Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Tuesday, October 11, 2016

மலேசியாவில் வேண்டும் தமிழ் மரபுத் திங்கள்


மலேசியாவில் தமிழ்மொழி உணர்வையும் ஈடுபாட்டையும் அதிகப்படுத்தும் நோக்கத்தில் 'தமிழ் மரபுத் திங்கள்' கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்த  வேண்டும் எனச் சமூக நட்பு ஊடகங்களில் செய்திகள் மிகப் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. தலைவர்களும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் இதனை அரசாங்கத்திடம் முன்மொழிய வேண்டும் என நட்பூடகங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது.

கனடா நாட்டில் அடுத்த ஆண்டு தொடங்கி சனவரி மாதம் 'தமிழ் மரபுத் திங்கள்' கொண்டாடப்பட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கனடாவின் நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர் திரு.கேரி ஆனந்தசங்கரி இந்தத் தீர்மானம் குறித்து அறிவித்தார். உலகம் முழுக்க வாழும் தமிழர்களை இந்த அறிவிப்பு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவிற்கு முன்பாகவே  கடந்த 10 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்பிரல் மாதம் தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், கலந்துரையாடல், இசை நிகழ்ச்சி, மாநாடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன்வழி தமிழ்மொழி உணர்வையும் எழுச்சியையும் சிங்கப்பூரில் ஏற்படுத்த முடிகிறது.

சிங்கப்பூரில் மோகன் ராசு
இதேபோல் மலேசியாவிலும் தமிழ் மரபுத் திங்கள் ஒரு மாத காலத்திற்குக் கொண்டாடப்பட வேண்டும் என்பது மலேசியத் தமிழர்களின் ஆவலாக உருவெடுத்துள்ளது.

இதனை அரசாங்கமே முன்னின்று நடத்துவதற்குரிய வாய்ப்புகள் உண்டா என ஆராய்ந்து செயல்படுத்த முயற்சிகள் எடுக்கலாம். இல்லையேல், தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் அமைப்புகளும் பொதுக்குழு ஒன்றனை அமைத்து தன்னார்வ அடிப்படையில் செயல்படக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராயலாம்.

இதுபற்றி முகநூலில் பகிரப்பட்ட சில பகிர்வுகளை இங்கே தருகின்றேன்..

மன்னர் மன்னன் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்:-
முரசு மென்பொருள் நிறுவனர்; கணிமை வல்லுநர் முத்து நெடுமாறன்
மலேசியத் தமிழ் அறவாரிய உறுப்பினர், ஆசிரியர் சரவணன்
சிங்கப்பூரைச் சேர்ந்த நித்திஷ்
புதுக்கவிஞர், ஆசிரியர் ந.பச்சைபாலன், ஆசிரியர் இரமணி உள்பட முகநூல் அன்பர்கள்
மலேசியாவில் 200 ஆண்டுத் தமிழ்க்கல்விக் கொண்டாட்டம் நடைபெறும் இந்தத் தருணத்தில் அதன் நினைவாக இனி வரும் ஆண்டுகளில் தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடலாம். அதற்குரிய முன்னெடுப்புகளை நம் தலைவர்களும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் ஆவன செய்யலாம். மலேசியத் திருநாட்டில் தமிழைத் தொடர்ந்து நிலைபெபெறச் செய்யவும் இளையோர் மனங்களில் தமிழை வேறூன்றச் செய்யவும் இது ஏதுவாக அமையும். சிந்திப்போமே.!

@சுப.நற்குணன்

Sunday, July 14, 2013

கூகிள் கண்ணாடி - கண்ணுக்குள்ளேயே கணினி

தகவல் தொழில்நுட்பமும், தகவல்தொடர்பு கருவிகளின் வளர்ச்சியும் கற்பனைக் கதைகளாக இருந்தவற்றையும் கூட நடைமுறையில் நிகழ்த்திக்காட்டி வருகின்றன. எண்பதுகளில் (1980) இணையம் உருவாகி வளர்ந்து உலகத்தின் தகவல்கள் அனைத்தும் மேசை விளிம்பிற்கு– கணினி திரைக்கு வந்தன. பின்னர் கைபேசிகள் அறிமுகமாகி, அவை மீள்திறக் கைபேசி (Smart Phone) என வளர்ந்த போது உலகமே விரல்நுனியில் வந்து சேர்ந்ததாக கருதப்பட்டது.
இன்றைய நவின தொழில்நுட்பமோ தகவல்களை கண் அசைவில் கொண்டுவந்து சேர்த்து விடுமளவு வளர்ந்திருக்கிறது. ஆனால் அவை என்ன தகவல்களை தேர்வு செய்து கொண்டு வருகிறது என்பது சிந்தனைக்குரியது. 
மனிதர்கள் அணிந்து கொள்ளும் மூக்குக் கண்ணாடி வடிவிலான சிறு கணினியை கூகிள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த கூகிள் ’கண்ணாடி’ (Google Glass) நாம் விரும்பும் தகவல்களை நம் கண்களுக்கு அருகில் ஒளி ஊடுருவும் மெய்நிகர் திரையில் (Virtual Transparent Screen) காட்டும்.
கூகிள் கண்ணாடி உள்ளடக்கம்
கூகிள் கிளாசானது தன்னுள்ளே ஒரு செயலி (Processor), புவியிடங்காட்டி (GPS), கம்பியில்லா வலை இணைப்பு (Wi-Fi), ஒலி வாங்கி,  ஒலிபெருக்கி (Mic, Speaker), ஒளிப்படக்கருவி (Camera) இவற்றுடன் ஒரு ஒளியுருக்காட்டி (Projector) ஆகியவற்றுடன், இவையனைத்தும் செயல்பட மின்கலத்தையும் கொண்டுள்ளது.
நாம் பார்க்கும் காட்சிகள் கண்களில் கருவிழியின் வழியே ஒளியாக சென்று விழித்திரையில் (Retina) செய்தியாக மாற்றப்பட்டு மூளையை சென்றடைகிறது. கூகிள் கிளாசில் இருக்கும் ஒளியுருக்காட்டி நேரடியாக ஒருவரது விழித்திரைக்குள் மெய்நிகர் ஒளிஊடுருவும் திரை போன்ற ஒன்றில், தகவல்களை காட்டும். இந்த மெய்நிகர் திரையானது நாம் நேரில் காணும் உண்மைக் காட்சிகளை பாதிக்காதவாறு அதன் மீது மெல்லிய அடுக்காக தோன்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் கணினி திரையையோ, கைபேசி திரையையோ பார்க்கவேண்டியதற்கு பதிலாக நேரடியாக உங்கள் கண்களின் விழித்திரைக்குள்ளேயே தகவல்களை பார்த்துக்கொள்ளலாம்.
கூகிள் கிளாசை குரல் கட்டளைகள் மூலம் நேரடியாக கட்டுப்படுத்தலாம். இந்த கண் கணினியை மீள்திறக் கைபேசியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், தேவையான எந்த தகவலையும் உடனடியாக கண் விழிகளுக்குள்ளேயே பெறலாம். மேலும் இதிலுள்ள படக்கருவியின் உதவியால் தன் நோக்கு நிலையில் (first person view point) படங்களை எடுக்கவும், அவற்றை உடனுக்குடன் இணையத்தில் பகிரவும் முடியும்.
கூகிள் கண்ணாடி பாதுகாப்பானதா?
கண் விழித்திரைக்குள்ளேயே ஒளியை பாய்ச்சுவது கண்களுக்கு தீங்கை விளைவிப்பதுடன், கண்களின் புலனுணர்வு திறனை பாதிக்கும் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளதையடுத்து, கூகிள் தனது கண்ணாடிக் கணினியை குழந்தைகள் மற்றும் கண்களில் சிக்கல் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை ஆய்வு செய்த வல்லுநர்கள் “கூகிள் கண்ணாடி அற்புதங்களை நிகழ்த்தும். ஆனால் அது தனிக்கவனம் செலுத்தும் மனிதத் திறனை ஒழிக்கும்” என்று கூறியுள்ளனர். நாம் பெறும் ஒவ்வொரு தகவலும் நமது மூளையில் அறிவாக சேமிக்கப்படுவதில்லை. மாறாக பெறப்படும் தகவல்கள் நடைமுறையில் ஆய்வுசெய்து உறுதி செய்யப்பட்ட பின்னரே மூளையில் சேமிக்கப்படுகிறது. இந்த வகை கணினிகள் வழியாக அனைத்து தகவல்களையும் பெற  கணினிகளையும், இணையத்தையும் பயன்படுத்துவதால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடக்கூடும் என்று அறிவியலாளர்கள் சிலர் எச்சரித்துள்ளனர்.
மறுசாரார் கூகிள் கண்ணாடி போன்ற அணிந்து கொள்ளக்கூடிய கணினிகளால் தேவையான தகவல்களை உடனுக்குடன் இணையத்தில் பெற முடியும் போது, அதை நமது மூளைக்குள் சேமித்து வைக்கவேண்டிய அவசியம் குறைகிறது. அதனால் மூளையில் குறிப்பிடத்தகுந்த அளவு 'நியூரான்கள்' விடுவிக்கப்படுகின்றன. அவற்றை மற்ற திறன் மிக்க செயலகளுக்கு சிந்திப்பதற்குப் பயன்படுத்துவதன் மூலம் மனிதனின் செயல்பாடுகள் புதிய பரிணாமத்தை எட்டும் என்று வாதிடுகின்றனர்.
கூகிள் கண்ணாடியில் செயல்பாட்டைக் காண இங்குச் சொடுக்கவும் 
கூகிள் கண்ணாடியில் செயல்பாட்டைக் உய்த்துணர  இங்குச் சொடுக்கவும்
கணினியைக் கடந்து, கைபேசியைக் கடந்து, கையடக்கக் கருவிகளைக் கடந்து தொழில்நுட்பம் கண்ணுக்குள்ளேயே சென்று மூளையை இயக்கும் அளவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றம் மாந்தவினத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுசெல்லப் போகின்றதா? அல்லது மனிதப் பண்பாட்டை புரட்டிப்போடப் போகின்றதா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி:- வினவு

Friday, December 09, 2011

‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ நூல் வெளியீடு



மலேசிய இதழியல் துறையில் அண்மையக் காலமாக முத்திரைப் பதித்திருக்கின்ற கட்டுரைத் தொடர் ஒன்றனைச் சொல்ல வேண்டுமானால்,  தாராளமாக ஆ.திருவேங்கடம் எழுதிவரும்  ‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ தொடரைச் சொல்லலாம்.

மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் இந்தக் கட்டுரைத் தொடர் ஓராண்டையும் தாண்டி வெற்றிகரமாக வந்துகொண்டிருக்கிறது.

இதனைவிட பெரிய வெற்றி என்னவெனில், தமிழ் நாளிதழ் வரலாற்றிலேயே ஆய்வின் அடிப்படையிலும், புள்ளி விவரத்தின் அடிப்படையிலும், துல்லியமான தரவுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்ட மிகச் சிறப்பான ஆய்வுத் தொடர் என இந்தக் கட்டுரைக்குப் புகழாரம் சூட்டலாம்.

மக்களிடையே சிந்தனை மாற்றம் ஏற்படவும், அறிவார்ந்த முறையில் ஆராய்ந்து பார்க்கவும் மிகச் சிறந்த களமாக இந்தக் கட்டுரைத் தொடர் அமைந்து வருகின்றது.

மலேசிய தமிழ்ச் சமூகம் தொடர்பான அரசியல், பொருளியல், கல்வி, அடிப்படை உரிமை, தமிழ்ப்பள்ளி, பண்பாடு, சமயம், தொழில்நுட்பம் எனப் பலதரப்பட்ட கோணங்களில் இந்தக் கட்டுரை பல உண்மைகளைச் சான்றுகளோடு வெளிப்படுத்திக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று துணிந்து சொல்லலாம்.

இந்த அருமையான கட்டுரைத் தொடரைப் பல்வேறு சிரமங்களுக்கு இடையில், தன்னார்வ அடிப்படையில் அரும்பாடுபட்டு எழுதிவருபவர் ஆ.திருவேங்கடம். ஒவ்வொரு தொடரையும் எழுதுவதற்கு அவர் என்னவெல்லாம் சிரமப்பட்டிருப்பார்; எப்படியெல்லாம் மெனக்கெட்டிருப்பார் என்பதை இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசித்துவரும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ தொடர் வெறுமனே ஓர் எழுத்துப் படைப்பாக இல்லாமல், சமுதாயத்தின் சிக்கல்களை முன்னெடுத்து அதற்கான சிந்தனைக் களத்தையும் தீர்வுக்கான வழிதடத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சான்றுக்கு, பினாங்கு கம்போங் புவா பாலா சிக்கல், எசுபிஎம் தேர்வு 10+2 பாடச் சிக்கல், பள்ளி மேலாளர் வாரிய அமைப்பு, தமிழ்க்கல்விச் சிக்கல், கல்விக் கடனுதவி வாய்ப்புகள் முதலான அடிப்படையான சிக்கல்களை இந்தத் தொடரில் விரிவாக எழுதி அரும்பணி செய்திருக்கிறார் கட்டுரையாசிரியர் ஆ.திருவேங்கடம்.

பெரும்பாலும் இவருடைய கட்டுரையைப் படித்துவிட்டு பல முறை தொலைப்பேசியுள்ளேன். மணிக்கணக்கில் விவாதம் நடத்தியுள்ளேன். அப்பொழுதெல்லாம் தம்முடைய கருத்துகளையும் வாதங்களையும் அழுத்தமாக முன்வைப்பார். நாம் சொல்லும் கருத்துகளுக்கும் செவிகொடுத்து உள்வாங்கிக்கொள்வார். பிறருடடய கருத்துகளுக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்ளும் சிறந்த பண்பு இருப்பதால்தான், இவருடைய கட்டுரைகள் சமுதாயத்தின் சிந்தனைப் போக்கையே மாற்றியமைக்கும் வலுவோடு மிளிர்கின்றன.  எந்தவித ஆர்ப்பாட்டம் இல்லாமலும் மலிவு விளம்பரத்திற்கு ஆளாகமலும், சமுதாய நலனை மட்டுமே முன்படுத்தி, சரியான வழித்தடத்தில் தம் எழுத்துப் பயணத்தை மேற்கொண்டிருப்பவர் இவர்.

இந்த ‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ தொடர் நூல்வடிவம் பெற்று வெளிவர வேண்டும்; ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இதுவொரு மேற்கோள் ஆவணமாக இடம்பெற வேண்டும் என்பது அவருடைய ஆயிரக்கணக்கான வாசகர்களுடைய கோரிக்கையாகவும் ஏக்கமாகவும் இருந்தது. அதற்குச் செவிசாய்த்து, அதனை நூலாகத் தொகுத்து வெளியிடவிருக்கிறார் ஆ.திருவேங்கடம்.

‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பின்வரும் வகையில் நடைபெற உள்ளது.

 
      நூலின் அடக்க விலை: RM30.00 (முப்பது வெள்ளி மட்டும்)

      தொடர்புக்கு:- ஆ.திருவேங்கடம் 017-6470906

நமது சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் மணியான ஆய்வாளராக விளங்கும் ஆ.திருவேங்கடம் அவர்களின் சமுதாய பற்றுக்கும் தன்னலம் கருதா பணிக்கும் மதிப்பளித்து இந்த நூல் வெளியீட்டு விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென ‘திருத்தமிழ்’ வழியாகக் கேட்டுக்கொள்கிறேன்.

@சுப.நற்குணன், மலேசியா.

 

Thursday, November 03, 2011

ஏழாம் அறிவு:- மலேசியத் தமிழன் பார்வையில்...


*வரலாற்றில் அழிந்த தமிழர்களுக்கும்; அழியாத தமிழுக்கும் சமர்ப்பணமாக வந்திருக்கும் நல்லதொரு படம் ஏழாம் அறிவு.


*வரலாற்றில் திறக்கப்படாத பக்கங்களை இன்றைய திரைப்படச் சுவையுடன் கலந்து பரிமாறப்பட்டிருக்கும் படம் ஏழாம் அறிவு.

*இப்படியொரு படம் வந்திருப்பது திரைப்பட வரலாற்றில் இதுதான் முதன்முறை என்று சொல்லும் அளவுக்குத் தனித்தன்மையோடு வந்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

*தமிழின் பெருமைகளைத் தொட்டுக்காட்டி; தமிழரின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டி தமிழர்களின் மரபணுவைத்(டி.என்.ஏ) தட்டியெழுப்ப முடியுமா? என முயன்று பார்த்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

*தமிழை வைத்து வணிகம் செய்ய முடியும்; தமிழரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு பணம் பண்ண முடியும் என்கிற ‘வணிக நுட்பம்’ வாசமடித்தாலும், தமிழுக்கும் பொருளியல் மதிப்பு உண்டு எனப் பெருமைபடுகிற அளவுக்கு அமைந்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

*வரலாறு தெரியாத இனம் எப்படி அழிந்துபோகும்; போகின்ற ஊரிலும் நாட்டிலும் எப்படியெல்லாம் அடிபடும் - அல்லல்படும் - குண்டுபட்டுச் சாகும் என்பதைச் சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் படம் ஏழாம் அறிவு.

*ஆறாம் அறிவை இழந்துவிட்டு ஐந்தறிவு உயிரிபோல உலகம் முழுவதும் சிதறி சீன்னப்பின்னப்பட்டுக் கிடக்கும் தமிழனுக்கு “இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே..!” என்று எழுச்சியூட்டும் படம் ஏழாம் அறிவு

*“கழுத்தோடு ஒரு ஆயுதத்தை தினம் களத்தினில் சுமக்கிறோம்” என்று தமிழன் வீரத்திற்கு வணக்கம் செய்ய வந்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

இப்படியே இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஏழாம் அறிவு படத்தைப் பற்றி!

தமிழ் உணர்வு, தமிழினப் பற்று என்ற அடிப்படைக் கருவை வைத்துக்கொண்டு கதையைப் பின்னியிருக்கிறார்; அதற்குப் போதிதர்மன் என்னும் தொன்மக் குறியீட்டை எடுத்து திரைக்கதை பண்ணியிருக்கிறார்; திரைப்பட வரலாற்றில் மாறுபட்ட ப(பா)டத்தைக் கொடுத்து பின்னியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசு. இதற்காகவே இவருக்கு மிகப்பெரிய பாராட்டைக் குவிக்கலாம்.



இந்தப் படம் மிகச் சிறந்த படைப்பாக வெளிவந்திருக்கிறது என்பதற்கு அடையாளம் என்ன தெரியுமா? இந்தப் படத்தைப் பற்றி இணையத்தில் எழுதப்பட்ட ‘விமர்சனங்கள்’ தாம்.

படத்தில் பாராட்டத்தக்க விடயங்கள் நிறையவே இருக்கின்றன. மாறுபட்ட கதையமைப்பில்  பார்பவரைக் கவரும் வகையில் படம் இருக்கின்றது. வியக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி, ‘சினிமா மசாலா’ கூட்டணி; அறிவியல், டி.என்.ஏ, ஆராய்ச்சி, நோக்கு வர்மம் போன்ற அதிரடி;  கூடவே தமிழனைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கும் 'நெத்தியடி' ஆகியவைப் பாராட்டும் படியாக இருக்கின்றன. ஆனாலும், இப்படத்தைப் பற்றி இதுவரை வந்த ‘விமர்சனங்கள்’ இவற்றை விரிவாக எடுத்துச் சொல்லிப் பாராட்டவில்லை.



நான் பார்த்தவற்றில் ஓரிரண்டைத் தவிர மற்ற அனைத்து விமர்சனங்களுமே இந்தப் படத்தைப் பற்றி ‘எதிர்மறையாகவே’ எழுதப்பட்டுள்ளன. என்றாலும்கூட, இதற்கான காரணம் மிக எளிமையான ஒன்றுதான். இந்தப் படம் தமிழனின் பெருமை பற்றி பேசுகிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

படத்தில் திரைக்கதை சரியில்லை.. படத்தொகுப்பு கண்ணைக் கட்டுகிறது.. இசை காதைப் புண்ணாக்குகிறது.. பாடல் பாடாய் படுத்துகிறது.. போதிதர்மன் கதை பொய்க்கதை.. படத்தில் பல இடங்களில் ஏரணம்(Logic) இடிக்கிறது.. என்றெல்லாம் பண்ணிப்பண்ணி எழுதியிருக்கிறார்கள். அதுமட்டுமா போதிதர்மன் தமிழனே அல்லன் என்று வரலாற்று ஆய்வுகளை எல்லாம் பக்கம் பக்கமாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.



இந்தப் படத்தைப் பார்த்த வயிற்றெரிச்சலில் பலர் ‘விமர்சன’ வாந்தி எடுத்திருக்கிறார்கள். இப்படத்தைப் பற்றி யாருக்கும் எந்தவித நல்ல எண்ணமும் எதிர்பார்ப்பும் வந்துவிடக் கூடாது என்ற அவர்களின் கயமைத்தனம் நன்றாகவே தெரிகிறது.



போதாக் குறையாக, தமிழை மறந்து திரியும் தமிழர்க்கும்; தமிழை மறைத்து  திரியும் தமிழரல்லாதாருக்கும்; தமிழை விட ஆங்கிலத்தைத் தலையில் வைத்து கொண்டாடும் எல்லாருக்கும் இந்தப் படம் வயிற்றில் புளியைக் கரைக்கும்படியாக; முகத்துக்கு நேராகக் கைநீட்டி கேள்வி கேட்கும்படியாக; வாங்கு வாங்கென்று வாங்கும்படியாக இருக்கிறது என்பது இன்னொரு அப்பட்டமான உண்மை.



“800 ஆண்டுக்கு முன் வந்த ஆங்கிலத்தைவிட 20,000 ஆண்டுக்கு முன்னால் தோன்றிய தமிழ் பெரியது”


“நீயும் கிராமத்தான் தானே. செருமனிக்குப் போயிட்டா நீ பெரிய ஆளா?”


“பக்கத்து நாட்டுல தமிழனை அழிக்க ஒன்பது நாடுகள் சேர்ந்து நடத்திய துரோகம்”


“இந்தியன்னா உலகத்துல மதிக்க மாட்றானுங்க; தமிழன்னா இந்தியாவுல மதிக்க மாட்றானுங்க”


“தமிழ் மருத்துவத்தையும் தமிழர் வரலாற்றையும் உலகம் இன்னும் பார்க்காமல் இருக்கிறது”

“இன்றைய அறிவியல் உலகத்தில் கண்டுபிடிக்கப்படும் பல உண்மைகளைத் தமிழர்கள் முன்பே கண்டுபிடித்து எழுதி வைத்திருக்கிறார்கள்”



இப்படியெல்லாம் வருகின்ற உரையாடல்கள் மேலே சொன்ன ஆட்களுக்குக் குத்தலாகவும் மண்டைக் குடைச்சலாகவும் கண்டிப்பாக இருந்திருக்கும். 

ஆகவேதான், சொல்லி வைத்ததுபோல பலரும் ‘விமர்சனம்’ என்ற பெயரில் உள்குத்து குத்தி இருக்கிறார்கள். தமிழன் வரலாற்றில் இப்படிப்பட்ட இருட்டடிப்புகளும்.. மறைப்புகளும்.. சிதைவுகளும்.. சொதப்பல்களும் வழக்கமான ஒன்றுதான் என்பதற்கு  இந்த விமர்சனங்களே நல்ல சான்று.



எது எப்படி இருந்தாலும், அது அவர்களின் பார்வை.. அவர்களின் உரிமை என்று விட்டுவிட வேண்டும்; மதிக்க வேண்டும்!

தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தால் என்ன? ஏரணப் பிழைகள் இருந்தால் என்ன? படத்தொகுப்பு வெட்டி வெட்டி ஓடினால் என்ன? கதையமைப்பில் / திரைக்கதையில் குறைபாடுகள் இருந்தால் என்ன? திரைப்பட விதிகளோ அல்லது நாட்டுச் சட்டமோ மீறப்பட்டிருந்தாலும் அதற்கென்ன..?

எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு 'தமிழனைச் சொன்ன காரணத்திற்காக.. தமிழன் வரலாற்றைச் சொன்ன காரணத்திற்காக.. இரண்டரை மணி நேரத்திற்குத் ''தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்று மார்தட்ட வைத்த காரணத்திற்காக இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்கலாம்!



ஏழாம் அறிவு திரைப்படம் மாறுபட்ட கதையமைப்பைக் கொண்டிருக்கும் அதே வேளையில், வழக்கமாகத் தமிழ்த் திரைப்படங்களில் வரும் எல்லாமும் இருக்கின்றன. தமிழனைப் பற்றி தமிழ் இளையோர்களுக்குச் சொல்லுவதற்கு இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் இந்த உத்திமுறையைப் பாராட்டலாம்.

நகைச்சுவை:-தனியாக இல்லாமல் படத்தோடு   ஒன்றி வந்திருக்கிறது. பத்துப் பதினைந்து பேரை அடித்து வீழ்த்தும் கதைநாயகன் ‘கேனைத்தனமாக’ கோணங்கி வித்தையெல்லாம் காட்டி சிரிக்க வைக்கும் காட்சிகள் இதில் இல்லாமால் இருப்பது வரவேற்கக்கூடியது.



இசை:- அரிசு செயராசு இசை நன்றாகவே இருக்கிறது. சீன இசையைத் தமிழ்நடை கலந்து கொடுத்திருக்கிறார். இறுதிச் சண்டைக் காட்சியில் ‘மாரியாத்தா’ இசை கவர்கிறது.



பாடல்:- ‘முன் அந்திச் சாரல் நீ’ பாட்டு காதுக்கு இனிமை. ‘இன்னும் என்ன தோழா’ பாடல் தமிழர் நெஞ்சங்களுக்கு வலிமை.



காதல்:- இதற்காகவே பாதிப் படத்தை இழுத்து வீணடிக்காமல் ஒரே காட்சியில் சுருதி ஆசனின் தொடுதிரைக் கைப்பேசியில்  சொல்லி முடிந்துவிடுகிறது.



சூர்யா:- போதிதர்மன் வேடத்தில் மாறுபட்ட தோற்றத்தில் அசத்தியிருக்கிறார். அரவிந்தாக வந்து இயல்பான நடிப்பால் கலக்கியிருக்கிறார். இவருடைய கண்களை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். படம் முடியும்போது சூர்யா நம்முடைய மனத்தில் மறைந்துபோகிறார்; அந்த இடத்தில் போதிதர்மன் வந்து உட்கார்ந்துகொள்கிறார்.



சுருதி ஆசன்:- முதல்படம் என்றாலும் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். நல்ல குரல்வளம். இவரின் மிடுக்கான பேச்சு கவர்கிறது. டி.என்.ஏ. ஆராய்ச்சியாளர்கள் கூட்டத்தில் இவர் பேசும் உரையாடல் அரங்கம் அதிர கைத்தட்டலைப் பெறுகின்றது. ‘முன் அந்திச் சாரல்’ பாடல் காட்சியில் மாலை வெயில் போல அழகாக வருகின்றார்.



டொன் லீ:- அரவிந்தனையும் சுபாவையும் விரட்டி விரட்டிக் கொல்லப் பார்க்கும் பயங்கரம். எதிரில் வரும் எல்லாரையும் ‘நோக்கு வர்மம்’ (Hypnotism) மூலமாக வசியப்படுத்தி நாராசமாகக் கொன்று குவிக்கிறார். இவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் கொலையும்  கொடூரமும் தான்.

கதைக்காகச் எத்தனையோ படங்களைப் பார்த்திருப்போம்!

பாடல்களுக்காகச் சில படங்களைப் பார்த்திருப்போம்!

தொழில்நுட்பத்திற்காகச் சில படங்களைப் பார்த்திருப்போம்!

நகைச்சுவைக்காகவே ஓடிய படங்களைப் பார்த்திருப்போம்! ஏன்?

கவர்ச்சிக்காகவும்.. காம உணர்ச்சிக்காகவும்.. ‘ஆபாசத்திற்காவும்’ கூட சிலர் சில படங்களைப் போய்ப் பார்த்திருப்போம்!!



ஆனால், தமிழுக்காக, தமிழின உணர்வுக்காக, தமிழன் வரலாற்றுக்காக இந்த ‘ஏழாம் அறிவு’ படத்தை ஒரு முறை அல்ல.. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திரையரங்கு சென்று கண்டிப்பாகப் பார்க்கலாம்..! பார்க்க வேண்டும்!



இதுபோன்ற படத்தை வெற்றிப்படைப்பாக ஆக்க வேண்டும். வசூல் சாதனைப் படமாக ஆக்க வேண்டும். இதுவொரு மொக்கைப் படம் என்று தமிழ்நாட்டுக்காரர்கள் முத்திரை குத்தினாலும், நம் மலேசியா போன்ற அயலகத் தமிழர்கள் இதனை வெற்றிப்படமாக மாற்றிக்காட்டி முத்திரைப் பதிக்க வேண்டும். 

வரலாற்றில் தமிழன் எங்கெல்லாம் வீழ்ந்தான்; தமிழன் வரலாறு எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது; தமிழினம் எவ்வாறு நசுக்கப்படுகிறது; தமிழன் மீண்டும் உயிர்த்தெழ என்ன செய்யலாம்; அந்த முயற்சியை எங்கிருந்து எப்படி தொடங்கலாம் என்பதைப் பற்றியெல்லாம் படத்தில் வெற்றிகரமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.


அதுமட்டுமல்ல, படத்தின் ஓர் இடத்தில் ஒற்றை வரி உரையாடலில் மலேசியத் தமிழர்களின் 'நவம்பர் 25' வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் இயக்குநருக்கு நாம் பாராட்டுச் சொல்லத்தான் வேண்டும்.



எனவே, படத்தை இன்னும் பார்க்காதவர்கள் கண்டிப்பாகத் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள். உங்கள் குழந்தைகளையும் அழைத்துச் சென்று படத்தைக் பார்க்கச் செய்யுங்கள்.



தமிழகத்தில் மனிதனாகப் பிறந்து பின்னாளில் சீனா, சப்பான், கொரியா, தாய்லாந்து ஆகிய அயலக மக்களுக்கு மருத்துவம் கற்பித்து - தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுத்து இறுதியில் தெய்வமாகவே ஆகிவிட்ட ‘போதிதர்மன்  ஒரு தமிழன்’ என்று திரையில் சொல்லும்போது தரையில் எல்லாரையும் நிமிர்ந்து உட்கார வைக்கும்; நெற்றிப் புருவங்களை உயர வைக்கும்; நானும் தமிழன்தான் என்று பெருமைபட வைக்கும்...

இந்தப் படத்தைப் பார்க்கும் இரண்டரை மணி நேரமாவது மானமுள்ள தமிழனாக வாழ்ந்துவிட்டு வாருங்கள்!

ஏழாம் அறிவு முன்னோட்டம்:-


-சுப.நற்குணன்

Saturday, March 20, 2010

SPM, STPM மாணவர்களே PRA U, IPTA, BIASISWA விண்ணப்பித்து விட்டீர்களா?

அன்பார்ந்த எசுபிஎம் (SPM) , எசுதிபிஎம்(STPM) மாணவர்களே,

தேர்வு முடிவுகளைக் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா?

இதோ கீழ்க்காணும் சுட்டிகள் (Links) உங்களுக்குப் பயனாக அமையலாம். உங்களின் சிறந்த எதிர்காலத்தை உடனடியாக தேர்வு செய்யுங்கள்.

1.STPM மாணவர்களுக்கான உயர்க்கல்விக் கழக விண்ணப்பம்:-

2.SPM மாணவர்களுக்கான உயர்க்கல்விக் கழக விண்ணப்பம்:-

3.உயர்க்கல்விக் கழக விண்ணப்ங்களுக்கான முக்கிய தேதிகள்:-

4.SPM மாணவர்களுக்கான ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்:-

5.கல்வி அமைச்சு - வெளிநாட்டுப் பல்கலைக்கழக் கூட்டுப் பயிற்சித் திட்டம்:-

6.பட்டத்திற்கு முந்தைய விளையாட்டுப் பள்ளி விண்ணப்பம்:-

7.தெலிகோம் மலேசியா கல்விக் கடனுதவி:-

8.பொதுச் சேவைத் துறை கல்விக் கடனுதவி:-

9.சைம் டார்பி நிறுவனக் கல்விக் கடனுதவி:-



10.தேசியப் பொருளகம் வழங்கும் கல்விக் கடனுதவி:-

11.பெட்ரோனாசு வழங்கும் கல்விக் கடனுதவி:-

12.தெனாகா நேசுனால் வழங்கும் கல்விக் கடனுதவி:-

13.சமூகக் கல்லூரிகளுக்கான விண்ணப்பம்:-

14.வேலை வாய்ப்புகள்:-

Sunday, February 14, 2010

கொங் சீ ப சாய் - இன்று சீனப் புத்தாண்டு


இன்று சீன நண்பர்களைக் காண நேர்ந்தால், “கொங் சீ ப சாய்” (சீனப் புத்தாண்டு நல்வாழ்த்து) என்று சொல்லலாம். அல்லது “வன் சீ ரூ யீ” (எல்லா வேலையும் நன்றாக நடக்கட்டும்) என்று சொல்லலாம். ஆம்! இன்று சீனப் புத்தாண்டு என்பதால், மேலே சொன்ன இரண்டு தொடர்கள் அதிகமாக உச்சரிக்கப்படும். அடுத்த 15 நாட்களுக்கு சீனர்களிடையே இதே பல்லவிதான் ஒலித்துக்கொண்டிருக்கும்.

சீனப் புத்தாண்டு பற்றி நாம் மேலோட்டமாக அறிந்திருக்கிறோம். சீனர்களைப் போலவே நாமும் கொங் சீ ப சாய்” என்று சொல்லுகிறோம். அவர்களைப் போலவே இப்போது நாமும் ‘அங் பாவ்’ (மொய்ப்பணம்) கொடுக்கிறோம், ஆனால், எத்தனை பேர் சீனப் புத்தாண்டின் மெய்ம்மத்தை (தத்துவம்) அறிந்து வைத்திருக்கிறோம்? அவர்களுடைய மரபுகளையும் நம்பிக்கைகளையும் தெரிந்து வைத்திருக்கிறோம்?

இதைப்பற்றி கொஞ்சம் அலசுவோம், வாருங்கள்.

மதிமான நாள்காட்டியின் (Lunar Calender) அடிப்படையில் சீனப் புத்தாண்டு முடிவுசெய்யப்படுகிறது. கமாரி என்று அழைக்கப்படும் இந்தச் சீன நாள்காட்டி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த நாள்காட்டி முறையைச் சீனாவில் அறிமுகப்படுத்தியவர் சீ உவாங் தி (Shi Huang Ti) என்பவர்.


இந்த நாள்காட்டி 5 சுற்றுகள் அடங்கிய மொத்தம் 60 ஆண்டுகளைக் கொண்டது (5X12=60). ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் சுட்டப்பட்டுள்ளது. அவை எலி, மாடு, புலி, முயல், சீன நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி ஆகியன. இந்தப் 12உம் மீண்டும் மீண்டும் சுற்றிவந்துகொண்டே இருக்கும். 5 முறை சுற்றியதும் ஒரு முழுமையை அடையும்.

சீனர்கள் ஏன் 12 விலங்குகளின் பெயர்களை ஆண்டின் பெயராகச் சூட்டினர்? அவர்களுடைய தொன்மத்தின்படி (புராணம்) புத்தர் பூமியைவிட்டுப் பிரியும் வேளையில் எல்லா விலங்குகளையும் சந்திக்க அழைத்தாராம். ஆனால், வந்தது என்னவோ இந்தப் 12 விலங்குகள்தானாம். அதனால், அந்த விலங்குகளுக்கு நன்றிக்கடன் பாராட்டும் வகையில் அவை வந்து சேர்ந்த நேரப்படி வரிசைப்படுத்தி ஒவ்வொரு ஆண்டுக்கும் பெயர் சூட்டப்பட்டதாக ஒரு தொன்மம் உண்டு.


புத்தாண்டு பிறப்பானது தங்களின் ஆற்றலைப் புதுப்பிக்கிறது; நம்பிக்கையை அதிகரிக்கிறது; புதிய எதிர்ப்பார்ப்புகளை உண்டாக்குகிறது என்று சீனர்கள் நம்புகிறார்கள். புத்தாண்டு வாழ்க்கையில் பல ஆக்கமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என எண்ணுகிறார்கள்.


புத்தாண்டு நாளில் சீனர்கள் தங்கள் வீடுகளைத் தூய்மைப்படுத்தி அலங்காரமும் செய்கின்றனர். சிவப்பு நிறத்திலான ‘தங்லுங்’ (காகிதத்தைக் கொண்டு அழகழகான வடிவத்தில் செய்யப்பட்டு உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்படும் ஒருவகை ஒளியணிப் பொருள்) வீட்டின் முன்னால் கட்டப்படும். வீட்டு நுழைவாயிலில் மங்கல வாழ்த்து பொறிக்கப்பட சிவப்புப் பதாகைகள் தொங்கவிடப்படும். இப்படிச் செய்வதால் வீட்டுக்குள் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

அதேவேளையில், துடைப்பம், குப்பைத்தொட்டி, தூரிகை(Brush) போன்ற பொருள்களை எடுத்து மறைத்து வைத்துவிடுகிறார்கள். ஏனெனில், அன்றைய நாளில் வீடுகூட்டுதல், தூய்மைப்படுத்துதல் முதலான வேலைகளைத் தவிர்க்கிறார்கள். இப்படிச் செய்வதால் விட்டில் உள்ள நற்பேறு (Luck) விலகிப்போய்விடும் என்கிறார்கள்.

புத்தாண்டுக்கு முதல்நாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி ‘பெரு விருந்து’ உண்பது முகவும் முக்கியமானதாகும். குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருந்தாலும் கண்டிப்பாக இந்தப் ‘பெரு விருந்தில்’ வந்து கலந்துகொள்கிறார்கள். இதன்வழியாக அவர்களுடைய குடும்ப உறவுகளை வலுப்படுத்திக்கொள்கிறார்கள்.

மறுநாள் புத்தாண்டு என்பதால் காலையிலேயே எழுந்து விடுகிறார்கள். இவ்வாறு அதிகாலையிலேயே எழுவதை ‘சௌ சூய்’ (Shou sui) என்கிறார்கள். சௌ சூயைக் கடைப்பிடிப்பதால் தங்கள் பெற்றோரின் ஆயுள் கூடும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

புத்தாண்டின் முதல் நாளில், எல்லாரும் கண்டிப்பாகப் புத்தாடை அணிய வேண்டும். சொர்க்கத்திலிருக்கும் கடவுளர்களைப் பூமிக்கு அழைத்து, அனைத்து நன்மைகளையும் வேண்டிப் பெறுவதற்காக வழிபாடு செய்கிறார்கள். இந்நாளில் அவர்கள் மரக்கறி (சைவ) உணவையே உண்கின்றனர். வீட்டில் உள்ள பெரியோர்களிடத்தில் மன்னிப்பும் ஆசியும் பெற்றுக்கொள்கின்றனர்.


‘அங் பாவ்’ (Ang Pau) அதாவது மொய்ப்பணம் போன்ற அன்பளிப்பு வழங்குவது சீனப் புத்தாண்டு நாளில் நிகழும் ஒரு வழக்கம். திருமணம் முடித்த பெரியவர்கள் கணவன் மனைவியாக சேர்ந்து சிவப்பு நிற உறைக்குள் பனத்தை வைத்துத் இன்னும் திருமணமாகாதவர்களுக்கு வழங்குவார்கள். அப்படி கொடுக்கப்படும் ‘அங் பாவ்’ பணத்தின் தொகை ஒற்றைப்படை எண்ணில் இருத்தல் கூடாது. அது கெடுதியைக் கொடுக்கும். கண்டிப்பாக இரட்டைப் படை எண்ணாக இருக்க வேண்டும். அதிலும் 4 எண் வரக்கூடாது. சீன மொழியில் நான்கு என்பதன் உச்சரிப்பு ‘சாவு’ என்பதுபோல ஒலிப்பதால் அதனைத் தவிர்க்கிறார்கள். 8 எண்ணில் வரும் தொகையைக் கொடுப்பது நல்ல பேறு (Good Luck) என்று கருதுகிறார்கள்.

பட்டாசு வெடிப்பது சீனப் புத்தாண்டின் குறிப்பிடத்தக்க அங்கமாகும். மனிதர்களைப் பிடித்து விழுங்கும் ‘நியன்’(Nian) என்ற ஓர் அரக்கனை விரட்டவே பட்டாசு வெடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், கெட்ட சத்திகளை விரட்டியடிக்கும் நோக்கத்திலேயே சீனர்கள் பெரிய அளவில் பட்டாசு கொளுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்காகவே, சீனாவில் மணிக்கணக்காக வெடிக்கும் சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றன. படாசு போலவே சீனநாக நடனமும் சிங்க நடனமும் புத்தாண்டின்போது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது. சீன ஆலயங்களிலும் வீடுகளிலும் இந்த நடனங்கள் படைக்கப்படுகின்றன.

புத்தாண்டின் இரண்டாம் நாளில், மருமகளாக வந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று தங்களுடைய பெற்றோருக்கும் தங்கள் குடும்பத்தில் இறந்துபோன முன்னோர்களுக்கும் வணக்கம் செய்கின்றனர்.

அதேபோல் மூன்றாம், நான்காம் நாட்களில் மருமகன்களாக வந்தவர்கள் தங்கள் மாமனார் மாமியாருக்கு மரியாதை செய்கின்றனர்.

ஐந்தாம் நாள் மிகவும் குறிப்பிடத்தக்கது. அன்றுதான் செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் கடவுளை வணங்கும் நாள். அன்று யாரும் எவர் வீட்டுக்கும் செல்லமாட்டார்கள். அப்படி சென்றால் விட்டுக்காரர் விருந்தினர் ஆகிய இருவருக்கும் நல்லதல்ல. ஆகவே, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரவர் வீட்டில் ‘செல்வக் கடவுளை’ வரவேற்பார்கள்.


ஏழாம் நாளில், சீனர்களில் கண்தோனிசு (Kantonis) பிரிவினர் ‘யீ சாங்’ (Yee Sang) எனும் விருந்தில் கலந்துகொள்கின்றனர். பல வண்ணங்களில் இருக்கும் கீரைவகைகளையும் மீன் இறைச்சியையும் சேர்த்து பெரிய தட்டில் வைப்பார்கள். அதைக் (சீனர்கள் உணவு உண்ணப் பயன்படுத்தும்) குச்சிகளைக்கொண்டு கிளறியும் மேலே உயரமாக தூக்கி மீண்டும் தட்டிலேயே கொட்டியும் மகிழ்வார்கள். இப்படி செய்வதால் அவர்களின் வாழ்நாளில் ஓர் ஆண்டு கூடிவிடும் என்கிறார்கள். மேலும், பணமும் செல்வமும் வந்து கொட்டும் என நம்புகிறார்கள்.

ஒன்பதாம் நாள், சீனர்களில் ஒக்கியன் (Hokkien) பிரிவினருக்கு மிகவும் முக்கியமமன நாளாகும். அதற்கு முதல்நாள் (அதாவது எட்டாம் நாள்) இரவு ‘செட் மாமன்னர்’ (King Jed) என்னும் கடவுளரை வணங்குகிறார்கள். இந்த வழிபாட்டின்போது வீட்டு வாசலில் கரும்பைக் கட்டவேண்டும் என்பது கட்டாயமாகும். காரணம், முந்தைய காலத்தில் இன்னொரு சீனப் பிரிவு மக்கள் தாக்குதல் நடத்தியபோது, ஓக்கியன் இன மக்களை பேரழிவிலிருந்து காப்பாற்றியது கரும்புதானாம்.

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் பதினைந்தாம் நாளில் நிறைவு பெறும். இந்நாள் ‘சாப் கோ மே’ (Chap Goh Meh) எனப்படும். அன்று ‘தங்யுவன்’ (Tangyuan) என்ற ஒரு விருந்து நடக்கும். சாப் கோ மே ‘தங்லுங்’ விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இரவில் வீடுகளில் 'தங்லுங்' மெழுகு ஒளியணிகளைத் தொங்க விடுவார்கள். சிறுவர்கள் 'தங்லுங்' ஏந்தி ஊர்வலமாகச் செல்வார்கள். அதுமட்டுமல்லாமல் அன்றுதான் சீனர்களுக்கான அன்பர்கள் நாளும் (Valentine’s Day) கூட என்பது குறிப்பிடத்தக்கது.
"கொங் சீ ப சாய்"

Saturday, February 06, 2010

உங்கள் குரல்: தமிழ் வளர்க்கும் தரமான இதழ்

மலேசியாவில் இன்று வார மாத இதழ்கள் காளான்காய் வளர்ந்திருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை திரைபடக் கவர்ச்சியைப் பரிமாறும் ‘கவுச்சி’ ஏடுகளாகவே உள்ளன.
இன்று வெளிவரும் எந்த இதழுக்கும் மொழி, இலக்கணம், இலக்கியம், மரபு, பண்பாடு பற்றியெல்லாம் கொஞ்சமும் அக்கறை கிடையாது. இன்றைய இதழ்களின் முக்கிய இலக்கே காசு பண்ணுவதுதான் - பணம் சம்பாதிப்பது தான். அதற்காக, மக்கள் விரும்புகிறார்கள் என்று வாசகர் மீது பழியைப் போட்டுவிட்டு கண்ட கழிசடைகளையும் வெளியிடுகிறார்கள்.

இவற்றுக்கு நடுவில், தமிழ்நலச் சிந்தனையோடு – தமிழ்க்காப்பு உணர்வோடு – இலக்கிய நயத்தோடு – இலக்கணச் செப்பத்தோடு – தமிழ்க்கல்வி நலத்தோடு ஓர் இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது.

பெரிய அளவில் எந்த அறிமுகமும் இல்லாமல் ஆனால், தரமிக்க வாசகர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், நல்லாசிரியர்கள், நன்மாணாக்கர் ஆகியோரின் ஆதரவோடு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இவ்விதழ் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

அதுதான் உங்கள் குரல் மாத இதழ்.

மலேசியாவின் மூத்த செய்தியாளரும்; மூத்த மரபுக் கவிஞரும்; இலக்கியப் பொழிவாளரும்; இலக்கண அறிஞரும்; தொல்காப்பிய ஆய்வாளருமாகிய நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள் இவ்விதழின் ஆசிரியராக இருந்து வருகின்றார்.

மலேசியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்மொழி – தமிழ் இலக்கியம், இலக்கணம் – மரபுக் கவிதை ஆகியவற்றை காத்து நிற்கவும் கட்டி எழுப்பவும் ‘உங்கள் குரல்’ அயராது பாடாற்றி வருகின்றது.

யுபிஎசார், பிஎமார், எசுபிஎம், எசுதிபிஎம் ஆகிய முகாமையான தேர்வுகளுக்கான தமிழ்மொழிப் பாட வழிகாட்டிகள், வினாவிடை அணுகுமுறைகள், மாதிரி வினாக்கள், பயிற்சிகள் முதலானவையும் இவ்விதழில் இடம்பெறுகின்றன. தேர்வுக் கலைத்திட்டத்தைப் பின்பற்றி தேர்ந்த ஆசிரியர்களால் எழுதப்படும் இவை ஒவ்வொரு மாதமும் இதழில் இடம்பெறுகின்றன.

இதற்காகவே, நாடு முழுவதும் உள்ள உணர்வுள்ளம் கொண்ட நல்லாசிரியர்கள் இந்த இதழை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி கற்கச் செய்கின்றனர். அவ்வாசிரியர்களும் அவர்களிடம் பயிலும் மாணவர்களுமே இவ்விதழுக்கு முதுகெலும்பாக இருக்கின்றனர்.

தவிர, மரபுக் கவிதை இதுதான் என்று காட்டுவதற்கும்; மரபுக் கவிதையை இப்படித்தான் எழுதவேண்டும் என்று எளிமையாகக் கற்பிப்பதற்கும்; மரபுக் கவிதையின் மாண்பைக் காக்கவும்; மரபுக் கவிதை இலக்கியத்தை வளர்த்தெடுக்கவும் இந்த நாட்டில் பெரும் பாடாற்றும் ஒரே இதழ் இந்த உங்கள் குரல்தான்.

தமிழ் இலக்கணம் தொடர்பாகத் தொல்காப்பியத்தின் அடிப்படையில் மிக எளிமையாகவும் விளக்கமாகவும் இதழாசிரியர் ‘தொல்காப்பிய மரபு’ என்னும் தொடர் கட்டுரைய எழுதி வருகின்றார்.

தமிழ் இலக்கணம் கடினம், கரடு முரடாக இருக்கிறது, பண்டித நடை புரியவில்லை, தமிழ் இலக்கணம் மிகவும் சிக்கலானது முதலான வறட்டு எண்ணங்களை அடித்து நொறுக்கி, இலக்கணத்தைகூட மிகச் சுவையாக, சுகமாக எடுத்துக்கூறுகிறது ‘தொல்காப்பியத் தேன்’ தொடர்.

‘திண்ணைப்பள்ளி’ என்ற பகுதியில் வாசகர்களின் ஐயங்களுக்கு இதழாசிரியர் மிகவும் தெளிவான விளக்கங்களைக் கொடுத்து வருகிறார். மொழியியல், இலக்கணம், இலக்கியம், யாப்பு தொடர்பான வினாக்களுக்கு அளிக்கப்படும் பதில்கள் ஒவ்வொன்றும் அரியவை மட்டுமல்ல; பாதுகாத்து வைத்துப் படிக்கத்தக்கவை எனலாம்.

‘யார்க்கும் எளிதாகும் வெண்பா’ எனும் பகுதி யாப்பிலக்கணம் பயின்றுகொள்வதற்கு அருமையான களம். இப்பகுதியைத் தொடர்ந்து படித்தும் உங்கள் குரலில் எழுதியும் மரபுக் கவிஞர்களாக ஆனவர்கள் நாட்டில் பலர்

இத்தனைக்கும் மேலாக, இதழாசிரியர் கவிஞர் ஐயா எழுதும் முகப்புக் கவிதைக்காகவே ஒவ்வொரு மாதமும் இவ்விதழை வாங்குபவர்கள் இருக்கிறார்கள். இனிய நடையில், எளிய சொற்களால் கட்டப்படும் அவருடைய பாட்டுகள் ஒவ்வொன்றும் அள்ளிப்பருக வேண்டிய அமுதச்சுவை.

மேலும், இந்த இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெறும் அடிக்குறிப்புகள் மிகவும் சிறப்பானவை. இந்த அடிக்குறிப்பை மட்டுமே படித்தாலும் ஒவ்வொரு மாதமும் ஒரு இலக்கண விதியை தெள்ளத் தெளிவாகக் கற்றுக்கொள்ளலாம்.

இவை போக, பயனான கட்டுரைகள், செய்திகள், சிறுகதை என பல சுவையான அங்கங்களும் இடம்பெறுகின்றன.

மொத்தத்தில், உங்கள் குரல் இதழ் தமிழைத் தமிழாகப் படிக்கவும் எழுதவும் வழிகாட்டுகிறது. தமிழின் மீது உயர்ந்த மதிப்பையும் நம்பிக்கையையும் எற்படுத்துகிறது; தமிழ் இலக்கண இலக்கிய ஆளுமையை வலுப்படுத்துகிறது; மொழி அறிவையும் உனர்வையும் வளர்த்தெடுக்கிறது.

ஆகவே, தமிழ் ஆர்வலர்கள், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், தமிழ்ப்பணிக்கு அமர்த்தப்பெற்றுள்ள அதிகாரிகள், உயர்க்கல்விக் கழகங்கள், இடைநிலைப் பள்ளிகள், தமிழ்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் நல்லதமிழ் அறிய விழையும் அனைவரும் படிக்க வேண்டிய இதழ் ‘உங்கள் குரல்’.

இந்த இதழ் எங்கு கிடைக்கும் என்று தேடிக்கொண்டிராமல், உடனடியாக ஆண்டுக் கட்டணம் செலுத்திவிட்டால் போதும். இதழ் உங்கள் இல்லம் தேடி அஞ்சலில் வந்துவிடும்.

ஆண்டுக் கட்டணம்: RM36.00 [Ungalkural Enterprise எனும் பெயரில் காசோலை (Cheque) அல்லது பணவிடை(Money Order) அனுப்பலாம்.]

உங்கள் குரல் முகவரி: Ungalkural Enterprise, Room 2, 1st Floor, 22 China Street, 10200 Pulau Pinang.

தொ.பேசி / தொ.படி: 04-2615290

Tuesday, February 02, 2010

இந்தியர்கள் பிச்சை எடுக்க! சீனர்கள் உடலை விற்க!

“இந்தியர்கள் இந்நாட்டிற்குப் பிச்சைக்காரர்களாக வந்தனர். சீனர்கள், குறிப்பாக பெண்கள், உடலை விற்க வந்தனர்”.

“குடியேறிகளாக இங்கு வந்த இந்தியர்களும் சீனர்களும் இப்போது இந்நாட்டில் நல்வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்”.

"எசுபிஎம் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 பாட வரம்பை 12 ஆக உயர்த்த வேண்டும் என்று இந்தியர்கள் அளவிற்கு மீறி வலியுறுத்துவார்களானால் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்படும்".

“பகசா மிலாயு (மலாய்மொழி) அதிகாரத்துவ மொழியாக இருக்கையில் அவர்கள் எப்படி தமிழ்மொழியைப் பற்றி அவ்வளவு பேச முடியும்".

இன்று (2.2.2010) காலையில் மலாக்காவில் நடந்த ஒரே மலேசியா கருத்தரங்கில் பிரதமர் நஜிப்பின் சிறப்பு உதவியாளர் கொட்டிய கொடுஞ்சொற்கள் இவை.


மேலே படத்தில் நடுவில் நிற்கும் நசிர் சாபார் என்பவரின் இந்தப் பேச்சானது மலேசிய இந்தியர்கள், சீனர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தேசநிந்தனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. (விரிவாக)

  • செய்தி:-மலேசியாஇன்று

பி.கு:-இனங்களுக்கு இடயிலான நல்லுறவைச் சீர்குலைக்கும் வகையில் பேசிய நசிர் சாபார், பிரதமரின் சிறப்பு உதவியாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவார் என பிரதமர் துறை அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும் அவர் பேசிய கருத்துகள் மலேசியப் பிரதமரின் நிலைப்பாடு அல்ல எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tuesday, January 12, 2010

நமது நாளிதழ்கள் பற்றி ஒரு செய்தி

தமிழர் நலன் கருதி, மலேசியத் தமிழ் நாளேடுகள் தவிர்க்க வேண்டிய செய்தி எது?

1.அரசியல் செய்திகள்
2.வன்முறைச் செய்திகள்
3தமிழகச் செய்திகள்
4.சோதிடச் செய்திகள்

இப்படி ஒரு தலைப்பில் திருத்தமிழ் ஒரு கருத்துக் கணிப்பை அண்மையில் மேற்கொண்டது. இதில், மேலே உள்ளது போல 4 தேர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன.

அதன் இறுதி முடிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்க்கவும்.



ஒரு வேளை இந்த முடிவை நமது நாளிகை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும், இதுதான் உண்மை.

மலேசிய வாசகர்கள் (57%), சோதிடச் செய்திகளில் நாட்டம் கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. சோதிடச் செய்திகளால் எந்தப் பயனும் இல்லை என வாசகர்கள் நம்புகிறார்கள் போலும். மேலும், இணைய வாசகர்களில் பெரும்பாலானோர் நல்ல தெளிவும் விழிப்புணர்வும் கொண்டவர்களாக இருக்கிறார்களோ என இந்த முடிவின்வழி ஒரு சிந்தனைப்பொறி தட்டுகிறது.

ஆனாலும் பாருங்கள். இந்த சோதிடச் செய்திகளுக்குத்தான் நமது நாளேடுகள் அதிகமான முகமைதரம் கொடுத்து வெளியிடுகின்றன. வாசகர்கள் விரும்பிக் கேட்கிறார்கள் – விழுந்து விழுந்து படிக்கிறார்கள் – விடிய விடிய வாசிக்கிறார்கள் என்று வாயில் நுரைதள்ள நாளிதழ் ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். அதனாலே சோதிடச் செய்திகளைப் பக்கம் பக்கமாக நாள்கணக்கில் வாரக்கணக்கில் போடுகிறார்கள்.

எத்தனை எத்தனை சோதிடச் செய்திகள் தெரியுமா? ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள், சித்திரைப் புத்தாண்டுப் பலன்கள், சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, இராசி பலன்கள், எண்கணிதம், சோதிடக் கேள்வி பதில் இப்படியாக ஏராளம்! ஏராளம்!

இவற்றுள் எந்தச் சோதிடப் பலன்தான் பலிக்குமோ தெரியவில்லை. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.



நல்ல வேளை தைப்பொங்கல் தமிழர் புத்தாண்டு என்பதாலும் அது அறிவாண்மைக்கு முகன்மை கொடுப்பதாலும் சோதிடம் முதலிய மூடநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு நிற்பதாலும் தைப்பொங்கல் பலன்கள் என்று எழுத முடியவில்லை. இல்லாவிட்டால், பொங்கல் பலன்கள் என்று புழுகிக் கொண்டிருப்பார்கள் நமது உலகமகா சோதிடப் பூசர்கள். (இன்னும் கொஞ்ச காலத்தில் பொங்கலுக்கும் சோதிடப் புராணம் பாடப்போகிறார்கள் என்பது வேறு விடயம்)

சோதிடச் செய்திக்கு அடுத்து, நமது நாளிதழ்கள் வன்முறைச் செய்திகளைத் தவிர்க்க வேண்டும் என 53% வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.

ஆனாலும் நமது நாளிதழ்களின் நிலைமை எப்படி இருக்கிறது தெரியுமா? வெட்டிக் கொலை – கழுத்து அறுத்து கொலை – தலை துண்டானது குடல் சரிந்து மரணம் – கை துண்டிக்கப்பட்டது – இரத்த வெள்ளத்தில் கிடந்தார் – நெற்றிப் பொட்டில் துப்பாக்கிச் சூடு – சிறுமி கொலையுண்டு அம்மணமாகக் கிடந்தாள் என்று கொட்டை எழுத்தில் வகை வகையாகத் தலைப்பிட்டு முதல் பக்கச் செய்தியாகப் போடுவார்கள்.

அந்தச் செய்தியோடு படம் போடுவார்கள் பாருங்கள்..! அடேயப்பா! இதில், தமிழ் நாளேடுகளை யாரும் மிஞ்ச முடியாது. விரல் துண்டிக்கப்பட்ட கையோடு உள்ள படம் – வெட்டப்பட்டு கை தனியாகத் தொங்கும் படம் – சவக்கிடங்கில் முகம் வீங்கிப் போய் இருக்கும் படம் – தலையில் இருபது தையல் போட்ட படம் – இறந்தவரின் உடலுக்குப் பக்கத்தில் பெண்கள் தலைவிரி கோலமாக கதறி அழும் படம் இப்படியாக அருவருக்கத்தக்க – பார்க்க சகிக்காத படங்களைப் போடுவார்கள். அதுவும் வண்ணத்தில் போட்டு அசத்துவார்கள்.

இதையெல்லாம் கேள்வி கேட்டால் (அப்படி கேட்காவிட்டாலும் யாரோ ஒருவர் பெயரில் ஞாயிற்றுக்கிழமை கேள்வியைப் போட்டு) பதில் கொடுப்பார்கள் பாருங்கள். நாம் என்னாதான் மூளையைப் போட்டு பிழிந்து எடுத்தாலும் அப்படி ஒரு நியாயத்தைக் கண்டுபிடிக்க முடியாது. அப்படி ஒரு பதிலைச் சொல்லி, வன்முறைச் செய்திகளைப் போடுவதை நியாயப்படுத்தி விடுவார்கள்.

தவிர, தமிழகச் செய்திகளையும் அரசியல் செய்திகளையும் நாளிதழ்கள் அளவுக்கு அதிகமாக வெளியிடுவதைக் குறைத்துக் கொள்வது மலேசியச் சூழலுக்கு நன்மையாக இருக்குமென தோன்றுகிறது.

மலாய், ஆங்கில, சீன நாளேடுகள் போன்று நமது நாளிதழ்கள் செய்தித்துறைக்குரிய நிபுணத்துவத்தோடும் நடுநிலையோடும் சமுதாய நலத்தோடும் செய்திகளை வெளியிட முன்வர வேண்டும். வாசகனின் தரத்தை உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும். நாட்டு நடப்புகள், அரசியல் போராட்டங்கள், சமுதாயச் சிக்கல்கள் பற்றி சிந்தனைக்குரிய கட்டுரைகளையும் ஆய்வுச் செய்திகளையும் தரமான முறையில் வழங்க வேண்டும். இவையே பெரும்பான்மையான வாசகர்களின் விருப்பமாக இருக்கின்றது என்பதை நாளிகைகள் உணர வேண்டும்.

நாளிதழ் ஆசிரியர்கள் இதனை உணர மறுக்கும்போது வாசகர்கள் அவர்களுக்கு உணர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படியே இன்னொரு வழி இருந்தாலும், அது குறிப்பிட்ட நாளிதழை வாங்கிப் படிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்வதாகத்தான் இருக்க முடியும்.

Sunday, January 03, 2010

செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டேன்:- துணை முதல்வர்


இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு மலேசியா, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார்.

“ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்”, என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறினார்.


ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்.

“தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆற்றிய பெரும் பங்கை எந்த ஒரு உலகத்தமிழனும் மன்னிக்க மாட்டான்.

இலங்கையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த இந்திய அரசு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் நான் கலந்துக்கொண்டால், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு நானும் உடந்தையாக இருந்ததாக ஆகிவிடும். ஆகவே இந்த பரவசி மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்”, என்றார் இராமசாமி.

செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளப் போவதில்லை

தமிழ் நாட்டில் நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிலும் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.


“தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் செம்மொழி மாநாட்டிலும் நான் கலந்துக்கொள்ளப் போவதில்லை; காரணம், இந்திய நடுவண் அரசு செய்த துரோகத்திற்கு உடந்தையாக இருந்தவர் இந்த தமிழக முதல்வர்”, என்றார் இராமசாமி.

கருணாநிதி ஏற்பாடு செய்யும் இந்த செம்மொழி மாநாட்டினால் உலக தமிழர்களுக்கு எந்தவோர் பலனும் ஏற்படப்போவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இன்று இது போன்ற மாநாடு அவசியமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட பொது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா?”, என்று அவர் வினவினார்.

“கருணாநிதி நடத்தும் இந்த செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொண்டால், தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை மறந்து விடுவது போன்றதாகி விடும், ஆகையால், செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்”, என்றாரவர்.

உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார்

செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்து விட்ட பினாங்கு மாநில துணை முதல்வர் கோவையில் நடபெறவிருக்கும் உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக கூறினார்.


மலேசியாவில் வாழும் இனமானமுள்ள தமிழர்கள், உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பெரும் திரளாக கலந்துக்கொண்டு உலக தமிழினத்தின் ஒற்றுமையைப் புலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“மலேசிய தமிழர்களான நாம், ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கொண்டுள்ள கரிசனையை வெளிப்படுத்தும் அதேவேளை, ஈழத்து விடுதலை போரை கசப்பான முடிவுக்குக் கொண்டு சென்ற இந்தியாவின் துரோகத்தைக் கண்டிப்பாக மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது”, என்பதை இராமசாமி வலியுறுத்தினார்.

Monday, December 21, 2009

2010க்கான பட்டப் படிப்புப் பதிவு நடக்கிறது


2010 ஆம் ஆண்டில் மலேசியப் பொதுப் பல்கலைக்கழகங்களில் (IPTA) பயில்வதற்கு இப்போது விண்ணப்பம் செய்யலாம். இணையம் வழியாக நேர்வலை விண்ணப்பம் (Pendaftaran Online) செய்யும் சேவை தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. எனவே, 2009இல் எசுபிஎம்(SPM) தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் இப்போதே விண்ணப்பம் செய்யலாம்.

இதனைப் பற்றிய மேல் விவரங்களைத் தொடர்ந்து தருகின்றேன். நமது மாணவர்களுக்கு இது பயனாக இருக்குமென நம்புகிறேன்.

எசுபிஎம் அல்லது அதற்கு ஈடான கல்வித் தகுதியைக் கொண்டிருக்கும் மாணவர்கள் 2010ஆம் ஆண்டு தொடங்கி உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பதிவு நடவடிக்கை இரண்டு கட்டங்களாக (Fasa) நடைபெறும். மாணவர்கள் இவ்விரு கட்டங்களையும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

முதலாவது கட்டம் (Fasa I):- விண்ணப்பப் பதிவு

1.2009, 2008, 2007 ஆகிய ஆண்டுகளில் எசுபிஎம் எழுதிய மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதனைச் செய்வதற்கு தேசியச் சேமிப்புப் பொருளகத்திலிருந்து (Bank Simpanan Nasional) கடவுச்சொல் (No.Pin) வாங்க வேண்டியதில்லை.

2.பதிவு செய்ய, மாணவர்கள்
http://upu.mohe.gov.my என்னும் உயர்க்கல்வி அமைச்சின் அகப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

3.மாணவர்கள் தங்களுடைய அடையாள அட்டை எண், கடவுச்சொல் (Kata Laluan) ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் வகையைச் (Kategori Permohonan) சரியாகக் குறிப்பிடவும்.

4.அதில் கேட்கப்படும் விவரங்களைத் தவறு இல்லாமல் நிறைவு செய்ய வேண்டும்.

5.மாணவர்களின் குடும்ப விவரங்கள், கல்வி விவரங்கள், புறப்பாட நடவடிக்கை விவரங்கள் ஆகியவற்றைச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.

6.இந்த முதற்கட்டப் பதிவைச் செய்வதற்கான இறுதி நாள் 30-12-2009

இரண்டாம் கட்டம் (Fasa II):- விண்ணப்ப உறுதி

1.இந்தப் பதிவு 2-2-2010இல் திறக்கப்படும். இதற்கும் நேர்வலை (Online) வழியாக பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவு செய்வதற்குத் தேசியச் சேமிப்புப் பொருளகத்திலிருந்து (Bank Simpanan Nasional) கடவுச்சொல் (No.Pin) வாங்க வேண்டும். விலை RM10.60.

2.ஏற்கனவே, முதற்கட்டப் பதிவில் பயன்படுத்திய அதே அ.அட்டை எண், கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.

3.கேட்கப்படும் விவரங்களைச் சரியாக நிறைவு செய்து சரிபார்க்கவும். நிறைவு செய்த படிவத்தை அனுப்பிய பிறகு, தவறுகள் இருப்பின் 3 முறை மட்டுமே பிழைத்திருத்தம் செய்ய முடியும்.

4.இதற்குரிய இறுதி நாள்:- B, C, D ஆகிய பிரிவுகளுக்கு 30-3-2010. பிரிவு A மட்டும் எசு.பி.எம் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 நாட்கள்.

மாணவர்கள் கவனிக்க வேண்டிய விவரங்கள்:-

1.கொடுக்கப்பட்டுள்ள விதிகளைக் கவனமுடன் படித்துப் பார்க்கவும்.

2.உங்கள் தகுதிக்கு ஏற்ற படிப்புக்கும் பல்கலைக்கழகத்திற்கும் விண்ணப்பிக்கவும்.

3.தவறான படிப்புக்கும் பல்கலைக்கழகத்தித்கும் விண்ணப்பித்து விடாமல் பார்த்துக்கொள்ளவும்.

4.முதற்கட்டப் பதிவு, பொருளகக் கடவுச்சொல் வாங்குதல், இரண்டாம் கட்டப் பதிவு ஆகியவற்றைச் செய்வதற்குக் கடைசி நேரம் வரை காத்திராமல் உடனுக்குடன் செயல்படவும்.

5.இதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் உடனே உயர்க்கல்வி அமைச்சுக்குத் தொடர்பு கொள்ளவும். தொலைப்பேசி:-03-88835802 அகப்பக்கம்:- http://upu.mohe.gov.my/

Thursday, December 17, 2009

தமிழ் இயக்கங்கள் எதிர்க்கட்சிகளின் கைக்கூலிகளா?



எசுபிஎம் எனப்படும் மலேசியக் கல்விச் சான்றிதழ் தேர்வு தொடர்பாக நிலவிவரும் நெருக்கடி இன்னமும் முற்றிலுமாக ஓய்ந்தபாடில்லை. இந்த நெருக்கடியிலிருந்து தமிழை மீட்கவும் இலக்கியத்தைக் காக்கவும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்கள் போராடி வருகின்றன.

குறிப்பாக, எசுபிஎம் 12 பாட மீட்புக் குழுவினர் என தங்களை அடையாளப்படுத்தி இருக்கும் ஆ.திருவேங்கடம் தலைமையிலான குழுதான் இந்தப் போராட்டத்தை முழுவீச்சுடன் முன்னெடுத்துள்ளது.

இக்குழுவில், மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்திய இளைஞர் மன்றம், உலகத் தமிழர் மாமன்றம், தமிழ் அறவாரியம், சிவநெறி வாழ்க்கை மன்றம், வள்ளலார் நற்பணி மன்றம், மலேசிய இந்தியர் மேம்பாட்டுக் கழகம், மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல இயக்கங்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு தமிழுக்காகக் குரல்கொடுத்து வருகின்றன. தவிர, சு.வை.லிங்கம் தலைமையிலான தமிழ்க் காப்பகமும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மீட்டெடுக்கும் பணியில் தொடக்கத்திலிருந்தே குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வருகின்றது.

இதற்கிடையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்பையும் சேர்ந்த தலைவர்களும் இந்தச் சிக்கல் தொடர்பாகக் கருத்துரைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மீட்புக் குழுவினருக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்; அவர்கள் ஏற்பாட்டில் நடந்த கவன ஈர்ப்புப் பேரணியிலும் கலந்துகொண்டுள்ளனர்.


இப்படி, பல தரப்பினரும் ஒன்றுகூடி ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும் சமயத்தில், “தமிழுக்காகப் போராடும் இவர்கள் எதிர்க்கட்சிகளின் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றனர்” என்ற ஒரு குற்றச்சாட்டைச் சிலர் முன்வைத்துள்ளனர். அதனை உறுதிபடுத்துவதற்குச் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. அவை:-

1.இந்திய சமுதாயம் தொடர்பாக அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது. அதற்காக சில நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகளை எதிர்க்கும்படி சில அரசு சார்பற்ற இயக்கங்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன.

2.இந்திய சமுதாயத்தில் சிறு சிறு குழுக்கள் பல அரசு சார்பற்ற இயக்கங்கள் என்று காளான்களைப் போல முளைத்துக் கொண்டிருக்கின்றன. அவை எதிர்க்கட்சிகளுக்குத் துணைபோகின்றன.

3.இந்த இயக்கங்களுக்கு எதிர்க்கட்சிகள் நிதியுதவி செய்கின்றன.

4.இவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக இந்திய மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

5.இந்த இயக்கங்கள் கருத்தரங்குகளை நடத்தவும், விடுதிகளில் (ஓட்டல்) கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தவும் எதிர்க்கட்சிகள் உதவுகின்றன.

6.இந்த இயக்கங்களின் தலைவர்கள் சிலர் எதிர்க்கட்சிகளின் முக்கியப் பதவிகளில் கூட இருக்கின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் முழுப் பொறுப்பு மக்களைச் சார்ந்தது. ஏனெனில். நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு இடையில் அரங்கேறும் அரசியல் போட்டா போட்டிகளும் நுண்ணரசியல் விளையாட்டுகளும் மக்களுக்குத் தெரியாமல் இல்லை. அந்த அளவுக்கு மக்கள் இப்போது விழிப்புணர்வு அற்றவர்களாகவும் இல்லை.

மாற்றுக் கருத்துகளை வெளியிடுவதும்; மொழி இன நலனுக்காகப் போராடுவதும்; கட்சி, கொள்கைகளை மறந்து பொதுநலத்துக்காக ஒன்றுபடுவதும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு நிகரானது என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல.

அரசாங்கத்தின் ஒரு கொள்கையானது குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு எதிர்மறையான விளைவுகளை நீண்ட காலத்தில் ஏற்படுத்திவிடும் என்பதால், அதனை எதிர்த்து நிற்பதும்; மாற்றுக் கருத்து கூறுவதும்; மாற்றத்தைக் கோருவதும் மக்களாட்சிக்கு மாண்பினை அளிக்குமே தவிர ஒருபோதும் மருட்டலாகாது.

ஆகவே, தமிழைக் காக்கவும் இலக்கியத்தை மீட்கவும் போராடும் தமிழ் இயக்கங்களின் செயற்பாடுகளும் மக்களாட்சி நடைமுறையில் இயல்பானவைதாம். அதேவேளையில், மொழியினநல அடிப்படையில் பார்க்கும்போது இவர்களின் போராட்டம் பெரிதும் போற்றுதலுக்கு உரியது.

அந்த வகையில், தமிழ் இயக்கங்களின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எந்த அளவுக்கு உண்மையானவை; நம்பகத்தன்மை கொண்டவை; நியாயமானவை; நன்மையானவை என்பதைப் பொதுமக்களும் காலமும்தான் தீர்மானிக்க முடியும்.

Blog Widget by LinkWithin