Showing posts with label 8.தமிழ் நூல்கள். Show all posts
Showing posts with label 8.தமிழ் நூல்கள். Show all posts

Tuesday, September 13, 2016

ஒரே மேடையில் 425 தமிழ் நூல்கள் வெளியீடு - உலக சாதனை



செப்தெம்பர் 13, 2016ஆம் நாள் உலக வரலாற்றில் ஒரு சாதனை நாள். நம் தமிழ்மொழி உலக அளவில் மாபெரும் வரலாற்றை எழுதிய சிறப்புமிக்க ஒரு நாள்.

தமிழ்நாடு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் நூல்கள் உள்பட 425 தமிழ் நூல்கள் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது. இளைஞர், விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ சரவணன், டத்தோ டி. மோகன் மற்றும் மலாயா பல்கலைகழகத் தமிழ்த் துறை பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்பட ஏராளமான மலேசியத் தமிழ் ஆர்வலர்கள் இந்த உலகச் சாதனை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். 


மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தனது 60 ஆண்டு (1956-2016) கல்விப் பணியினை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை மற்றும் சென்னை கலைஞன் பதிப்பகத்துடன் இணைந்து “மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர்” நூலாக்கம் திட்டத்தினைத் தொடங்கியது.

இத்திட்டத்தின்வழி கடந்தாண்டு 350 நூல்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்  ஒரே நேரத்தில் வெளியீடு செய்து சாதனை படைத்தது. அவற்றுள் 10 மலேசிய நூல்களும் அடங்கும். இவ்வாண்டு புதிய சாதனையை ஏற்படுத்தும் வகையில், 425 நூல்கள் வெளியீடு கண்டன. இதில் 80 நூல்கள் மலேசியப் பெருந்தகையோர் பற்றிய ஆவண நூல்களாகும்.

இந்த நூல் வெளியீட்டினை ஒட்டி இன்று கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் குறித்த கட்டுரைகளும் படைக்கப் படுகின்றன.

தமிழ்மொழி, இலக்கியம், தமிழ்க் கல்வி, தமிழர் கலை, பண்பாடு, விளையாட்டு, தமிழர் இனமான உணர்வு, தமிழர் மேன்மை, சமூக பொருளாதார அரசியல் வழி தமிழர் மேம்பாட்டிற்கு உழைத்து மறைந்த தமிழ்ப் பெருந்தகையோரும், தமிழ்ச் சமுதாயம் உய்ய தொடர்ந்து பணியாற்றி வரும் பெருந்தையோரும் “மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர்” நூலாக்கத் திட்டத்தின் கீழ் அடங்குவர்.


மலேசிய மண்ணில் தமிழர்கள் மேன்மையுற உழைத்த, வழிகாட்டிய பெருந்தகையோரை அடையாளங் காணப்பட்டு ஆவணப்படுத்தப் படுத்துவதே நூல் எழுதும் திட்டத்தின் நோக்கமாகும். தற்போதைய தலைமுறையும் அடுத்த தலைமுறையும் இவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்; வாழ்வில் முன்மாதிரியாகவும் கொள்ளவேண்டும். இவர்கள் இல்லாவிடில் மலேசியாவில் தமிழும் தமிழர்களும் வெற்றி பெற்றிருக்க இயலாது என்பதை உலகத்தாருக்கு மலேசியத் தமிழர்களை அடையாளம் காட்டும் கடப்பாடாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது. 

மலேசியப் பெருந்தகையோர் பற்றி ஒரே நேரத்தில் 80 நூல்கள் உருவாக்குவது மிகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொருவரைப் பற்றியும் 100 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. எழுத்தப் படுவோர் குறித்த குறிப்புகளையும் படங்களையும் சேகரித்து சிறுசிறு தலைப்புகளிட்டு எழுதும் பணியில் 80 பேர் ஈடுபட்டனர். 

எழுதப் படுவோரின் பிறப்பு வளர்ப்பு, கல்வி, இலக்கியப் பணி, சமூகப் பணி, தமிழ் மற்றும் தமிழர் சிந்தனை, அவர்கள் முன்னெடுத்த திட்டங்கள், இன்னும் பிற அரிய பணிகளையும் தொகுத்து நூலாக எழுதினர். மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவேண்டிய மிகப்பெரிய பணியினை இவர்கள் செய்துமுடித்துள்ளனர்.

இத்தகு வரலாற்றுச் சிறப்புமிக்க  சாதனைக்குப் பின்னணியில் நமது மலேசியாவைச் சேர்ந்த மலாயாப் பல்கலையின் முனைவர் சு.குமரன் அவர்கள் பெரும்பணி ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்க செய்தி. மலேசியாவில் தமிழ்ச் சார்ந்த பணிகள் ஆற்றிய 80 பெருந்தகையோர் பற்றி ஆவணப்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியும் அதற்காக எடுத்துக்கொண்ட சிரத்தையும் போற்றுதலுக்கு உரியது. அவருடைய இப்பணி மலேசியத் தமிழ்ப் பெரியோர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது; மலேசியாவில் நடைபெற்றுள்ள அருந்தமிழ்ப் பணிகளை உலகத்திற்கு அறியச் செய்துள்ளது எனில் மிகையன்று. அந்தவகையில் காலத்தால் செய்யத்தக்க அரியதோர் பணியை முன்னின்று செய்திருக்கும் முனைவர் சு.குமரன் அவர்களுக்குத் திருத்தமிழ் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், மலேசியாவைச் சேர்ந்த 80 நூலாசிரியர் பெருமக்களையும் மனாதாரப் பாராட்டுவதில் திருத்தமிழ் மகிழ்கிறது. 

மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் நூல் வரிசையில் சில:-






நூல் வெளியீட்டு விழா காட்சிகள் சில:-




@சுப.நற்குணன்

Thursday, May 27, 2010

வள்ளலார் கண்ட சமயநெறி: மதமயக்கு நீக்கும் நூல்


நம் நாட்டில் சமயஞ்சார்ந்த நூல்கள் வெளிவருவது மிகவும் அரிதாகும். அப்படியே ஒரு நூல் வந்தாலும்கூட, அது பெரும்பாலும் தமிழர்களின் மண்டைக்குள் மதப் பித்தை புகுத்துவதாகவும்; மூட நம்பிக்கையை விதைப்பதாகவும்; அறிவுக்குப் பொறுந்தா சடங்குகளை வளர்ப்பதாகவும்; ஆன்மிகத்திற்கு எதிரான உணர்ச்சிகளை ஊட்டுவதாகவும்; புதுப்புது கடவுளர்களையும் பூசைகளையும் பரிகாரங்களையும் விளம்பரம் செய்வதாகவும் அமைந்திருக்கும் என்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும்.

இதற்கு முற்றிலும் மாறாக, உண்மை சமயநெறியை அறிமுகப்படுத்தி, ஆன்மிக வழியில் வாழ்வை அமைத்துக்கொள்ள வழிகாட்டும் வகையில் மலேசியாவில் வந்திருக்கிறது ஒரு சிறிய நூல்; ஆனால், அரிய நூல்.

“வள்ளலார் கண்ட சமயநெறி” என்பது நூலின் பெயர். இதன் ஆசிரியர் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனார். இவர் மிக இளமையிலேயே மெய்யறிவு சார்ந்த இறைமை ஈடுபாடும், பகுத்தறிவுச் சிந்தனையும் ஒருங்கே அமையப் பெற்றவர். திருவள்ளுவருக்குப் பிறகு, சித்தர் பெருமக்களுக்குப் பிறகு தமிழரின் சமயக் கொள்கையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் வள்ளற் பெருமான் இராமலிங்க சுவாமிகள். அதனாலேயே இவரைப் புரட்சித் துறவி என்றும் கூறுவர். வள்ளலார் மீது நூலாசிரியருக்கு இருந்த ஆழ்ந்த பற்றுதலே இந்நூல் உருவாகுவதற்கு காரணியாகும் எனலாம்.

தாம் வாழ்ந்த காலத்திலேயே, தமிழர் கண்ட மெய்ந்நெறி சமயத் தெளிவினை இன்றைய தமிழர்க்கு ஏற்படுத்திவிட வேண்டும் என்ற பேராவலால், தமிழர்ச் சமயக் கோட்பாடுகளை அராய்ந்து வெளிபடுத்த முற்பட்டார் பாவலர் ஐயா. அதற்காகவே, ‘தமிழர் சமயம்’ எனும் அரிய நூலினை எழுதி இதுவரை எவருமே தெளிவுபடுத்தாத பல உண்மைகளை வெளிப்படுத்த முற்பட்டார்.

அதற்கு முன்பதாக, வள்ளலார் கண்ட சமயநெறி, திருமூலர் கண்ட சமயநெறி, சித்தர் கண்ட சமயநெறி எனும் தலைப்புகளில் எழுதினார். அவற்றுள் ஒன்றுதான் இப்போது நூல்வடிவில் வந்திருக்கிறது.

‘ஆரியப் பார்ப்பன’ மேலாண்மையால் தமிழினம் சீரழிந்தது எனும் பெரியாரியல் உணர்வோடு முழு உடன்பாடு உடையவர் பாவலர். இருப்பினும், பார்ப்பன கொடும் பிடியிலிருந்து தமிழினத்தை விடுவித்து, அவ்விடுதலையை நிலைப்படுத்த தக்க வழிமுறைகளை காணவேண்டும் என்று சிந்தித்தார்.

திருமூலரின் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ எனும் கோட்பாட்டைப் பெயரளவில் அல்லாமல், ஆழமாக ஆய்ந்து தமிழர் கண்ட மெய்யறிவியலை வெளிப்படுத்த முயன்றார்.

இந்தச் சிந்தனையின் அடிப்படையில், ஆரியப் பார்ப்பனக் கோட்பாட்டை அடித்துநொறுக்கும் வள்ளலாரின் சிந்தனைகளை ஆராய்ந்து பல உண்மைகளை இந்த நூலில் வெளிப்படையாக எழுதி உள்ளார்.

நூலின் தொடக்கத்திலேயே ‘சமயமும் மதமும்’ ஒன்றல்ல என்பதை உணர்த்தும் வகையில், அறிவின் இயல்புகளைம் உணர்வின் இயல்புகளையும் நுட்பமாக விளக்கியுள்ளார். தொடர்ந்து,

*வள்ளுவர் நெறியில் வள்ளலார்
*வள்ளலார் கண்ட அருள்நெறியும் மருள் நெறியும்
*இந்து பெயர் வரலாறும் – இந்து மதமும்
*இந்து மதம் மக்களின் பொது மதமாக இருக்கத் தகுதியற்றது
*நாத்திகம் எது?
*சாதியும் குறியீடுகளும்
-அறிவு மதம் அல்லது மெய்யறிஞர் சமயம்
*சவகர்லால் நேருவும் இந்து மதமும்
*ஒளி வழிபாடே உண்மை வழிபாடு

ஆகிய தலைப்புகளில் அரிய கருத்துகளை நுடபமாக விளக்கியுள்ளார். அறிவு தேடலோடு படிப்போருக்கு பல உண்மைகள் புரியும் வகையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நூலை ஆழ்ந்து கற்பதன் வழியாக, தமிழரை மயக்கிய நெறி எது? தமிழர் பின்பற்ற வேண்டிய நெறி எது? என்பதைத் தெளிவாக உணரலாம்.

இந்த நூலினை வெளிப்படுத்துவதன் வழியாக, தமிழரிடையே ஊறிக்கிடக்கும் மதமயக்கு நீங்க வழிபிறக்கும் என நம்பலாம். மதவெறியர் சிலருக்கு இந்நூல் அதிர்ச்சியூட்டலாம். அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்பதற்காக உண்மைகளை உரைக்காமல் இருக்க முடியாது.

தமிழரின் வீழ்ச்சிக்கு மதப்பித்து மிகப்பெரிய கரணியமாகும். இதிலிருந்து தமிழனை விடுவிக்க, தமிழும், தமிழின உணர்வும், திருக்குறள் நெறியுமே மிகச் சரியான கருவிகளாக அமையும். இந்த அடிப்படை உண்மையை உள்ளார்ந்து உணர்த்தும் வள்ளலாரின் உண்மை உள்ளத்தைத் தமிழர்க்குத் தெரிவிப்பதே இந்நூலின் நோக்கமாக இருக்கிறது.

நூலின் விலை: பத்து நிங்கிட் மட்டுமே (RM10.00)
நூல் கிடைக்குமிடம்: மலேசியத் தமிழ்நெறிக் கழகம், Lot.274, Kpg. Bendahara Baru, Jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor. Tel: 016-3262479

Friday, September 25, 2009

இனிய தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்

‘உதயம்’ என்ற பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ் இதழ் வெளிவந்தது, உங்களுக்குத் தெரியுமா? 1970, 80களில் தமிழ் மக்களிடையே அதிகம் வாசிக்கப்பட்ட இதழ் இந்த உதயம்.

நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் இப்போது மக்கள் ஓசை நாளிதழின் மூத்த செய்தியாளராகவும் இருக்கும் ஐயா எம்.துரைராஜ், வழக்கறிஞர் ஐயா பொன்முகம், திரு.தேவராஜ் முதலானோர் அன்றைய உதயம் இதழின் ஆசிரியர்களாக இருந்து பணியாற்றியவர்கள்.

அரசாங்கத்தின் கருத்துப் பரப்புரை ஏடாக இருந்ததோடு அல்லாமல், தமிழுக்கும் வளம் சேர்க்கும் வகையில் நல்லதோர் இலக்கிய ஏடாகவும் உதயம் வார்த்தெடுத்தப்பட்டது – வளர்த்தெடுக்கப்பட்டது.

ஏனோ தெரியவில்லை? என்ன காரணமோ புரியவில்லை? மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த அந்த அருமை இதழ் நின்றுபோனது; அது பரப்பிய செந்தமிழ் மணம் மறைந்துபோனது. உதயத்தின் மறைவு அன்று பல்லாயிரம் மனங்களில் ஆறாத்துயரை மாறாநினைவாக விட்டுச்சென்றது – விதைத்துச் சென்றது என்பது வரலாறு.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் உதயமாகி இருக்கிறது அந்த அரசாங்க ஏடு. மலேசியத் தகவல் திணைக்களம் (Jabatan Penerangan Malaysia) இப்போது மீண்டும் இந்த இதழை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. இப்போது இதன் பெயர் “புதிய உதயம்”.

முழுக்க முழுக்க தமிழில் இவ்விதழ் வெளிவருகிறது; இலவயமாக வழங்கப்படுகிறது. நான்கு வண்ணத்தில் – தரமான வழவழப்புத் தாளில் – புதியவகை அச்சமைப்பில் - மிகவும் நேர்த்தியாக – பொழிவான தோற்றத்தில் – பார்ப்போர், படிப்போர் கவனத்தையும் கருத்தையும் பட்டென கவரும் வகையில் ‘புதிய உதயம்’ வெளியிடப்படுகிறது.

முற்றிலும் புதிய தோற்றத்தில் புதுமை அமைப்பில் புதுப்புது செய்திகளைத் தாங்கி ‘புதிய உதயம்’ மீண்டும் தமிழ்மணம் பரப்ப வந்திருக்கிறது; வாராது வந்த மாமணியாய் தமிழ் மக்களின் அறிவுப்பசிக்கு நல்விருந்தாக அமைந்திருக்கிறது.

இந்த 2009இல் இதுவரை மூன்று இதழ்கள் வெளிவந்துவிட்டன. தற்போது, திருமதி பத்மா செல்வராஜு அவர்களின் பொறுப்பில் இவ்வேடு நல்லதோர் தமிழ் ஏடாக – ஏடுகளுகெல்லாம் முன்மாதிரி ஏடாக வெளிவருகின்றது.

ஆனால், இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், இப்படியொரு இதழ் வெளிவருகிறது என்பதே இன்னும் பலரும் அறியாமல் இருக்கின்றனர்; இலவயமாக கிடைக்கும் இனியதோர் இதழைப் படிக்காமல் இருக்கின்றனர்.

‘புதிய உதயம்’ அரசுசார்ந்த செய்திகளை வழங்கும் அதே வேளையில், கல்வி, சமூகம், பொருளாதாரம், பெற்றோரியல், அறிவியல், சமயம், விளையாட்டு, சுகாதாரம், தமிழ்மொழி, தொழில்நுட்பம், சிறுகதை, கவிதை என பல்வேறு வகையான படைப்புகளைப் பாங்குடன் பரிமாறுகிறது.


தமிழ்ப்பள்ளிகள், இடைநிலை; உயர்நிலைப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள், தமிழ்மொழிக் கழகங்கள், பொது இயக்கங்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த இதழ் பயனாக அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

குறிப்பாக, தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் தமிழைப் பயிலும் மாணவர்களுக்கு இவ்விதழ் பெரும் நன்மையை அளிக்கும்; அவர்களின் தமிழ் வாசிப்பிற்குத் துணை நிற்கும்; தமிழ்மொழி ஆற்றலை வளர்த்தெடுக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் கல்விக்கும் தேர்வுக்கும்கூட துணைநூலாகப் பயன்படும்.

‘புதிய உதயம்’ இதழ் நாடு முழுவதுமுள்ள தகவல் திணைக்களம் (Jabatan Penerangan), மாவட்டத் தகவல் அலுவலகம் (Pejabat Penerangan Daerah) ஆகிய இடங்களில் இலவயமாகக் கிடைக்கும்.

பள்ளி நிருவாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகிய தரப்பினர் இந்த இதழைப் பரப்பும் நல்ல பணியை விரைந்து செய்யலாம்.

இந்தச் செய்தியைப் படிக்கும் அன்பர்கள், உங்களுக்கு அருகிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் இயக்கங்கள் ஆகியோருக்கு அன்புகூர்ந்து தெரியப்படுத்துங்கள்.


தமிழ்மக்களின் பேராதரவு இருந்தால் அரசாங்கம் வெளியிடும் இந்த இலவய இதழ்.. இனியத் தமிழ்பரப்பும் இந்த ஏடு.. எல்லாரும் படிக்கும் வகையில் பேரளவில் வெளிவரும்; மீண்டும் பாதியிலே நின்றுவிடாமல் பலகாலம் தொடர்ந்து வரும்.

‘புதிய உதயம்’ இதழ் தொடர்பாக மேல் விவரம் பெறுவதற்கு:-
திருமதி பத்மா செல்வராஜு (ஆசிரியர்)
மின்னஞ்சல்:- pathma@inform.gov.my கைப்பேசி:- 019-2808526

‘புதிய உதயம்’ முகவரி:-
Ketua Pengarang, Bahagian Penerbitan Dasar Negara,
Jabatan Penerangan Malaysia, Tingkat 12 Barat, Wisma Sime Darby,
Jalan Raja Laut, 50350 Kuala Lumpur. Tel:03-2173 4400 samb.4655

Friday, October 17, 2008

தமிழ்நெறி – தமிழ்மீட்புத் திங்களிதழ்


தமிழைக் காக்கவும் தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கவும் மலேசியாவில் வெளிவரும் ஒரே திங்களிதழ் தமிழ்நெறி.

தமிழர் ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கிப்படிக்க வேண்டிய திங்களிதழ் தமிழ்நெறி!

தமிழ்நெறி அத்தோபர் திங்களிதழ் வந்துவிட்டது! அதன் உள்ளடக்கங்கள்...


1.அறிவியலையும் கணிதத்தையும் மீண்டும் தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும்.
2.மனித வளர்ச்சியும் விருத்தியும் தொடர்பான கோட்பாடுகள்.
3.வீழ்ச்சியுறும் தமிழினத்தில் எழுச்சி வேண்டும்.
4.'மக்கள் ஓசை' திருமாவளவனைச் சீண்டியது தமிழ் இனமான உணர்வாளர்களைச் சீண்டியதாகும்.
5.பாலகோபாலன் நம்பியார் இப்படிச் செய்யலாமா?
6.நடிகை தொப்புளில் ஓடுகிறது நாளிதழ்
7.பூச்சார் பூச் பூச் பூக்கா! நாக்கா!
8.தமிழர்களுக்குத் தமிழ்மொழி தாய்ப்பாலுக்கு நிகரானது
9.யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை!
10.புரட்சித் துறவி வள்ளலார்.

இன்னும், சொல்லும் பொருளும், தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு, சிறுகதை, தமிழ்க் கலைச்சொற்கள், இலக்கணம், பண்டார் பாரு செந்தூல் இடநிலைப்பள்ளி மாணவர்களின் தமிழ்நெறிக் கலந்துரயாடல்

என பல சூடான, சுவையான, இனமான உணர்வூட்டும் கட்டுரைகள்; செய்திகள்; துணுக்குகளைத் தாங்கி மலர்ந்துள்ளது. தவறாமல் உடனே வாங்கவும்..!

மேல்விளக்கம் பெற:- தமிழ்நெறி, Lot 274, Kampong Bendahara Baru, Jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor. தொ.பேசி:- 03-61874103

Sunday, September 21, 2008

தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்

மலேசியத் தமிழ் இதழியல் துறையில், மறுவரவு மேற்கொண்டு மீண்டும் வந்துள்ளது 'தமிழ்நெறி' என்னும் தமிழ்த் தேசிய மாதிகை (மாத இதழ்). "தமிழைக் காப்போம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்" என்ற முழக்கத்தோடு இந்தச் செப்தெம்பர் திங்களில் தமிழ்நெறி இதழ் வெளிவந்துள்ளது. தமிழ்நெறிச் சிந்தனைகளைத் தாங்கி தமிழ் மீட்புக்காகவும் காப்புக்காகவும் குரல்கொடுக்கும் ஏடாக வெளிவந்துள்ள 'தமிழ்நெறி' இதழை ஒவ்வொரு மலேசியத் தமிழனும் மனதார வாழ்த்தி வரவேற்க வேண்டும்.
தமிழ் மொழியின நலன் தொடர்பிலான பல அரிய செய்திகளையும் கட்டுரைகளையும் இந்த இதழ் தாங்கிவந்துள்ளது. அறிஞர் அண்ணா, பெரியார், மாவீரன் திலிபன் ஆகியோர் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், மாணவர்களுக்கான தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு வினாவிடை பகுதி, உளவியல் கட்டுரை, ஈழத்துக் கட்டுரை என பல்வேறு அரிய செய்திகளை உள்ளடக்கி மிகவும் தரமான தாள்களில் கவரும்படியாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. "தமிழ்நெறியின் வேலை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே. இது கருத்துப்பரப்பும் அறிவுசான்ற இதழ். எனவே, தமிழ், தமிழர் தொடர்பான அரிய செய்திகளைத் தேவையான கருத்துகளைத் தமிழ் மக்களுக்குச் கொண்டுபோய்ச் சேர்த்து, அவர்களை விழிப்படையச் செய்யும் பணியே தமிழ்நெறிப்பணி" என்று இதழின் பொறுப்பாசிரியரும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தலைவருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் தலையங்கத்தில் எழுதியிருப்பது பலித்திட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் அவா.

மலேசியத் தமிழர்க்குத் 'தமிழ்நெறி' புதிய இதழல்ல. கிட்டதட்ட 14ஆண்டுகளுக்கு முன்பே 1994 ஏப்பிரல் திங்கள் மலேசியாவில் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கில் புயலென புரப்பட்ட எழுச்சிமிக்க ஏடுதான் 'தமிழ்நெறி'. மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாரின் அறிய சிந்தனையில் கருவாகி கழகத்தின் உயிர்த்தொண்டர்களின் அயராத உழைப்பில் உருவாகி மலேசிய மண்ணில் தமிழ் முரசு கொட்டிய வரலாற்றுச் சிறப்பு இந்தத் 'தமிழ்நெறி' இதழுக்கு உண்டு.

ஆனால், வெளிவந்த சில மாதங்களில் பல்வேறு இடர்களின் காரணமாக தமிழ்நெறி நின்று போனது. பின்னர், பத்தாண்டுகள் கழித்து 2004 மே திங்களில் 'தமிழ்நெறி' மீண்டும் புத்துயிர் பெற்று புதிய வடிவில் புதிய தோற்றத்தில் வெளிவந்தது. தமிழ் உணர்வையும் தமிழர் உணர்ச்சியையும் முன்னெடுக்கும் ஒரு இதழை வாங்கி அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவும் உணர்வும் கெட்டுப்போன தமிழர்களிடையே, பெயர்போட முடியாமல் மீண்டும் தடைபட்டது 'தமிழ்நெறி'.

ஆயினும், உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்குக் காலந்தோறும் பல்வேறு தடைகளையும், இடர்களையும், இருட்டடிப்புகளையும், மறைப்புகளையும் தாண்டி இன்றளவும் நிலைபெற்று தனித்தன்மையோடு வாழ்ந்து வரும் தமிழ்மொழி போல, 'தமிழ்நெறி' இதழும் பல்வேறு சிக்கல்களை கடந்து இப்போது மறுபடியும் புதுவடிவம் பெற்றுள்ளது. எந்தத் தடைக்கும் அஞ்சாமல், வந்த தடங்கல்கள் அனைத்தையும் வென்று மீண்டும் வெளிவந்துள்ள 'தமிழ்நெறியின்' நெஞ்சுரத்திற்குத் தமிழர்கள் தலைதாழ்த்தி வணக்கம் செய்யவேண்டும்.


இவ்விதழ் இந்நாட்டில் பலமிக்க ஓர் இதழாக உருவெடுக்க வேண்டும். அதற்குண்டான அனைத்து வினைப்பாடுகளையும் ஆழ ஆராய்ந்து ஆசிரியர் குழுவினர் செயல்பட வேண்டும். தமிழின்; தமிழர்களின் நலன்பேணும் செய்திகளைத் தாங்கிவருவதோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி சரியான இலக்கை நோக்கி தமிழரை வழிநடத்த வேண்டும். தமிழ்ப்பற்றாளர்கள் ஊணர்வாளர்கள் அனைவரையும் தமிழ்நெறி எட்டிப்பிடிக்க ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். நாடு முழுவதும், 'தமிழ்நெறி' அறிமுக விழா, வாசகர் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தித் தமிழ்நெறியைப் பரவச் செய்ய வேண்டும். ஆண்டுக் கட்டண உறுப்பினர்களைப் பெருக்குவதற்கான வழிவகைகளை காணவேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழ் சார்ந்த இயக்கங்களின் ஆதரவை நாடி ஒவ்வொரு ஊரிலும் வட்டாரத்திலும் தமிழ்நெறி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு தக்க திட்டங்களைத் தீட்டி முன்னேற வேண்டும். இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கூடங்கள் ஆகியவற்றுக்குள் தமிழ்நெறி ஊடுறுவும் வழிகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இத்தனைக் கருத்துகளும் 'தமிழ்நெறி' ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாதவை அல்ல. இருந்தாலும், தமிழ்நெறி தமிழரின் உயிர்நெறியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இத்தனைக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

இவ்விதழின் வெற்றியில் மலேசியத் தமிழரின் பங்கு, குறிப்பாகத் தமிழ்ப்பற்றாளர், உணர்வாளர் என்று முழங்கிக்கொள்வோரின் பங்கு மிக அளப்பரியதாகும். அதோடு, தமிழால் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்விதழை பலமிக்க இதழாக வளர்த்தெடுக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

காரணம், தமிழை முன்னெடுப்பது ஒன்றே இந்த நாட்டில் தமிழர்களின் நூற்றாண்டு வரலாற்றைக் காப்பதற்கான வழியும்; தமிழர்களின் அடுத்த நூற்றாண்டின் வாழ்வை, வளர்ச்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பும் ஆகும். தமிழ் இல்லையேல் தமிழர்க்கு எதுவே நிலைக்காது என்பதை மேற்குறிப்பிட்டவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தமிழ்நெறியை வாங்கி ஆதரவு செய்ய வேண்டியதும் இன்னும் பலரை வாங்க ஊக்குவிப்பதும் பிறந்த இனத்துக்குச் செய்யும் கடமையாகும்.

தமிழ்நெறி இதழ் பற்றிய முக்கிய விவரங்கள்:-

1.இதழின் விலை ம.ரி.3.00 மட்டுமே
2.தமிழ்நெறி உறுப்பினர் கட்டணம் ம.ரி20.00 (6 மாதங்களுக்கு)
3.தமிழ்நெறி முகவரி: Lot, 274, Kampong Bendahara Baru, jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor.
4.தொலைபேசி: 03-61874103 தொலைப்படி: 03-61874099


தமிழ்நெறி இதழை வாங்குவோம்!
தமிழைக் காப்போம்!
தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்!

Monday, May 26, 2008

தமிழ்ச் செம்மொழிச் சிறப்புமலர்



உலகத்தின் மூத்தமொழி தமிழ்!


உலகத்தின் முதல் தாய்மொழி தமிழ்!


இலக்கணக் கட்டமைப்பால் அறிவியல்மொழி தமிழ்!


இலக்கியச் செழுமையினால் செவ்வியல்மொழி தமிழ்!


மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே முழுமையடைந்த செம்மொழி தமிழ்!



அனைத்துலக மொழியறிஞர் பெருமக்கள்
ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட அறுபெருஞ் செம்மொழிகளுள்
அத்தனை தகுதிகளும் மொத்தமாய் உடைய ஒரேமொழி தமிழ்!

எனினும், இந்திய நடுவணரசு,
தமிழறிஞர்கள் 100 ஆண்டு போராடிய பின்னர்,
2004ஆம் ஆண்டுதான் தமிழைச் செம்மொழியாக
அதிகாரஞ் சார்ந்து அறிவித்தது!

அந்த வரலாற்றுச் சிறப்பின் பதிவாகவும்,
செந்தமிழின் செம்மைக் கூறுகளைத் தெளிவுற நிறுவியும்,
உலகளாவிய நிலையில் தமிழின் நேற்றைய – இன்றைய – நாளைய
நிலைமைகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து விளக்கியும்
துறைசார்ந்த அறிஞர்கள் தீட்டிய எழுத்தூவியங்களின்
தொகுப்பாக வெளிவந்துள்ளது செம்மொழிச் சிறப்புமலர்..!

செம்மொழியாம் தமிழுக்கென இப்படியொரு சிறப்புமலர்
இப்போதுதான் உலகிலேயே முதலாவதாக வெளிவருகிறது!
அதுவும், மலேசியத் திருநாட்டில் வெளிவருகிறது!


மலேசியாவில் வெளிவரும் 'உங்கள் குரல்' இதழின் ஆசிரியரும்
இறையருட் கவிஞரும் தொல்காப்பிய அறிஞருமாகிய
நல்லார்க்கினியர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்களின்
அரிய முயற்சியால் தமிழ்க்கூறும் நல்லுலகம் வியக்க வெளிவருகிறது!


1.செம்மொழி : பொதுவிளக்கம்
2.செம்மொழி : நேற்று – இன்று – நாளை
3.செம்மொழி : சிறப்பியல்புகள்
4.செம்மொழி : அக்கரை நாடுகளில்
5.செம்மொழி : தமிழ்க்கல்வி, கலை நிறுவனங்கள்

என்ற ஐந்து பிரிவுகளில்...

தமிழகம், மலேசியா, சிங்கை, இலங்கை சார்ந்த அறிஞர்களும்,
தமிழாய்ந்த மேனாட்டு அறிஞர்களும் வழங்கிய
40 அரிய ஆய்வுக் கட்டுரைகளையும்,
பழந்தமிழ்ப் புலவோர் முதல் பாரதிதாசனார் வரை
நந்தமிழ்ப் புலவர்களின் நறுந்தமிழ்க் கவிதை வரிகளை விளக்கும்
அரிய காட்சிகளாக அழகிய 20 வண்ண ஓவியங்களையும்,
இந்திய நடுவணரசின் செம்மொழி அதிகார ஆவணங்களையும்
இன்ன பிற அருமைசால் செய்திகளையும் தாங்கி,
320 பக்கங்களில் இதழ்விரிக்கும் இந்த மலர்,
உலக நிலையில் செம்மொழி பற்றி வெளிவந்துள்ள
முதல் முழுக் களஞ்சியமாகும்!

இந்த செம்மொழிச் சிறப்புமலரின் வெளியீட்டு விழா
28-05-2008ஆம் நாள், புதன்கிழமை, மாலை மணி 6.00க்கு
கோலாலம்பூர், ம.இ.கா தலைமையகம், நேதாஜி மண்டபத்தில்
உயிர்த் தமிழை உயர்த்திப் பிடிக்க வெளியீடு காண்கிறது!!
உலகத் தமிழரை ஊக்கப்படுத்த வெளியீடு காண்கிறது!!
மேல்விளக்கங்கள் பெற தொடர்பு கொள்க:-
UNGALKURAL ENTERPRISE, Room 2, 1st Floor, 22 China Street, 10200 Pulau Pinang, Malaysia.
TEL/FAX : 604-2615290

Friday, April 27, 2007

சொல் அறிவியல் - Tamil Etimology

பாவாணர் வழியில் மலேசிய மண்ணிலிருந்து..
தமிழ் வேர்ச்சொல் ஆய்வு நூல்கள்
நூலாசிரியர் : தமிழியல் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம்


 மலேசிய வரலாற்றில் முதன் முறையாக வெளிவரும் வேர்ச்சொல் ஆய்வுநூல்.
 மொழிஞாயிறு பாவாணர் நிறுவிய சொல்லாய்வு வழியில் அமைந்த அரியநூல்.
 தமிழ் மொழியின் ஆழத்தையும் உச்சத்தையும் ஒருசேர விளக்கும் அருமைநூல்.
 தமிழின் தலைமையையும் தகுதியையும் சான்றுகளோடு நிறுவும் அறிவுநூல்.
 தமிழுக்கும் உலக மொழிகளுக்கும் உள்ள உறவுகளைக் காட்டும் உயர்நூல்

தனியொருவராக ‏இருந்து தம் வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளை ஈகம்செய்து சொல்லாய்வுத் துறையில் முழுமையாகவும் முறையாகவும் ஈடுபட்டுச் செழிக்கச் செய்த மொழிஞாயிறு பாவாணரிடமிருந்து புறப்பட்ட இர.திருச்செல்வம்(நூலாசிரியர்) என்னும் கதிரவக்கீற்று ‏மலேசிய நாட்டிலும் தமிழ்கூறு நல்லுலகிலும் பெரிதான ஒரு வீச்சை எற்படுத்தக் கதிர்த்துக் காத்திருக்கிறது எ‎ன்ற உண்மைக்கு ‏இந்நூல் நல்லதொரு சான்று.

இந்நூலைப் படித்து முடிக்கி‎ன்ற உள்ளங்களில் தமிழைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்; தமிழுணர்வு ஏற்படும். தமிழ்மீது இருந்துவந்த தாழ்வுணர்ச்சி மறைந்து நம்பிக்கை ஏற்படும். தமிழ்மீது ஏற்படும் நம்பிக்கை த‎ன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.

தமிழியல் வாழ்வையும் வளர்ச்சியையும் மட்டுமே இலக்காகக் கொண்டு, எந்தவொரு வணிக நோக்கமும், ஈட்டமும் கருதாமல் தூய்மை எண்ணத்தோடு வெளியிடப்பெற்றுள்ள இந்நூலைப் படித்துப் பயன்பெறுமாறு பிறந்த இனத்தால் அமைந்த உறவால் அன்போடு வேண்டுகிறோம்.

தொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம்,
No.4, Lorong Bunga Kantan 10,Taman Kerian, 34200 Parit Buntar, Perak, Malaysia.
Tel : 6012-5645171 / 6012-4643401 / 605-7160967
Blog Widget by LinkWithin