Showing posts with label திருத்தமிழ் மடல். Show all posts
Showing posts with label திருத்தமிழ் மடல். Show all posts

Wednesday, June 05, 2013

அன்புள்ள மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களுக்கு..

[மனம் திறந்த மடல்]
 
இன்று 5-6-2013ஆம் நாள் கோலாலம்பூர், பெர்ல் இண்டர்நேசனல் விடுதியில் நடைபெறும் '10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டு' அரங்கத்திலிருந்து மலேசியத் தமிழாசிரியர்கள் தமிழ்க் கல்வியாளர்கள் சிந்தனைக்காக இதனை இங்குப் பதிவிடுகிறேன்.

இந்த மாநாட்டில் மலேசியா உள்பட இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், கனடா, மொரிசியசு, அசுத்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளின் பேராளர்கள் 'நாட்டுப் படைப்பு' அரங்கத்தில் பேசினார்கள். அந்தந்தப் பேராளர்களின் உரையின் நடுவில் என் மனத்தில் துளிர்த்த சிந்தனைகள் இவை.

அயல்நாடுகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து குடியேறிய நாடுகளிலும் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு எப்படி இருக்கின்றன தெரியுமா? எப்படி வளர்க்கப்படுகின்றன தெரியுமா? எவ்வாறு அவை காக்கப்படுகின்றன தெரியுமா?

தாய்மொழியாகிய தமிழுக்காகவும் தமிழ் சார்ந்த வாழ்வாதாரத்திற்காகவும் அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல் - ஆதாரம் இல்லாமல் பலவித இன்னல்களில் வாடுகிறார்கள்!

பல்வேறு இடர்களுக்கு நடுவில் அவர்கள் தமிழை மீட்கப் பாடுபடுகிறார்கள்!
பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் அவர்கள் தமிழைக் காக்கப் போராடுகிறார்கள்!

தமிழ்க்கல்வியை அறிமுகப்படுத்தவும் தமிழைக் கற்பிக்கவும் வழிதேடி வழிதேடி உருக்குலைந்து போகிறார்கள்.

அவர்கள் நாட்டு அரசாங்கப் பள்ளிகளில் பள்ளி நேரத்திலேயே தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாமல் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

வார இறுதியில் தமிழ் வகுப்புகள் நடத்தினாலும் மாணவர்களின் வருகை - ஆர்வம் - கற்கும் திறன் ஆகியவை கவலைக்கிடமாக இருப்பதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழைக் கற்பிக்க முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் - ஆசிரியர் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கழகம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னார்வத்தின் அடிப்படையில் மருத்துவர், வழக்கறிஞர், பொறியியலாளர், தகவல் தொழிநுட்பர், இல்லத்தரசிகள் போன்றோர் எந்தவொரு ஊதியமும் இல்லாமல்  தமிழைக் கற்பிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

தமிழ்க்கல்விக்கான முறையான கலைத்திட்டம் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் பாடநூல்கள் - பயிற்சிநூல்கள் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் அடுத்த தலைமுறை தாய்மொழி அறியாத இனமாகி விடுமோ என அஞ்சுகிறார்கள்.

அவர்களின் குழந்தைகள் தமிழ்ப் பண்பாடு தெரியாதவர்களாக ஆகி விடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள்.

அவர்களின் எதிர்கால சரவடிகள் தமிழிய வரலாற்றையும் வாழ்வியலையும் அறியாமல் இனமல்லா இனமாக ஆகிவிடுமோ என உண்மையிலேயே கலங்குகிறார்கள்! கண்ணீர் வடிக்கிறார்கள்!

இப்படியெல்லாம், பல்வேறு அல்லல்களுக்கும் அவலங்களுக்கும் இடையில் பெரும்பாடு பட்டு தமிழை வாழவைக்க.. வளர்த்தெடுக்க அரும்பாடு படுகிறார்கள்..! புலம்பெயர் நாடுகளின் அரசாங்கத்தின் போதுமான உதவிகள் இல்லாமல் தங்கள் தாய்மொழிக்காகவும் மொழி சார்ந்த வாழ்வியலுக்காகவும்  உயிரைப் பிழியும் பெரும்பாடு படுகிறார்கள்..!

அவர்களுடைய பாடுகளைப் பார்க்கும் பொழுது நமக்கும் இதயம் வலிக்கிறது..! அவர்களுடைய இடர்களைக் காணும் பொழுது நமக்கும் கண்ணீர் வருகிறது..! அவர்களின் ஈக (தியாக) உள்ளத்தைப் பார்க்கும் பொழுது நமக்கும் உள்ளம் நெகிழ்கின்றது..! அவர்களின் தமிழ் உணர்வைப் பார்க்கும் பொழுது நம் உடலும் சிலிர்க்கின்றது..!

தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் விழுமியங்களை மீட்டெடுக்கவும் காத்து வளர்க்கவும்.. அவர்களின் குழந்தைகளைத் தமிழ் இனமான உணர்வுள்ளவர்களாக - தமிழ்க் குழந்தைகளாக வளர்த்தெடுக்க மிக மிகக் கடுமையாக மெனக்கெட்டு உழைக்கிறார்கள்.

ஆனால், இங்கே மலேசியாவில்  நிலைமை எப்படி இருக்கின்றது..?

 அவர்களோடு ஒப்பிடும் பொழுது நமக்கு இடர்கள், இன்னல்கள், நெருக்கடிகள், போராட்டங்கள், சிக்கல்கள் எல்லாமே குறைவு. அவர்களோடு ஒப்பிடும் பொழுது நமக்கு வாய்ப்பு, ஏந்து (வசதி), சலுகை, உதவி, ஆதரவு ஆகிய அனைத்தும் மிக மிக அதிகம்.
அரசாங்க உதவியுடன் தொடக்கப் பள்ளியில் படித்து..
அரசாங்க உதவியுடன் இடைநிலைப் பள்ளியில் படித்து..
அரசாங்க உதவியுடன் கலைத்திட்டங்களில் நடைபயின்று..
அரசாங்க உதவியுடன் தேர்வுகளில் அமைர்ந்து தேர்வு பெற்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர்க் கல்லூரியில் பட்டயம்  பயின்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் பட்டம் பெற்று..
அரசாங்க உதவியுடன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை பெற்று..
அரசாங்க உதவியுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்து..
அரசாங்க உதவியுடன் கற்றல் கற்பித்தலை நடத்தி..
அரசாங்க உதவியுடன் பணியிடைப் பயிற்சிகளில் கலந்துகொண்டு..
அரசாங்க உதவிடன் உதியம், படிச்செலவு, ஓய்வூதியம் அனைத்தும் பெற்று..

இன்னும் இப்படி பற்பல பற்பல உதவிகளும் ஏந்துகளும் எல்லா ஆதரவுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் பெற்றுக்கொண்டு மலேசியாவில் நாம் ஆசிரியர்களாக இருக்கின்றோம்; விரிவுரைஞர்களாக இருக்கின்றோம்; பேராசிரியர்களாக இருக்கின்றோம்; முனைவர்களாக இருக்கின்றோம்.

நம்மில் எத்தனை பேர் தமிழுக்காகவும் - தமிழ் மாணவர்களுக்காகவும் - தமிழ்ப் பள்ளிகளுக்காகவும் - தமிழ்க் கல்விக்காகவும் - தமிழ் இனத்திற்காவும் - தமிழ்ப் பண்பாட்டுக்காகவும் - தமிழ் விழுமியங்களுக்காகவும் - தமிழ் வாழ்வியலுக்காகவும்..

உண்மையாக சிந்திக்கின்றோம்..?
உளமாற எண்ணிப் பார்க்கின்றோம்?
நேர்மையாக உழைக்கின்றோம்..?
தமிழ் உணர்வோடு செயல்படுகின்றோம்..?
தமிழ்ப் பற்றோடு பாடாற்றுகின்றோம்..?

நமது மாணவர்களும் இளையத் தலைமுறையினரும் எதிர்காலத்தில் தமிழிய உணர்வோடும் தமிழிய அறிவோடும் வாழ நம்மில் எத்தனை கல்வியாளர்கள் தெளிந்த அறிவோடும் தூய்மை உணர்வோடும் பணிசெய்கின்றோம்? பாடாற்றுகின்றோம்?

பல்லினம் வாழும் மலேசியச் சூழலைக் கருத்தில் கொண்டும்  படுவேகமாக வளர்ந்துவரும் உலகமயமாதல் சூழலைக் கவனத்தில் கொண்டும் நம்மில் எத்தனை கல்வியாளர்கள் அடுத்த தலைமுறை தமிழோடு வாழவும் தமிழராக வாழவும் திட்டமிட்டுச் செயல்படுகின்றோம்? தொலைநோக்கோடு திட்டமிடுகின்றோம்?

உணர்ச்சிவயப்படாமல் அறிவுவயமாகச் சிந்திக்க வேண்டிய வினாக்கள் இவை...!


இத்தகைய ஆசிரியர்கள், கல்வியாளர்கள் யாருமே இல்லை எனச் சொல்வது மிகப் பெரிய பொய். கண்டிப்பாகச் சில நூறு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சில பத்து விரிவுரைஞர், பேராசிரியர், முனைவர் ஆகிய கல்வியாளர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை! உண்மை! அவர்கள் அனைவரும் வணக்கத்திற்கு உரியவர்கள்; போற்றுதலுக்கு உரியவர்கள் எனில் மிகையன்று.

ஆனால், சில நூறு ஆசிரியர்களும். சில பத்து விரிவுரைஞர், பேராசிரியர், முனைவர் ஆகிய கல்வியாளர் மட்டும் போதுமா?

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில் 8000 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இடைநிலைப்பள்ளிகளில் 3000 தமிழாசிரியர்கள் இருக்கின்றார்கள். 100 விரிவுரைஞர்கள், பேராசிரியர்கள் இருக்கிறார்கள். 50 முனைவர்கள் இருக்கிறார்கள். ஆக, ஏறக்குறைய 11,000 தமிழ்க் கல்வியாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் மனதுவைத்தால்.. இவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்றால்.. இவர்கள் அனைவரும் உணர்வுபெற்று எழுந்தால்.. இவர்கள் அனைவரும் தமிழிய உள்ளத்தோடும் உணர்வோடும் உழைத்தால்..

எதிர்காலத்தில் உலகத் தமிழர்களுக்கே வழிகாட்டும் வெற்றித் தமிழர்களாக மலேசியத் தமிழ் மாணவர்கள் திகழ முடியும்!

வருங்காலத்தில் உலகத் தமிழினத்திற்கே தலைமையேற்கும் தகைமைசான்ற தமிழினம் மலேசியாவில் உருவாக முடியும்!

மலேசியத் தமிழ் ஆசிரியர்களே.. கல்வியாளர்களே வாருங்கள்..

தமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழராக ஒன்றுபடுவோம்! 
தமிழுக்காக ஒன்றுபடுவோம்!
@சுப.நற்குணன், திருத்தமிழ்

Sunday, August 19, 2012

அன்புள்ள இரத்தினவள்ளி அம்மையார் அவர்களே..




வணக்கம். தங்களின் மேலான கவனத்திற்கு இந்த மடலை விடுக்கின்றேன். இம்மடல் வழியாகத் தங்களுக்குச் சில விளக்கங்கள் கூறுவதோடு சில வினாக்களுக்குத் தங்களிடமிருந்து விளக்கம் பெற விரும்புகின்றேன்.

2. அதற்கு முன்னதாக, தமிழ்க் குமுகாய நலன்கருதி தாங்கள் ஆற்றிவருகின்ற நற்பணிகளுக்கு மனமார்நத பாராட்டுகளைப் பதிவுசெய்ய விழைகிறேன். தமிழ் மக்கள், தமிழ்க் கலைஞர்கள், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் எனப் பல்வேறு தரப்பினருக்கு நன்கொடைகளை வாரி வழங்கி ஆதரவு செய்துவரும் தங்களின் கொடையுள்ளத்தை வணங்குகின்றேன்.


3. தங்களின் மீதும் தாங்கள் ஆற்றிவரும் அரும்பணிகள் மீதும் எனக்கு எப்பொழுதுமே ஆழ்ந்த மதிப்பு உண்டு. அதேவேளையில், ஒட்டுமொத்த குமுகாய நன்மையைப் பாதிக்கின்ற வகையில்; நமது மொழி இன நலத்தைப் பாழ்படுத்தும் வகையில்; நமது அடிப்படை உரிமைகளைச் சீரழிக்கும் வகையில் அண்மையில் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு எதிர்வினையாடும் உரிமையும் எனக்கு உண்டு என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மடலை எழுதுகின்றேன். இதன் வழியாகத் தங்களைக் குறைத்துப் பேசும் எண்ணமோ அல்லது சிறுமைபடுத்தும் எண்ணமோ எனக்குத் துளியும் கிடையாது என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

4.   அண்மையில், “தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்என்று தாங்கள் தெரிவித்துள்ள கருத்து  நாளிதழ்களில் செய்திகளாக (8.8.2012, 19.8.2012) வெளிவந்துள்ளன. அச்செய்திகளின் சாரம் பின்வருமாறு:-

) மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் தமிழை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஆ) தமிழ்ப்பள்ளிகளில் வெறும் 30% மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். மீதமுள்ள 70% இந்திய மாணவர்கள் தேசியப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.

இ) இவ்விரு கூற்றுகளின் அடிப்படையில், தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
  
உ) அதற்காக மலேசியத் தமிழ்மொழி நடவடிக்கை என்ற இயக்கத்தின் வழியாக கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

மக்கள் ஓசை செய்தி - 19.08.2012
5. மேற்சொன்ன கூற்றுகளைத் தாங்களும் மேலும் இருவரும் வலுவாக ஆதரிக்கின்றீர்கள். அந்த இருவரில் ஒருவர் பத்திரிகை விற்பனையாளர் சங்கத் தலைவர். இன்னொருவர் உலோக மறுசுழற்சி சங்கத் தலைவர். தாங்களும் மேலும் இருவரும் தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழி, தமிழ்க்கல்வி ஆகிய எந்தவொரு தளத்திலும் காலூன்றி நிற்காதவர்கள் என்னும் சூழலில் இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர்த்திருக்கலாம். எனினும், நீங்கள் மூவரும் தமிழர்கள் அல்லது இந்தியர்; தமிழ்ப்பள்ளி, தமிழ்மொழி, தமிழ்க்கல்வி ஆகியவற்றின் மீது உங்களுக்கும் அக்கறையுண்டு என்ற ஒரு சிறு ஆறுதலை எனக்கு நானே சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.


6. தங்களிடமும் தங்கள் குழுவினரிடமும் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.


அ) தமிழ்ப்பள்ளிகளில் 30% மாணவர்களும், தேசியப் பள்ளிகளில் 70% மாணவர்களும் படிக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்திற்குத் தங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா?

ஆ) தேசியத் தொடக்கப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கினால், அங்குப் படிக்கும் அனைத்து இந்திய மாணவர்களும் தமிழைப் படிப்பார்கள் என்று உங்களால் உறுதிபடுத்த முடியுமா?

இ) இந்தியர் என்ற இனப்பெயரைத் தங்கள் பிறப்பு ஆவணத்தில் குறிக்கப்பெற்றிருக்கும் அனைவரும் தமிழைப் படிக்க முன்வருவார்களா?

உ) தற்போது தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் (BTSK) கற்பிக்கப்படுகின்றது. மேலும் 15 பெற்றோர்கள் விரும்பினால் தாய்மொழி வகுப்பு (POL) நடத்தப்பட முடியும். இந்த இரு வழிகளில் தமிழைப் படிக்கும் வாய்ப்பு இருந்தும், எத்தனை இந்திய மாணவர்கள் தமிழை எடுத்துப் படிக்கின்றனர் என்ற புள்ள விவரமோ அல்லது தரவுகளோ தங்களிடம் உள்ளனவா?

ஊ) தேசியத் தொடக்கப்பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்கினால், அது ஒரே ஒரு தமிழ்ப் பாடமாக மட்டுமே இருக்குமே தவிர, ஒருபோதும் அது ‘தமிழ்க்கல்வி’ ஆகாது என்ற வேறுபாட்டைத் தாங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?
  

எ) தேசியப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கினால், எல்லாப் பெற்றோரும் தமிழ்ப் பள்ளிகளைப் புறக்கணித்துவிட்டு, தேசியப் பள்ளிகளுக்குப் படையெடுத்துச் செல்வதையும் இதனால் காலப் போக்கில் தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்படுவதையும் இறுதியில் இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகளே இல்லாத நிலைமை உருவாகுவதையும் தாங்கள் வரவேற்கிறீர்களா?

7. இந்த நாட்டில் கடந்த நூறாண்டுகளாகத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் பலதரப்பட்ட போராட்டங்களுக்கு நடுவிலும் சிக்கிச் சிதறி, தட்டுத் தடுமாறி குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்வி தொடர்பாக ஆயிரமாயிரம் சிக்கல்களும் நெருக்கடிகளும் இன்றவும் முழுமையாகத் தீர்ந்தபாடில்லை. இருந்தாலும், நாடு விடுதலையான காலத்தில் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்த நிலையின் இன்று 523 பள்ளிகள் மட்டுமே நிலைத்திருக்கின்றன. இந்தத் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதால் நம் சமுதாயம் அடைந்திருக்கும் சில நன்மைகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-

அ) நம் நாட்டில் தமிழ்மொழி இன்றளவும் வளமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.
ஆ) நாட்டின் கல்விமொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி இடம்பெற்றிருக்கின்றது.
இ) நாட்டின் அரசாங்கக் கேந்திரத்தில் ஒரு மொழியாகத் தமிழும் இடம்பெற்றிருக்கின்றது.
ஈ)  தமிழ்மொழி சார்ந்த கலை, இலக்கிய, பண்பாட்டு, வாழ்வியல் கூறுகள் செழிப்பாக இருக்கின்றன.
உ) பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அல்லது இந்தியர்களுக்கு இந்த நாட்டில் வாழ்வாதாரம், பொருளியல் வளம், வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
ஊ) தமிழ் நாளிதழ்களும் ஒலி, ஒளி, மின்னியல் ஊடகங்கள் செயல்படுகின்றன.
எ) தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகள், மாநாடுகள், ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன.
ஏ) தமிழ் மக்கள் அதிகாரிகளாகவும் துறைத் தலைவர்களாகவும் பணியாற்றும் அரசாங்கப் பணியிடங்கள் இருக்கின்றன.
ஐ) தனிமனித உரிமைகளாகிய தாய்மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம், கல்வி ஆகியவற்றைப் பேண முடிகின்றது.

8. ஏன் இதனைச் சொல்ல வருகிறேன் என்றால், தாங்களும் தங்கள் குழுவினரும் முன்மொழியும் “தேசியத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம்” என்னும் திட்டம் மேலே குறிப்பிட்ட அனைத்து நலன்களையும் இல்லாமல் செய்துவிடும். காலப் போக்கில் நமது குமுகாயத்தின் ஆணிவேராக இருக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மாபெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். நமது அடிப்படை உரிமைகளையும் நமது அடையாளங்களையும் நமது இருப்பையும் மெதுமெதுவாகக் கொல்லும் ‘நஞ்சாக’ இந்தத் திட்டம் உருவாகிவிடும்.

9. ஆகவே, நூறாண்டு காலமாக நமது மக்களுக்கும் தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்விக்கும் இடையில் இருந்துவரும் தொப்புள்கொடி உறவைத் துண்டிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த ஆபத்தான திட்டத்தை; எதிர்காலத் தலைமுறையின் தாய்மொழிக் கண்ணைப் பறித்து அவர்களைத் தாய்மொழி அறியாத குருடர்களாக ஆக்கப் போகும்  இந்த அவலமான திட்டத்தை; வருங்காலத்தில் நமது குழந்தைகளை எந்தவித அடையாளமும் இல்லாத ஏதுமற்ற ஏதிலிகளாக ஆக்கப்போகும் இந்த ஆபத்து நிறைந்த திட்டத்தைத் தயவுசெய்து உடனடியாகக் கைவிடுமாறு தங்களைப் பணிவுடன் வேண்டுகிறேன்.

10. அதற்கு மாற்றாக, தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் ஏதேனும் நன்மை செய்ய நினைக்கும் தங்களைப் போன்ற செல்வாக்கு நிறைந்த நல்ல மனிதர்கள் செய்ய வேண்டிய சில திட்டங்களை முன்மொழிகின்றேன்.

அ) ‘குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புங்கள்’ என்னும் இயக்கத்தை (Campaign) நடத்தலாம்.
ஆ) தமிழ்ப்பள்ளிகளில் தரமான கற்றல் கற்பித்தல் நடைபெறுவதற்கு வேண்டிய ஏந்துகளைச் (வசதிகளை) செய்து தரலாம்.
இ) தமிழ்ப்பள்ளியில் படித்து இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அனைவரும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரப்புரை செய்யலாம்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்;
சுப.நற்குணன்.



Blog Widget by LinkWithin