற்கை எய்தினார்

மலேசிய நாட்டின் பூப்பந்து விளையாட்டு வாகையர்,  'பஞ்ச்' (Punch) என்ற சிறப்பு அடைமொழிக்குச்  சொந்தக்காரர் 'பஞ்ச்' குணாளன் இன்று (15.08.2012) இயற்கை எய்தினார். 1960 - 70களில் பூப்பந்து விளையாட்டுத் துறையில் உலக அளவில் மலேசியாவின்   புகழை உயர்த்திய அவர் புற்றுநோயின் காரணமாக த் தமது 68-ஆவது அகவையில் காலமானார்.

'பஞ்ச்' குணாளன் பூப்பந்து துறையில் மிகவும் புகழ்பெற்ற வீரராக விளங்கினார். பூப்பந்து ஆட்டத்தில் ஒற்றையர் பிரிவிலும், இங் பூன் பீ என்பவருடன் இணைந்து ஆடிய இரட்டையர் பிரிவிலும் இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து உள்நாட்டு மக்களின் கவனத்தையும் பன்னாட்டு மக்களின் பார்வையையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1960ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடந்த ஒரு பூப்பந்து போட்டியில் முதன் முதலாக வாகையர் பட்டத்தை வென்று பூப்பந்து துறையில் பெயர் பதித்தார். பின்னர் 1962இல் கோலாலம்பூரில் நடந்த ஆசிய இளைஞர் பூப்பந்து போட்டியில் வென்றதன் மூலமாக நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரத் தொடங்கினார். 

பத்தாண்டுகள் கழித்து 1970ஆம் ஆண்டு எடின்பர்க்கு மாநகரில் நடந்த காமன்வெல்த்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். அதே ஆண்டில் பாங்காக்கில் நடந்த ஆசியப் போட்டியில் தங்கம் வென்றார். பின்னர் அடுத்த ஆண்டிலேயே (1971) 'தோமசு கிண்ணப்' போட்டியில் இரட்டையர் பிரிவில் வாகையர் பட்டத்தை வென்று சாதித்தார். 1974இல்  நியுசிலாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த்து போட்டியில் தனியாள் பிரிவில் தங்கமும் இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வெற்றிகொண்டு தமது திறனைப் பறைசாற்றினார்.

பூப்பந்து விளையாட்டுத் துறையில் இவருடைய  சாதனைகளுக்கு மதிப்பளித்து 1969, 1974 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மலேசிய அரசாங்கம் இவருக்குத் தேசிய சாதனையாளர் விருதளித்து சிறப்பு செய்தது. 

பூப்பந்து ஆடுவதிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இவர் தம்முடைய பட்டறிவையும் விளையாட்டு நுணுக்கங்களையும் இளம் விளையாட்டாளர்களுக்குப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். தேசிய பயிற்றுனாராகப் பணியாற்றி 1992ஆம் ஆண்டில் 'தோமசு கிண்ணத்தைக்' கைப்பற்றும் அளவுக்கு நாட்டின் பூப்பந்து குழுவினரை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

நமது நாட்டின் புகழ்பெற்ற பூப்பந்து வீரர்களான இரசிட் சிடேக், இரசிவ் சிடேக், பூ கொக் கியாங் போன்றோர் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியப் பூப்பந்து சம்மேளனத்தின் (Asian Badminton Confederation) செயலாளராகவும், அனைத்துலகப் பூப்பந்து பேரவையின் (International Badminton Federation) தலைவராகவும் பொறுப்பேற்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதேபோல, மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவராக 1985 முதல் 1997 வரை பணியாற்றியுள்ளார்.

1998ஆம் ஆண்டில் காமன்வெல்த்துப் போட்டிக்கான விளையாட்டு தீபத்தை, பங்கீங்காம் அரன்மனையில் இங்கிலாந்து பேரரிசியார் எலிசபெத்திடமிருந்து பெற்றுகொள்ளும் மிக உயரிய தகுதிபாட்டை இவர் பெற்றிருக்கிறார் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். 'பஞ்ச்' குணாளனின் பங்களிப்பைப் பெருமைபடுத்தும் வகையில் மலேசிய அரசாங்கம் இவருக்கு 'டத்தோ' எனப்படும் உயரிய விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பூப்பந்து போட்டியில் விரைந்து தாக்குவதில் (Smash) மிக வல்லவராக விளங்கிய காரணத்தினால் இவருக்கு 'பஞ்ச்' (Punch) என்ற அடைமொழி பெயருடன் ஒட்டிக்கொண்டது. இஃது அவருக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

திருமதி.விஜயகுமாரி என்பாரை வாழ்க்கைத் துணைவியாகவும், ரோசன் என்னும் பெயரில் ஒரே மகனையும் பெற்று மிகச் சிறந்த வாகையராகவும் மிக நல்ல மனிதராகவும் வாழ்ந்து, இறைவன் திருவடி சேர்ந்துவிட்ட மதிப்புமிகு டத்டோ பஞ்ச் குணாளன் அவர்களின் ஆதன் அமைதிபெற எல்லாம் வல்ல இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Friday, July 13, 2012

தமிழ்க்கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் மறைவு

கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோ பீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின்  நிறுவனரும், கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினி நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.

 தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப் படுத்திய இவர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக 500க்கும் மேற்பட்ட இலவச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

முதல் தமிழ் இணைய இதழ் தொடங்கியவர்

அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்துவிதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.  

தமிழ்நாட்டில் இணைய இதழ்கள் குறித்த அறிமுகமில்லாத நிலையில், 31-01-1997 இல் தொடங்கப்பட்ட தமிழ் சினிமா இதழுக்கு அச்சிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் அதிக அளவு விளம்பரம் செய்யப்பட்டது. தமிழ் இணைய இதழ்களில் முதன் முதலாக அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட இதழ் தமிழ் சினிமா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் தமிழ் மரபு அறக் கட்டளையின் செயலாளராகவும் இருந்துவந்த இவர் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சில குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பெற்ற விருதுகளும் பாராட்டுகளும்
 
‘தமிழும் கணிப்பொறியும்’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு - 2004. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது 2007.

ஸ்ரீராம் நிறுவனத்தின் ‘பாரதி இலக்கியச் செல்வர் விருது’, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் ‘பெரியார் விருது’.

குடும்பம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்த இவர் பெற்றோர் : மார்சீலீன் பர்னாந்து, ராசாத்தி பர்னாந்து. வாழ்க்கைத் துணைவி : ஸ்டெல்லா. பிள்ளைகள் : அமுதன் (மகன்), அமுதினி (மகள்).

அரும்பெறல் தமிழ்க் கணிஞராக நற்பணிகள் ஆற்றி இன்று நம்மைவிட்டு மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்ட மா.ஆண்டோபீட்டர் அவர்களின் ஆதன் அமைதிபெற இறைமைத் திருவருளை வேண்டுவோம்.

மலேசியத் தமிழ்க் கணினி ஆர்வலர்கள் சார்பில் அன்னாரின் அன்புக் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்களை தெரிவிக்க்கின்றோம்.


@சுப.நற்குணன், திருத்தமிழ்.



Tuesday, June 05, 2012

2012 உலக சதுரங்க வீரர் - ஒரு தமிழன்!

இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் உலக சதுரங்க வாகையர் (சாம்பியன்) பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த புதனன்று (30.05.2012) மாசுகோவில் முடிவடைந்த இப்போட்டியில் 'டை பிரேக்கர்' முறையில் இசுரேலின் போரிசு கெல்ஃபாண்டை 2.5-1.5 என்கிற கணக்கில் வென்றார்

உலகப் பட்டத்தை முடிவுசெய்ய நடைபெற்ற 12 போட்டிகள் மாசுகோவின் இட்ரெட்யகோவ் அரங்கில் இருவருக்கும் இடையில் நடந்த போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், யார் உலகப் பட்டத்தை வெல்வார் என்பது 'டை பிரேக்கர்' முறையில் தீர்மானிக்கப்பட்டது.

மிக விரைவாக குறிப்பிட்ட நேரத்துக்குள் காய்களை நகர்த்தும் நான்கு 'டை-பிரேக்கர்' போட்டிகளின் இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் வெற்றி பெற்றதன் மூலம் உலக சதுரங்க வாகையர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இதர மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன.

சென்னையில் பிறந்த ஒரு தமிழரான விசுவநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக உலக சதுரங்கப் பட்டத்தை வென்றுள்ளார். அதிலும் குறிப்பாக நான்கு முறை தொடர்ச்சியாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நான்கு ஆட்டங்களை கொண்ட 'டை பிரேக்கரின்' முதல் ஆட்டத்தில் 33 நகர்வுகள் இடம்பெற்ற பிறகு இருவரும் அந்த ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர்.

அடுத்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மொத்தமாக 77 நகர்வுகள் இடம்பெற்றன. இதில் ஆனந்த் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். அதன் பிறகு இடம்பெற்ற மற்ற இரண்டு ஆட்டங்களும் சமநிலையில் முடிவடைந்த காரணத்தால் ஆனந்த் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.

விசுவநாதன் முதல் முறையாக 2000ஆம் ஆண்டு உலக சதுரங்க வாகையர் பட்டத்தை வென்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக 2007, 2008, 2010 ஆகிய ஆண்டுகளிலும் இந்தப் பட்டத்தை வென்றிருந்தார்.

அடுத்த உலக சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டி 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

விசுவநாதன் ஆனந்த் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்குச் சொடுக்கவும்.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Wednesday, November 23, 2011

மதுரை இளங்குமரனார் மலேசியா வருகை



#தம்முடைய ஓருடலில் தமிழையும் திருக்குறளையும் ஈருயிராகத் தாங்கி வையத்துள் வாழ்வாங்கு வாழும் தமிழ்ப் பெரியார்..

#திருக்குறள் தவச்சாலை நிறுவி வள்ளுவர் காட்டிய வழியே வையக வழி எனத் தமிழ் வாழ்வியலைப் போற்றிப் பரப்பும் பேரறிஞர்..

#தமிழைத் தமிழாக மீட்கவும் காக்கவும் வாழ்நாளையே ஒப்புக்கொடுத்து, இதுவரை 390க்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதியிருக்கும் ஒப்பற்ற தமிழறிஞர்..

#தமிழியல் கரணங்கள்(சடங்கு) வழியாகவும் தெய்வத் திருமறையாம் திருக்குறளின் சான்றாகவும் இதுவரை 4000க்கும் மேற்பட்ட தமிழ்த்திருமணங்களை நடத்தி வைத்த தமிழ் அந்தணர்..

#ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகிய குண்டலகேசியை மீட்டெழுதி உயிர்கொடுத்த அரும்பெறல் சான்றாளர்..

#அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் 52 கூட்டமைப்பின் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட தமிழ்க்கடல்..

செந்தமிழ் அந்தணர் ஐயா மதுரை இளங்குமரனார் மலேசியா வந்துள்ளார். ஐயா அவர்களின் தாள்பணிந்து வணங்கி மலேசியத் தமிழுணர்வாளர்கள் சார்பில் வருக வருகவென வரவேற்பு மொழிகின்றேன்.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய ஐயா இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பள்ளிக்கூடமே இல்லாத தம்முடைய சொந்த ஊரான வாழவந்தான் புரத்தில் தாமே சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவியவர். நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார்.

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம், புறத்திரட்டு, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும்.

திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட புலவர் ஐயா இளங்குமர னார் வாழும் வள்ளுவராகவே விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.

எஞ்சியநாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.

புலவர் ஐயா அவர்கள் தற்போது நமது மலேசியாவுக்கு வந்திருக்கிறார். நாடு முழுவதும் சுற்றுச்செலவு மேற்கொண்டு வருகிறார். அடுத்து வரும் இரண்டு வாரக் காலத்திற்கு நாடு முழுவதும் அவருடைய பொழிவுரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஐயா அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியை தங்கள் ஊர்களில் ஏற்பாடு செய்ய விரும்பும் தமிழன்பர்கள் கீழ்க்காணும் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தமிழ்த்திரு அருள்முனைவர்     : 017-3314541
தமிழ்த்திரு மாரியப்பனார்      : 012-3662286


தமிழ்க்கடல் ஐயா மதுரை இரா.இளங்குமரனாரின் மலையகப் பயணம் எல்லாவகையிலும் வெற்றிகரமாக அமைந்திட வேண்டும். இப்பயணத்தின் வழியாக மலேசியத் தமிழர்கள் புது நம்பிக்கையும் எழுச்சியும் பெறல் வேண்டும்.

புலவர் ஐயா, நிலையான நலத்துடனும் நீடித்த வாழ்நாளுடனும் இன்றுபோல என்றும் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் வலுவும் வளமும் உட்டிட எல்லாம் வல்ல இயற்கைச் செம்பொருளாம் இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!

@சுப.நற்குணன், மலேசியா.


Thursday, November 17, 2011

மலேசியத் தமிழறிஞர் மு.மணிவெள்ளையனார் காலமானார்

மலேசியாவின் தமிழறிஞர்.. தமிழ் இலக்கியக் கழகத் தலைவர்.. தமிழியல் பட்டயக் கல்வியை மலேசியாவில் அறிமுகப்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழியல் கல்விப் பட்டதாரிகளை உருவாக்கியவர்.. தமிழ்ப்புனல் ஐயா மு.மணிவெள்ளையனார் (M.Lit) அவர்கள், 16.11.2011இல் இயற்கை எய்தினார். 
 
  • மலேசியாவில் தமிழைத் தமிழாகச் செழிக்கச் செய்த அறிஞர்களுள் ஒருவர். 
    விளம்பரமே இல்லாமல் அமைதியாகத் தமிழுக்குப் பெரும் பணி ஆற்றிய பெருந்தகை.  
    திருக்குறள் நெறியில் வாழ்ந்து, இளையோர் மனங்களில் குறளியச் சிந்தனைகளை விதைத்து அரும்பணி ஆற்றியவர். 
    தமிழியத் திருமணங்களை நடத்தி தமிழியக் குடும்பங்களை உருவாக்கிய தமிழ்த் தொண்டர்.
    தமிழில் பிறமொழி கலப்பதை எதிர்த்து, தமிழ் தூய்மையாக இருக்க காலமெல்லாம் பாடாற்றிய கொள்கை மறவர்.
    தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் புலமை கொண்ட நல்லறிஞர்; நற்றமிழர்!
    தமிழ் ஆசிரியர்களையும், இல்லத்தரசிகளையும், பணி ஓய்வு பெற்றவர்களையும் தமிழியல் பட்டக் கல்வி பயிலச் செய்து பட்டதாரிகளாக்கி பெருமைபடச் செய்த பண்பாளர்; நற்றமிழ்ச் சிந்தனையாளர்.     
     அன்னாரின் மறைவு நற்றமிழர்க்குப் பெரும் இழப்பாகும். அன்னாரின் ஆதன் அமைதி பெற இறைமையை இறைஞ்சுவோம்!
    @சுப.நற்குணன்
Blog Widget by LinkWithin