Showing posts with label 7.தமிழ்ச் சான்றோர். Show all posts
Showing posts with label 7.தமிழ்ச் சான்றோர். Show all posts

Wednesday, November 23, 2011

மதுரை இளங்குமரனார் மலேசியா வருகை



#தம்முடைய ஓருடலில் தமிழையும் திருக்குறளையும் ஈருயிராகத் தாங்கி வையத்துள் வாழ்வாங்கு வாழும் தமிழ்ப் பெரியார்..

#திருக்குறள் தவச்சாலை நிறுவி வள்ளுவர் காட்டிய வழியே வையக வழி எனத் தமிழ் வாழ்வியலைப் போற்றிப் பரப்பும் பேரறிஞர்..

#தமிழைத் தமிழாக மீட்கவும் காக்கவும் வாழ்நாளையே ஒப்புக்கொடுத்து, இதுவரை 390க்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதியிருக்கும் ஒப்பற்ற தமிழறிஞர்..

#தமிழியல் கரணங்கள்(சடங்கு) வழியாகவும் தெய்வத் திருமறையாம் திருக்குறளின் சான்றாகவும் இதுவரை 4000க்கும் மேற்பட்ட தமிழ்த்திருமணங்களை நடத்தி வைத்த தமிழ் அந்தணர்..

#ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகிய குண்டலகேசியை மீட்டெழுதி உயிர்கொடுத்த அரும்பெறல் சான்றாளர்..

#அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் 52 கூட்டமைப்பின் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட தமிழ்க்கடல்..

செந்தமிழ் அந்தணர் ஐயா மதுரை இளங்குமரனார் மலேசியா வந்துள்ளார். ஐயா அவர்களின் தாள்பணிந்து வணங்கி மலேசியத் தமிழுணர்வாளர்கள் சார்பில் வருக வருகவென வரவேற்பு மொழிகின்றேன்.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய ஐயா இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பள்ளிக்கூடமே இல்லாத தம்முடைய சொந்த ஊரான வாழவந்தான் புரத்தில் தாமே சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவியவர். நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார்.

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம், புறத்திரட்டு, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும்.

திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட புலவர் ஐயா இளங்குமர னார் வாழும் வள்ளுவராகவே விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.

எஞ்சியநாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.

புலவர் ஐயா அவர்கள் தற்போது நமது மலேசியாவுக்கு வந்திருக்கிறார். நாடு முழுவதும் சுற்றுச்செலவு மேற்கொண்டு வருகிறார். அடுத்து வரும் இரண்டு வாரக் காலத்திற்கு நாடு முழுவதும் அவருடைய பொழிவுரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஐயா அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியை தங்கள் ஊர்களில் ஏற்பாடு செய்ய விரும்பும் தமிழன்பர்கள் கீழ்க்காணும் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தமிழ்த்திரு அருள்முனைவர்     : 017-3314541
தமிழ்த்திரு மாரியப்பனார்      : 012-3662286


தமிழ்க்கடல் ஐயா மதுரை இரா.இளங்குமரனாரின் மலையகப் பயணம் எல்லாவகையிலும் வெற்றிகரமாக அமைந்திட வேண்டும். இப்பயணத்தின் வழியாக மலேசியத் தமிழர்கள் புது நம்பிக்கையும் எழுச்சியும் பெறல் வேண்டும்.

புலவர் ஐயா, நிலையான நலத்துடனும் நீடித்த வாழ்நாளுடனும் இன்றுபோல என்றும் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் வலுவும் வளமும் உட்டிட எல்லாம் வல்ல இயற்கைச் செம்பொருளாம் இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!

@சுப.நற்குணன், மலேசியா.


Thursday, November 17, 2011

மலேசியத் தமிழறிஞர் மு.மணிவெள்ளையனார் காலமானார்

மலேசியாவின் தமிழறிஞர்.. தமிழ் இலக்கியக் கழகத் தலைவர்.. தமிழியல் பட்டயக் கல்வியை மலேசியாவில் அறிமுகப்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழியல் கல்விப் பட்டதாரிகளை உருவாக்கியவர்.. தமிழ்ப்புனல் ஐயா மு.மணிவெள்ளையனார் (M.Lit) அவர்கள், 16.11.2011இல் இயற்கை எய்தினார். 
 
  • மலேசியாவில் தமிழைத் தமிழாகச் செழிக்கச் செய்த அறிஞர்களுள் ஒருவர். 
    விளம்பரமே இல்லாமல் அமைதியாகத் தமிழுக்குப் பெரும் பணி ஆற்றிய பெருந்தகை.  
    திருக்குறள் நெறியில் வாழ்ந்து, இளையோர் மனங்களில் குறளியச் சிந்தனைகளை விதைத்து அரும்பணி ஆற்றியவர். 
    தமிழியத் திருமணங்களை நடத்தி தமிழியக் குடும்பங்களை உருவாக்கிய தமிழ்த் தொண்டர்.
    தமிழில் பிறமொழி கலப்பதை எதிர்த்து, தமிழ் தூய்மையாக இருக்க காலமெல்லாம் பாடாற்றிய கொள்கை மறவர்.
    தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் புலமை கொண்ட நல்லறிஞர்; நற்றமிழர்!
    தமிழ் ஆசிரியர்களையும், இல்லத்தரசிகளையும், பணி ஓய்வு பெற்றவர்களையும் தமிழியல் பட்டக் கல்வி பயிலச் செய்து பட்டதாரிகளாக்கி பெருமைபடச் செய்த பண்பாளர்; நற்றமிழ்ச் சிந்தனையாளர்.     
     அன்னாரின் மறைவு நற்றமிழர்க்குப் பெரும் இழப்பாகும். அன்னாரின் ஆதன் அமைதி பெற இறைமையை இறைஞ்சுவோம்!
    @சுப.நற்குணன்

Friday, June 18, 2010

மலேசியத் தமிழறிஞருக்கு அஞ்சல் தலை வெளியீடு

தமிழ் அறிஞர் ஒருவருக்கு மலேசியாவில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தகு சிறப்பினைப் பெற்றிருக்கும் அந்தத் தமிழறிஞர் பாவலர் அ.பு.திருமாலனார் என்பவர். தமிழ்த் தலைவருக்கு ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்யப்படுவது மலேசிய வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமையளிக்கக்கூடிய இந்தச் செய்தி இங்கு பதிவிடப்படுகிறது. @சுப.ந.


மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாருக்கு ‘போஸ் மலேசியா’ (மலேசிய அஞ்சல் துறை) அஞ்சல் தலை வெளியிட்டிருப்பது, கழகத்திற்கு மட்டும் அல்லாமல் மலேசியத் தமிழ்ச் சமுதாயத்திற்கே பெருமிதம் சேர்க்கும் வரலாற்றுப் பதிவு என்று மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பற்றும் மொழிப்பற்றும் இணைந்த தமிழ்நெறி வித்துகளை தமிழ் நெஞ்சங்களில் விதைத்த பாவலர் ஐயா திருமாலனாரின் 79ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சூன் திங்கள் 8ஆம் நாள் அஞ்சல் நிறுவனமான ‘போஸ் மலேசியா’ அவருடைய உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.

பேரா மாநிலம், செலாமா பட்டணத்தில் தோன்றிய திருமாலனார், ஆரம்பத்தில் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து தமிழியக் கடமைகளை ஆற்றினாலும் காலத்தால் தமிழ் நெறிக்காகத் தனி இயக்கம் கண்டார்.

தமிழர்கள் கடபிடிக்க வேண்டிய வாழ்வியல் முறைகள், தமிழியச் சிந்தனைகள், தமிழ்க் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் – பொருள் துலங்கும்படி பெயர் சூட்டுவது; குடும்ப நிகழ்வுகளிலும் பொது நிகழ்வுகளிலும் தமிழியப் பண்பாட்டைப் பின்பற்றுதல்; தாய்மொழியை உயிர்மூச்செனக் கொள்ளுதல் போன்ற சிந்தனைகளை எல்லாம் பல தமிழ் நெஞ்சங்களில் விதைத்தவர் இவர்.

அப்படிப்பட்ட தமிழ்த் தகைமையாளருக்கு இவ்வாண்டு பிறந்த நாளில் சிறப்புச் செய்ய வேண்டும் என்று மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைமையகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முனைப்புகளுக்கு ஆதரவு தந்துள்ள ‘போஸ் மலேசியா’ நிறுவனத்திற்கு மலேசியத் தமிழ் மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று இரா.திருமாவளவன் கூறினார்.

ஒரு தமிழ்த் தலைவருக்குப் போஸ் மலேசியா சிறப்பு செய்வது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாலனாரின் அஞ்சல் தலைகளை வாங்க விரும்புவோர் 016-3262479 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

பி.கு: பாவலர் ஐயா அ.பு.திருமாலனார் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கவும் அன்னாரின் அரிய தமிழ்த் தெண்டூழியங்களைப் பற்றி அறியவும் இங்குச் சொடுக்கவும்.

தொடர்பான செய்திகள்:

1.பாவலர் அ.பு.திருமாலனாரின் நூல்:- வள்ளலார் கண்ட சமயநெறி


  • செய்தி:- மலேசிய நண்பன் நாளிதழ் (18.6.2010)

Wednesday, May 05, 2010

முத்தமிழ் வளர்த்தெடுத்த மலையகத் தமிழறிஞர்

இன்று 5.5.2010, முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் பிறந்தநாள். வாழும் காலமெல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்து 18.10.1997இல் அதிகாலை மணி 5.55க்கு இறைவனடி சேர்ந்த அமரர் முதுபெரும் பாவலர் ஐயா அவர்களை இந்தத் தருணத்தில் நினைத்துப்பார்த்து இப்பதிவினை எழுதுகிறேன்.

சா.சி.சுப்பையா என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் 5.5.1925இல் தமிழகம், இராமநாதபுற மாவட்டத்தில் இரணசிங்கபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். காதர்மீரான், பிரான்மலை ஆகிய புலவர் பெருமக்களிடம் தமிழ் இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் முதலியவறைக் கற்றுத் தேர்ந்தார். தம்முடைய தந்தை வழியில் மருத்துவம், வர்மக்கலை, சிலம்பம் முதலிய கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார்.

1938இல் தமிழகத்திலிருந்து மலேசியாவுக்குக் குடிபெயர்ந்த பாவலர் ஐயா, பேரா மாநிலத்தில் உள்ள ஈப்போ என்னும் ஊரில் வாழ்ந்தார். தொடக்கக் காலத்தில் தமிழவேள் கோ.சாரங்கபாணி ஐயாவின் “தமிழ் முரசு” நாளிதழ் ஏற்படுத்திய எழுச்சியால் தமிழ் உணர்வாளராகவும், பற்றாளராகவும் பகுத்தறிவுச் சிந்தனையாளராகவும் விளங்கினார்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தனித்தமிழ் அறிஞர்களின் மீது ஏற்பற்ற அளவிறந்த பற்றுதலால், 1960இல் மலேசியாவில் தனித்தமிழ் இயக்கம் கண்டார். பாவாணர் மன்றம் என்றே அதற்குப் பெயரும் சூட்டினார். பாவாணரின் பணிகளுக்குப் பல்லாற்றானும் துணையாக இருந்துள்ளார். பாவாணரின் குமரிக்கண்ட கொள்கைகள், வேர்ச்சொல்லாய்வுகள், தமிழின் தனித்திறங்கள் யாவும் மலேசியாவில் பரவுவதற்கு கரணியமாக இருந்தவர் இவர்.

அதேபோல் 1974இல் பெருஞ்சித்திரனார் மலேசியாவுக்கு வந்தபொழுது அவருடைய சுற்றுச்செலவை ஏற்பாடு செய்து நாடு முழுமைக்கும் தமிழ்வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தவர்களில் முக்கியமானவராக இருந்தார்.

துளியும் அரசியல் ஈடுபாடு இல்லாமல் மொழி, இன, சமயம், பண்பாடு, இலக்கியம் சார்ந்த அரும்பணிகளை அயராது செய்தார். மலேசியாவில் தென்மொழி இதழ்களைப் பரப்புவதன் வாயிலாகத் தனித்தமிழ் உணர்வைச் செழிக்கச் செய்தார். பலரைத் தனித்தமிழ் பற்றாளர்களாக வளர்த்தெடுத்தார். அதுமட்டுமல்லாமல் இவர் பன்னூலாசியராகவும் விளங்கினார். தம்மை நாடிவருவோருக்கு மனமுவந்து சித்த மருத்துவம் செய்து வந்தார்.

பாவலர் ஐயா சிறந்த பாடகராகவும் விளங்கினார். தமிழ்ப் புலமையின் காரணமாக இலக்கிய வகுப்புகளை நடத்தும் ஆசிரியராகவும் இருந்தார். நிலைபெற்ற தலைவன், தமிழருவி போன்ற நூல்களை எழுதி இருப்பதால் இவர் நூலாசிரியராகவும் பரிணமித்து இருக்கிறார்.

இவருடைய அரும்பணிகளைப் பாராட்டி ‘தமிழ்ச்செல்வர்’ என்னும் விருதும் பொற்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. 1971இல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் “சித்த மருத்துவர் செந்தமிழ்ப்ப்புலவர்” என்னும் விருது வழங்கி பாவலர் ஐயாவைச் சிறப்பித்துள்ளார். அதே 1971-ஆம் ஆண்டு “பாவலர் செந்தமிழ்க்குறிஞ்சி” என்ற விருதையும் பெற்றுள்ளார். மேலும் 1976இல் “செந்தமிழ்க் கவிமணி” என்ற விருதையும் 1989இல் மலேசியத் திராவிடர் கழகம், பேராசிரியர் தமிழண்ணல் தலைமையில் நடத்திய ஒரு விழாவில் “தமிழனல்” என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்தது.

பாவலர் ஐயா போன்ற நற்றமிழ் அறிஞர் வாழ்ந்த பேரா மாநிலமானது இன்றளவும் தமிழ்வளம் நிறைந்த மாநிலமாக விளங்கி வருகின்றது. அன்னாருடைய அருந்தமிழ் பணிகள் காலத்தால் போற்றத்தக்கவை என்றால் மிகையன்று. மலேசியாவில் தமிழ் வளர்த்த முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் தமிழ்க்கூறு நல்லுலகம் போற்றும் தமிழறிஞராக நிலைபெற்றிருப்பார் என்பது உண்மை.

மேலே இதுவரை சொன்ன முதுபெரும் பாவலர் ஐயா அவர்களைப் போல, அவர் காலத்தில் வாழ்ந்து மலேசியாவில் தமிழைக் காத்து – வளர்த்து – போற்றியவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய ஈகத்தினால் இன்று மலேசியாவில் தமிழ் நிலைபெற்றிருக்கிறது என்றால் அதை யாரும் மறுத்துவிட முடியாது.

அத்தகையவர்களுள் சிலரைக் கீழே காணலாம்.






தமிழ் ஞாயிறு பாவலர் அ.பு.திருமாலனார்
மலேசியத் தமிழ்நெறிக்கழகத் தோற்றுநர்.
மொழி – இனம் – சமயம் என்ற முப்பெரும் கோட்பாட்டை மலையகத்தில் உருவாக்கி மாபெரும் தமிழ் எழுச்சிக்கு வித்திட்டவர். (மேலும் படிக்க)




  • தமிழவேள் கோ.சாரங்கபாணி
    தமிழ் எங்கள் உயிர் என்ற முழக்கத்துடன் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழை நிலைநிறுத்தியவர். நாட்டிலேயே மிகப்பெரிய தமிழ் நூலகத்தை மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தியவர். தமிழ் இளைஞர் மணிமன்றம் என்னும் பேரியக்கம் கண்டு, நாடு முழுவதும் தமிழர் திருநாள் விழாக்களை நடத்தி தமிழ் உணர்வைச் செழிக்கச் செய்தவர். (மேலும் படிக்க)





உலகத் தமிழர் இர.ந.வீரப்பனார்,
உலகம் முழுவதும் தமிழர் வாழும் நாடுகளுக்கெல்லாம் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு உலகத் தமிழருக்காக இயக்கம் கண்டவர். (மேலும் படிக்க)





முத்தமிழ் வித்தகர் முருகு.சுப்பிரமணியம்,
மலேசியாவில் தமிழ் நேசன், தமிழ் முரசு ஆகிய நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றி தமிழுக்கும், தமிழர்க்கும் அளப்பரிய தொண்டு செய்தவர். எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்து மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அரும் பாடாற்றியவர். தமிழ்ப் பள்ளிகளை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் நிதித்திட்டத்தை உருவாக்கியவர்.

  • நனிநன்றியுடன்:-











Thursday, March 04, 2010

புலவர் மதுரை இளங்குமரனார் மலேசியச் சுற்றுச்செலவு

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் தமிழ்க்கடல் மதுரை இரா. இளங்குமரனார் குறிப்பிடத் தகுந்தவர்.


தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய ஐயா இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார்.

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம், புறத்திரட்டு, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும்.

திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட புலவர் ஐயா இளங்குமர னார் வாழும் வள்ளுவராகவே விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.

எஞ்சியநாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.

புலவர் ஐயா அவர்கள் தற்போது நமது மலேசியாவுக்கு வந்திருக்கிறார். நாடு முழுவதும் சுற்றுச்செலவு மேற்கொண்டு வருகிறார். அடுத்து வரும் இரண்டு வாரக் காலத்திற்கு நாடு முழுவதும் அவருடைய பொழிவுரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வந்த ஊர்களில் உள்ள தமிழன்பர் பெருமக்கள் திரளாகச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புலவர் ஐயா அவர்களின் செறிவான பொழிவுகளைக் கேட்டு பயனடைய வேண்டும்.

1) 1-3-2010 (திங்கள்):- கிள்ளானில் “தமிழின வீழ்ச்சியும் எழுச்சியும்” ஏற்பாடு:- கிள்ளான் தமிழ் நெறிக் கழகம். (தமிழ்த்திரு.மாரியப்பனார் 012-3662286)

2) 3-3-2010 (அறிவன்):- பெட்டாலிங் செயாவில் “நடைமுறை வாழ்க்கைக்கு வள்ளுவம்” ஏற்பாடு:- பெட்டாலிங் செயா த.இ.மணிமன்றம் (தமிழ்த்திரு.சி.மஇளந்தமிழ் 012-3143910)

3) 4-3-2010 (வியாழன்):- தைப்பிங்கில் “கடவுள் வாழ்த்து” ஏற்பாடு:- தமிழியல் ஆய்வுக் களம் (தமிழ்த்திரு.முத்தரசன் 012-5610029)

4) 5-3-2010 (வெள்ளி):- பாரிட் புந்தாரில் “தமிழ் எழுத்துச் சீர்மை தேவையா?” ஏற்பாடு:- தமிழ் வாழ்வியல் இயக்கம் (தமிழ்த்திரு.க.முருகையன் 012-4287965)

5) 6-3-2010 (காரி):- கிள்ளானில் “சீவகாருண்ய ஒழுக்கம்”, ஏற்பாடு:- கிள்ளான் வள்ளலார் மன்றம் (தவத்திரு.கோபாலசாமி அடிகளார்)

6) 7-3-2010 (ஞாயிறு):- கோலாலம்பூர் பத்துமலையில் “மொழித்தூய்மை இனத்தின் காப்பு” காலை மணி 10.00க்கு, ஏற்பாடு:- மலேசியத் தமிழ் நெறிக் கழகம் (தமிழ்த்திரு.இரா.திருமாவளவன் 016-3262479)

7) 7-3-2010 (ஞாயிறு):- கோலாலம்பூர் சோமா அரங்கில், மாலை மணி 7.00க்கு, ஏற்பாடு:- தமிழ்ச்சங்கம் (தமிழ்த்திரு.அன்பழகன் 019-2362321)

8) 8-3-2010 (திங்கள்):- அசுட்ரோ வானவில் தொலைகாட்சி நேர்க்காணல்

9) 11.3.2010 (வியாழன்):- பாகாவ் நெகிரியில் “திருக்குறளும் உயர்தர தமிழரும்” ஏற்பாடு சிரம்பான் இந்தியர் சங்கம் (தமிழ்த்திரு.அருணாசலம் 012-3992574)

10) 12-3-2010 (வெள்ளி):- பந்திங்கில் (மேல் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்)

12) 13-3-2010 (காரி):- சொகூர் பாருவில், ஏற்பாடு:- தமிழ் நெறிக் கழகம் (தமிழ்த்திரு.துரை.இலக்குவன்)

13) 14-3-2010 (ஞாயிறு):- சிங்கை புறப்பாடு

14) 15-3-2010 (திங்கள்):- தமிழகப் புறப்பாடு

குறிப்பு:- மேலே நேரம் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்த்து மற்றவை மாலை மணி 7.00க்கு நடைபெறும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

தமிழ்க்கடல் ஐயா மதுரை இரா.இளங்குமரனாரின் மலையகப் பயணம் எல்லாவகையிலும் வெற்றிகரமாக அமைந்திடவும் இப்பயணத்தின் வழியாக மலேசியத் தமிழர்கள் புது நம்பிக்கையும் எழுச்சியும் பெறல் வேண்டும்.

புலவர் ஐயா, நிலையான நலத்துடனும் நீடித்த வாழ்நாளுடனும் இன்றுபோல என்றும் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் வலுவும் வளமும் உட்டிட எல்லாம் வல்ல இயற்கை செம்பொருளாம் இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!
  • (புலவர் ஐயா அவர்களைப் பற்றிய குறிப்பு முனைவர் மு.இளங்கோவன் வலைப்பதிவிலிருந்து எடுத்தாளப்பட்டது. - நன்றி)

Friday, September 04, 2009

மலையகம் கண்ட ‘உலகத் தமிழர்’ ஐயா இர.ந.வீரப்பனார்

நமது மலேசியா கண்டெடுத்த தமிழ்ச் சான்றோர்களில் அமரர் ஐயா.இர.ந.வீரப்பனார் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். உலகமெங்கும் தமிழர் இருக்கலாம். ஆனால், ‘உலகத் தமிழர்’ என்று தமிழ்க்கூறு நல்லுலகம் பெருமைப்படுத்திய பெருமகனார் இவர் மட்டும்தான்.

அன்னாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியும், 'இர.ந.வீரப்பனார் வாழ்வும் வரலாறும்' நூல் வெளியீடும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா.பழ.நெடுமாறனார் தலைமையில் கோலாலம்பூரில் மாபெரும் எழுச்சியோடு நடைபெற உள்ளது.

தமிழையும் – தமிழரையும் – தமிழர் வாழ்வையும் ஆராய்வதையே தம்முடைய வாழ்நாள் பணியாக மேற்கொண்டவர் ஐயா இர.ந.வீரப்பனார். ஏறக்குறைய 43 நாடுகளுக்குப் சுற்றுச்செலவு(பயணம்) மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களிடம் உறவு பாராட்டியவர் - கள ஆய்வுப்பணி செய்தவர். 40 நாடுகளில் வாழும் தமிழருக்காக – தமிழ் வாழ்வுக்காகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.

தம் வாழ்நாளில் 33 அரிய நூல்களை எழுதி வெளியிட்டு, மலேசியத் தமிழர்களுக்கே பெருமை தேடிக் கொடுத்தவர் – உலகத் தமிழரிடையே மலேசியத் தமிழையும் தமிழரையும் அறிமுகம் செய்துவைத்தவர். உலகத் தமிழர்களையும் அவர்களின் அயலக வாழ்வையும் மலேசியத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியவர்.

ஐயா.இர.ந.வீரப்பன் அவர்கள் 8.6.1930இல் கண்டி நுவரேலியா தோட்டம், இலங்கையில் பிறந்தவர். இருந்தாலும், அவர் வாழிடமாக நமது மலேசியாவைத் தேர்ந்து கொண்டார். இவருடைய பெற்றோர்கள் நடேசன் – இரத்தினம் வாழ்விணையர். இவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து பின்னர் மலேசியாவில் குடியேறினார்.

மலேசியாவையே தாய்நாடக ஏற்றுக்கொண்டு மலேசியத் தமிழருக்காகவே தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்புக்கொடுத்தார். தொடக்கத்தில், பல தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றி ஆசிரியப் பணியை இறைப்பணியாகவே மேற்கொண்டிருந்தார்.

1953இல் ஈச்ச மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி தொடர்ந்து தென்னை மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, இரசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பந்திங் சுங்கை சோ தமிழ்ப்பள்ளி, காப்பார் நகரத் தமிழ்ப்பள்ளி என பணியாற்றி 1985இல் ஓய்வு பெற்றார். அதன் பின்னர், 1990 வரையில் கிள்ளான் அப்துல் சமாட் இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி கற்பித்துள்ளார்.

மற்றவர்களைப் போல அவரவர் பொறுப்பை அவரவர் செய்வர் என்று அமைதி கொள்பவரல்லர் இவர். எந்தச் செயலானும், அதில் தாமும் ஈடுபட்டு பிறருக்கும் செயலூக்கம் ஊட்டுவதில் வல்லவராக இருந்தார். செயல்படாதவர்களைத் துணிந்து அகற்றுவதிலும் இவர் தயக்கம் காட்டியதும் இல்லை.

மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கியக் கழகம் முதலான அமைப்புகளை மலேசியாவில் தோற்றுவித்தவர் ஐயா வீரப்பனார்தான். இன்றும் இவ்விரு இயக்கங்களும் தமிழுக்கு ஆக்கமான பணிகளை அமைதியாகச் செய்து வருகின்றன.

சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் என பல துறைகளில் ஈடுபட்டு காலத்தால் எண்ணத்தக்க அரிய தொண்டாற்றிய ஐயா இர.ந.வீரப்பனார் 3.9.1999இல் இறைவனடி சேர்ந்தார்.

தமிழனின் மண் – இனம் – மொழி – பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியவர் மட்டுமன்று, அதற்குரிய ஆக்கமான பணிகளை நிலைபடச் செய்தவரும் கூட. இதற்குச் சில சான்றுகளையும் அடுக்கிக் கூறலாம்.

ஆரிய மேலாண்மையும் ஆணாதிக்கச் சிந்தனையும் சூழ்ந்திருந்த தமிழ் மக்களிடம் பெண்மையைப் போற்றுதலே தமிழர் மரபு என்பதை வலியுறுத்தும் வண்ணம் தம் பெயருக்குரிய தலையெழுத்தாக முதலில் தாயின் பெயரையும் அடுத்ததாக தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டார்.

தாம் கைக்கொண்ட தமிழியச் சிந்தனைகளை தம்முடைய குழந்தைகளுக்கும் ஊட்டி வளர்த்தெடுத்தார். அவர்களுக்கு திருமேனி, பொன்னி, அருணன், முல்லை என்று அழகுதமிழ்ப் பெயர்ச்சூட்டி தமிழ் உணர்வூட்டி ஆளாக்கியிருக்கிறார். அன்னாரின் மகளார் வீ.முல்லை இன்று நாடறிந்த எழுத்தாளராகவும் தமிழியச் சிந்தனையாளராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயா அவர்களின் அரும்பணிகளை ஒவ்வொரு மலேசியத் தமிழரும் போற்றிக்கொள்ள வேண்டியன. அன்னாரின் செயற்பாடுகள் மிகவும் அளப்பரியன என்பதற்கு, இன்றையத் தலைமுறையைச் சேர்ந்த எம்போன்றோர் மனங்களில் அவர் இடம்பிடித்திருப்பதே தக்க சான்றாகும். அதுமட்டுமல்லாது, தமிழகப் பாவலர் ஐயா கதிர் முத்தையனார், இலண்டனைச் சேர்ந்த ஐயா சுரதா முருகையனார் முதலானோர் இர.ந.வீரப்பனாரைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான பெருமைக்குரிய அந்தத் தமிழறிஞருக்குக் கோலாலம்பூரில் பத்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன், அன்னாரின் அருமை மகளார் திருமதி வீ.முல்லை நாகராசு எழுதிய ‘இர.ந.வீரப்பனார் வாழ்வும் வரலாறும்’ எனும் நூல் வெளியீடும் நடக்கவுள்ளது.


நாள்:- 6-9-2009 (ஞாயிறு)
நேரம்:- பிற்பகல் 2.30
இடம்:- டத்தோ கே.ஆர் சோமா அரங்கம், விசுமா துன் சம்பந்தன், கோலாலம்பூர்
சிறப்பு வருகை:- ஐயா பழ நெடுமாறனார், தலைவர்-உலகத் தமிழர் பேரமைப்பு

நம்மிடையே இன்று தமிழும் – தமிழ்ப் பண்பாடும் – தமிழ் விழுமியங்களும் செழித்து இருப்பதற்கு ஊற்றாகவும் உரமாகவும் இருந்து மறைந்த தமிழின முன்னோர்களை நன்றியோடு நினைவுகூருவோம்! அவர்களின் அடியொற்றி மொழி – இன – சமய – பண்பாட்டு மரபுகளைக் காத்துநிற்போம்!

Wednesday, June 03, 2009

இயற்கை எய்திய தமிழறிஞர் இரா.திருமுருகனாருக்கு ஆழ்ந்த இரங்கல்

தமிழறிஞர் - முதுபெரும்புலவர் - இலக்கணச்சுடர் - இசைவாணர்


முனைவர் இரா திருமுருகனார் அவர்கள்
இன்று 03.06.2009 அறிவன் (புதன்) கிழமை அதிகாலை 1.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:-
தி. யமுனா (மனைவி)
தி.அறவாழி (மகன்)
அ.இரேணுகா அறவாழி (மருமகள்)
அ.செம்மல் (பெயரன்)
அ.தென்றல் கார்த்திக் (பெயர்த்தி)
தொடர்புக்கு:
+ 91 936 266 4390 செல்பேசி
+ 91 413 2201191 தொலைபேசி
******************************
மலேசியத் தமிழ் அன்பர்கள் - தமிழ்ப் பற்றாளர்கள் சார்பில், அன்னாரின் ஆதன் இறைமைத் திருவடியில் அமைதி பெற இறைஞ்சுவதோடு அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தாளாத துயரத்துடன் திருத்தமிழ் வலைப்பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கிறேன்
******************************
பி.கு:- திருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய இங்கே சொடுக்குக.

Thursday, March 19, 2009

முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் (ஈப்போ)

மலேசியாவில், பேரா மாநிலத் தலைநகராம் ஈப்போ மாநகரில் தனித்தமிழ் குன்றமாய் விளங்கியவர் முதுபெரும் பாவலர் ஐயா.சா.சி.குறிஞ்சிக்குமரனார். அன்னாரைப் பற்றி தமிழக முனைவர் மு.இளங்கோவனார் எழுதிய கட்டுரை இது. எங்கள் மலேசியத் தமிழ் அறிஞரை 'தமிழ் ஓசை' நாளிகை வழியாகத் தமிழகத்திற்கும் தமது வலைப்பதிவின் வழியாகத் தமிழ்க்கூறு நல்லுலகிற்கும் அறிமுகம் செய்துள்ள முனைவர் மு.இளங்கோவனார் அவர்களுக்குக் கரம்குவிந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

***********************************


தமிழகத்தில் பலர் மொழிஞாயிறு பாவாணர்தம் தமிழ்ப்பணி அறியாமல் இருக்கும் சூழலில் பாவாணருக்கு மலேசியாவில் மன்றம் வைத்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் குறிஞ்சிக்குமரனார் ஆவார்.

மலசியாவில் திராவிடர் கழகம், தமிழ்நெறிக் கழகம் உள்ளிட்ட தமிழ்நெறி சார்ந்த அமைப்புகள் வளர்ச்சி பெறப் பாடுபட்டவர்களுள் நம் குறிஞ்சிக்குமரனார் குறிப்பிடத்தக்கவர்; தலையாயவர்.


ஈப்போ பகுதியில் அரசியல் சார்பற்று இனம், மொழி, கலை, பண்பாடு போன்ற துறைகளில் பணியாற்றி தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் இவர்.

சித்த மருத்துவத்துறையில் வல்லுநராகப் பணிபுரிந்த குறிஞ்சிக்குமரனார் தமிழ் உணர்வு கொண்டு விளங்கியதுடன் மலேசியாவில் தனித்தமிழ் உணர்வுகொண்ட பலர் உருவாகத் தக்க பணிகளைச் செய்தவர்.

பன்னூல் ஆசிரியராக விளங்கியவர்.

பிறமொழி கலவாமல் பேசும், எழுதும் இயல்புடையவர்.

இவர்தம் வாழ்க்கையை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. (விரிவாக)

Tuesday, March 10, 2009

பாவலர் அ.பு.திருமாலனார் எனும் மலேசியத் தமிழ் ஞாயிறு


உலகத் தமிழர்கள் கண்டிப்பாக அறியவேண்டிய மலேசியத் தனிப்பெரும் அறிஞர் - மெய்யறிவர் - தமிழ்நெறியர் - தனித்தமிழ்ப் பெரியவர் தமிழ் ஞாயிறு பாவலர் ஐயா அ.பு.திருமாலனார். அன்னாரைப் பற்றிய அரிய தொகுப்பொன்றைத் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் ஐயா.மு.இளங்கோவனார் தம்முடைய வலைப்பதிவில் எழுதியிருந்தார். மலேசியத் தமிழறிஞர் பாவலர் ஐயா அவர்களைப் பற்றி தமிழக மண்ணிலிருந்து ஒருவர் எழுதியிருப்பது கண்டு பேருவகை கொள்கிறேன். இந்த அரும்பணியை ஆற்றியுள்ள முனைவர் ஐயா.மு.இளங்கோவனாருக்கு மலேசியத் தமிழ்ப் பற்றாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி மொழிகின்றேன்.
*******************************
தமிழ்நெறி சார்ந்த வாழ்க்கை வாழ மலேசியத் தமிழர்களை நெறிப்படுத்தியவர் பாவலர் அ.பு.திருமாலனார் என்பது அறிந்து வியந்தேன். அவர் பற்றி அங்குள்ள பலரிடமும் வினவி அவர்தம் தமிழ்ப்பணிகளைத் தமிழகத்தாருக்கு அறிவிக்க நினைத்தேன். அ.பு.திருமாலனார் தனி மாந்தரல்லர். அவர் ஓர் இயக்கம். அவரின் உணர்வு தாங்கியவர்கள் மலேசியா முழுவதும் பரவி வாழ்கின்றனர்.

அவர் ஒரு பாவலர். படைப்பாளி. கட்டுரையாளர். மெய்ப்பொருளியில் சிந்தனையாளர். அனைவரையும் ஒன்றிணைத்துச் செயல்படும் தலைவர். தமிழ் உணர்வாளர்கள் தமிழகத்திலிருந்து சென்றால் அவர்களை உணர்வு வழியாக அழைத்து, விருந்தோம்பி, சொற்பெருக்காற்ற வாய்ப்பமைத்து, வழி அனுப்பும் இயல்பினர். இத்தொடரின் வழிப் பாவலர் திருமாலனார் பணிகளை இங்கு நினைவுகூர்கிறோம். (விரிவாக)

நன்றி: முனைவர் மு.இளங்கோவன்

Saturday, February 07, 2009

தமிழ்த்தொண்டர் படைச் செலவு:- தேவநேயப் பாவாணர்

இன்று 7-2-2009 மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் பிறந்த நாள். தமிழும் தமிழரும் தரணியில் தன்மானத்தோடும் தலைநிமிர்ந்தும் வாழ, மொழியியல் ஆய்வுப்பணிகளின் வழியாக தனியொருவராக நின்று 50 ஆண்டுகள் போராடிய தமிழ் வேங்கை. அன்னாரின் நினைவாக இப்பதிவை இடுகின்றேன்.


***********************************
தமிழ் வேங்கை பாவாணர் இயற்றிய இப்பாடலை, உலகம் முழுவதுமுள்ள தமிழீழத்து ஆதரவு வேங்கைகளுக்காக தலைவணங்கி வழங்குகின்றேன்.

************************************

படையெடுக்கவே கடு நடை தொடுக்கவே
பாண்டியன் வளர்த்த கழகப் பாட்டுடைத் தமிழ் மறவரே..
பாரெல்லாம் ஊரெல்லாம்
பண்டை முத்தமிழ் பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

பரவை தன்னடி தொழப் பணித்த பாண்டியன்
பாங்கிலே வளர்ந்து பண்பில் ஓங்கு பாண்டி மறவரே..
பரண்மனை அரண்மனை
பைந்தமிழையே பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

தூங்கெயில் கொண்ட தொடித்தோள் நற்செம்பியன்
தோன்றி வந்த குடியின் மானம் ஈண்டு சோழ மறவரே..
தொழிலகம் பொழிலகம்
தூய தமிழைப் பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

தென் குமரிமேல் வடபனி மலைவரை
சேரவே யோர்மொழி வைத்தாண்ட சேரலாதன் மறவரே..
தெருவிலும் மருவிலும்
தீந்தமிழ் தனைப் பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

வெள்ளங்கள் எனமிக விரியும் பஞிலமாய்
வீறுகொண்ட ஏறுகள்போல் வேறுவேறு படைகளும்
வெல்லுவோம் செல்லுவோம்
வெண்ணிலவையும் கொள்ளுவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்
*பஞிலம்=படையணி

(பாவாணரின் இசைத்தமிழ் கலம்பகம் தொகுப்பிலிருந்து)

பாவாணர் பற்றிய எனது முந்தையப் இடுகையைப் படிக்கவும்

Wednesday, November 26, 2008

தமிழின மீட்பர் மேதகு வே.பிரபாகரன்

இன்று 26-11-2008 தமிழீழத் தலைவர் – தமிழினத் தளபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 54ஆம் பிறந்தநாள். தமிழ் ஈழத்தில் தமிழ்மண்ணை மீட்டெடுத்து தமிழ்க்கொடியை வானுயரப் பறக்கவிட்டு தமிழரின் தனிநாடு இதுவென அறிவிக்க மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடாத்தும் அந்தத் தமிழின மீட்பர் – தமிழ் வீரகர் பிறந்தநாளை முன்னிட்டு இப்பதிவு இடப்பெறுகிறது.

பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (பொங்கிடும்)

பாசத்தில் எங்களின் தாயானான்
கவி பாடிடும் மாபெரும் பேரானான்
தேசத்தில் எங்கணும் நிலையானான்
விலை தேடியே வந்திடும் தலையானான் (பொங்கிடும்)


இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்
பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்
தன்னின மானத்தை தான் மதித்தான்
பகை தாவியே வந்திட கால் மிதித்தான் (பொங்கிடும்)


இங்கொரு தாயகம் மூச்சென்றான்
தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்
வந்திடும் படைகளை வீச்சென்றான்
புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் (பொங்கிடும்)


விடுதலைப் புலிகளின் பலமானான்
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்
படுகளம் மீதிலோர் புலியானான்
பிரபாகரன் எங்களின் உயிரானான் (பொங்கிடும்)

என்றுமே எங்களின் தளபதியே
நீ எங்களின் வானத்து வளர்மதியே
இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்
தமிழ் ஈழத்தை வாங்குமுன் போதனைகள் (பொங்கிடும்)




தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள சுட்டிகளைத் தட்டிப் படிக்கவும்.


* தலைவரின் வாழ்க்கைக் குறிப்பு

*தலைவரின் சிந்தனைகள்

*தலைவரின் நிழற்படங்கள்

*தலைவரின் உரைகள்


  • நன்றி: யாழ்.காம்(கவிதை)
  • நன்றி: பிரபாகரன்.காம்(செய்திகள்)

Tuesday, November 18, 2008

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார்



இன்று 18-11-2008, இலக்கியச் செம்மல் கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள். தமிழ்கூறு நல்லுலகை விட்டு அவர் பிரிந்துச் சென்று 72 ஆண்டுகள் ஆகின்றன. அவருடைய நினைவாக இக்கட்டுரை பதிவாகிறது.


**************
செக்கிழுத்தச் செம்மல் என்று புகழப்படும் வ.உ.சி எனும் சுருக்கப் பெயருக்குச் சொந்தக்காரர் வ.உ.சிதம்பரனார் உண்மையில் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்செம்மல்.

தடைகளைக் கண்டு முடங்கி விடாமல் வீறுகொண்ட மனத்தினராய் கடைசி வரை வாழ்ந்த வ.உ.சியின் வாழ்க்கை இன்றையத் தமிழர்களுக்கு நல்ல பாடமாகும்.

திருநெல்வேலி ஒட்டப் பிடாரத்தில் உலகநாதர் பரமாயி அம்மையார் வாழ்விணையருக்கு 5-9-1872இல் மூத்த மகனாகப் பிறந்தார் சிதம்பரானார். 1894-இலேயே வழக்கறிஞராகத் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.

இந்தியாவுக்குத் தொழில்புரிய வந்த ஆங்கிலேயன் நாட்டையே ஆள்வதற்கு முனைந்துவிட்ட காலம் அது. அப்போது ஆங்கிலேயனை எதிர்த்து நெஞ்சுரத்தோடு போராடிய முன்னோடிகளில் சிதம்பரனார் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயனின் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி மக்களிடையே முழங்கினார். அதற்காகவே சொந்தமாகச் சரக்குக் கப்பலை ஓடவிட்டார்.

தமிழர் வரலாற்றில், இராசேந்திரச் சோழனுக்குப் பின் கடலில் கப்பலை விட்டவர் வ.உ.சிதான். அதனாலேயே அவர் கப்பலோடியத் தமிழன் என்ற அழியாப் புகழுக்குச் சொந்தக்காரர் ஆனார். தமிழனால் முடியாதது எதுவும் இல்லை; தமிழன் நினைத்தால் சாதித்துக் காட்டுவான் என்பதற்குக் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி மிகச் சிறந்த முன்மாதிரி என்றால் மிகையன்று.

ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் வ.உ.சியின் கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. அவர்மீது வழக்குகள் போடப்பட்டு சிறைதண்டனையும் வழங்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, மாடுகள் இழுக்கின்ற செக்கை இழுக்கச் சொல்லி ஆங்கிலேயர்கள் கொடுமைபடுத்தினர். தோளிலும் உடலிலும் குருதிச் சொட்டச் சொட்ட அவரை அடித்து துன்புறுத்தித் செக்கிழுக்க வைத்தனர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு ஆங்கிலேயர்கள் அவரை விட்டபாடில்லை. அவருடைய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்துகொண்டனர். அவர் தொடர்ந்து வழக்கறிஞர் பணிசெய்வதற்கும் தடை போட்டனர்.

ஆங்கிலேயனில் வல்லாண்மையில் தனக்கு ஏற்பட்ட அத்தனை இடர்களையும் துயர்களையும் வ.உ.சி வரலாற்று நூலாக எழுதினார். இலக்கியத்தரம் மிகுந்த வரலாற்று நூலாக இது அமைந்தது.

தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்றும் புலமையும் கொண்டிருந்தார் வ.உ.சி. அவர் திருக்குறளுக்கு அகல விரிவுரை எழுதியுள்ளார். தொல்காப்பியத்திற்கும் விளக்கநூல் எழுதியுள்ளார். அவருடைய எழுத்துகள் அனைத்தும் புரட்சி சிந்தனைகளை ஏற்படுத்துவதாக இருந்தன. தமிழில் பல நூல்களையும் புதினங்களையும் எழுதியுள்ளார். சேம்சு ஆலன் என்னும் ஆங்கில நாவலாசிரியர் எழுதிய நூல்களை இவர் மொழிப்பெயர்த்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெய்யாரம், மெய்யறிவு போன்ற இவருடைய படைப்புகள் காலத்தால் அழியாதன.

எழுத்தில் மட்டுமல்லாது, மேடைகள் தோறும் தம்முடைய உணர்ச்சிமிகு உரைகளால் தமிழர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்.

பெரும் செல்வந்தராக இருந்தபோதும் மக்களின் துயரங்களைத் துடைத்தெறிய மக்களோடு நின்று போராடிய மாபெரும் போராட்ட உணர்வாளராக அவர் திகழ்ந்தார். அதனாலேயே, வாழ்நாள் முழுவதும் தாங்கமுடியாத துயரவாழ்க்கை வாழ்ந்தார்.

அடிமைப்பட்டிருந்த இந்தியாவையும் தாழ்ந்திருந்த தமிழர் குமுகாயத்தையும் மீட்டெடுக்க தன்னுடைய உடல், பொருள், ஆவி அத்தனையும் ஈகப்படுத்தி இறுதிவரையில் திண்ணிய மனத்தோடு போராடிய வ.உ.சிதமபரனார் 18-11-1936ஆம் நாள் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

தமிழுக்காகவும் தமிழருக்காகவும் போராடி உயிர்விட்ட வ.உ.சியின் புகழ் தமிழ் உள்ள அளவும் போற்றப்படும் என்பது திண்ணம். இன்றைய இளம் தலைமுறையினர் வ.உ.சி போன்ற தமிழ்ப் பெரியோர்களின் வரலாற்றைப் படித்து விழிப்புணர்வு பெற்று எழுச்சிகொள்ள வேண்டும். தமிழ் இனம் வாழ; தமிழ்மொழி வாழ நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டு போராடி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

வாழ்க ஐயா வ.உ.சி அவர்தம் புகழ்!

Sunday, November 09, 2008

வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்

இன்று 9-11-2008 தமிழ்ச் சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது
***********
*********

தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.

தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத இவர்கள் தமிழைப் பயின்று, அம் மொழிக்கே வளம் சேர்த்தனர். சமயப் பணியாற்ற வந்த அவர்கள் தமிழின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்து தமிழ்ப்பணியையே முழுநேரப் பணியாகக் கொண்டனர். அவர்களுள் தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத ஒருவர் வீரமாமுனிவர்.

இத்தாலியில் இவர் பிறந்தது 1680 நவம்பர் 9ஆம் நாள். கான்சுடாண் டைன்யுசேபியுசு சோசப்பு பெசுகி என்பது இவரது இயற்பெயர். இந்தியாவில் கிறித்துவ சமயப்பணி புரிவதற்காக வந்த முனிவர், 1711 மதுரை மறைப்பணிக் களத்துக்கு வந்தார்.

மதுரைப் பகுதியில் 1606 முதல் 1645 வரை பணியாற்றிய இராபர்ட் தெ நொபிலி அடிகளார் ஐரோப்பிய வாழ்க்கை முறைகைளைக் கைவிட்டு, தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில் வாழ்ந்தார். காவியுடை அணிந்து, சைவ உணவு உண்டு வாழ்ந்தார். வீர மாமுனிவரும் இவரது வாழ்க்கை முறையையே பின்பற்றினார்.


பெசுகி என்ற தம் பெயரை 'தைரியநாதர்' என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே 'வீர மாமுனிவர்' என பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத் தொடங்கினார்.

வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்

1.தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.

2.இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் 'ஏ' 'ஓ' போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் 'எ' 'ஒ' ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.

3.எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. 'தேம்பாவணி' என்னும் பெருங்காப்பியமும், 'திருக்காவலூர் கலம்பகம்' முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.

4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.

5.தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண 'நிகண்டு'களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த 'சதுரகராதி' முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.

6.இது தவிர, 'தமிழ் - இலத்தீன் அகராதி', போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் - இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் - தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது.

7.வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்.

வீரமாமுனிவரைப் பற்றி தமிழ் அறிஞர்கள் கூற்று


''தமிழ் உரைநடைக்குத் தந்தை தத்துவ போதகரே என்பர். அது உண்மை எனினும், இவரால் அது வளம் பெற்று மிக்குயர்ந்தது'' என்று தவத்திரு. தனிநாயகம் அடிகளார் கூறுவதை யாரும் மறுக்க இயலாது.

''18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருள் வீரமாமுனிவரும் ஒருவர்'' என்று 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எழுதிய அறிஞர் கால்டுவெல் எழுதியுள்ளார். திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சி.யு.போப்(G.U.Pope), இவரைத் 'தமிழறிஞருள் மிகச் சிறந்தவர்' என்று போற்றியுள்ளார்.

''திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடி வீர மாமுனிவரே'' என்று செக் நாட்டுத் தமிழறிஞர் 'கமல் சுவலமில்' பாராட்டியுள்ளார். எமிலியோ தேவி என்ற இத்தாலி அறிஞர், ''கீழ்த்திசை அறிஞருள் மிகவும் புகழ் பெற்றவர் வீர மாமுனிவர்'' என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பலரும் புகழ்ந்து போற்றியுள்ளனர்.

  • நன்றி:- உதயை.மு.வீரையன்

Sunday, October 05, 2008

திருவருட்பேரொளி வள்ளலார்

இன்று அத்தோபர் 5ஆம் நாள், திருவருட்பேரொளி வள்ளல் பெருமானாரின் அருள்வருகைத் திருநாள்.
வள்ளற் பெருமான்
திருவருள் பெருமைக்கு வந்தனம்! வந்தனம்!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
*************************************


Thursday, October 02, 2008

அண்ணல் காந்தியடிகள் தமிழ்ப்பற்று

இன்று 2.10.2008 அண்ணல் காந்தியடிகளின் 139ஆம் பிறந்த நாள். அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகண்ட, உலகின் முதல் மாமனிதரான அண்ணலின் நினைவாக இக்கட்டுரை இடம்பெறுகிறது.

*************************************************


இவ்வுலகில் கோடானுகோடி ஆத்மாக்கள் இருக்க ஒரே ஒருவர் மட்டுமே 'மகாத்துமா' என போற்றப்படுகிறார். அவர்தான் இந்திய நாட்டின் விடுதலைத் தந்தையும், 'அகிம்சை' எனப்படும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து, உலகத்தின் பார்வையைத் தம் பக்கம் திருப்பிய அமைதிப் போராளி மகாத்மா காந்தி அவர்கள். இவருடைய இயற்பெயர் மோகன்தாசு காந்தி. இவர் 2.10.1869 அன்று இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.

மகாத்மா காந்தி என்றாலே அவருடைய அறவழிப் போராட்டமும், 'அகிம்சையும்', அமைதிப் போரும், எளிமையும், இரக்க குணமும்தான் எல்லாருடைய கண்முன்னால் நிலழாடும். இத்தனை உயர்பண்புகளும் காந்தியிடம் உருவாகுவதற்குப் பல காரணியங்கள் இருக்கலாம். அவற்றுள் மிக முக்கியமாகத் தமிழும், திருக்குறளும், தமிழ்நாடும் பெரும் பங்காற்றியுள்ளன என்றால் நம்மில் பலருக்கு பெரும் வியப்பாக இருக்கலாம்.

காந்தி உருசிய நாட்டு அறிஞர் 'லியோ டால்சுடாய்' மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். ஒருமுறை 'லியோ டால்சுடாய்' எழுதிய ஒரு கட்டுரையில் திருக்குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்திலிருந்து 'இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற குறட்பாவைப் பற்றி எழுதியிருந்தார்.

லியோ டால்சுடாய் மேற்கோள் காட்டிய குறட்பா காந்தியின் உள்ளத்தைத் தொட்டு, அவர் ஆன்மா(ஆத்மா)வில் கலந்தது. மிக உயர்வான கருத்தைச் சொல்லும் இப்படி ஒரு நூல் இந்தியாவில் உள்ளது என்பதை அறியாமல் இருந்த காந்தி மிகவும் வருந்தினார். திருக்குறள் நூலை எப்படியாவது படித்துவிட விரும்பினார். பெரும் முயற்சி மேற்கொண்டு திருக்குறளைத் தேடினார். திருக்குறள் தமிழ்மொழியில் எழுதப்பட்ட ஒரு அறநூல் என்பதை கண்டறிந்தார்.

ஆனால், தமிழ் தெரியாத காந்தி திருக்குறளைப் படிக்க முடியாமல் மொழிப்பெயர்ப்பு நூல்களைப் படித்து திருக்குறள் கருத்துகளில் மனதைப் பறிகொடுத்தார். திருக்குறளை அதன் மூலமொழியான தமிழிலேயே படிக்க வேண்டும் என்று காந்தி ஆசைப்பட்டார். அதனால், தமிழ்மொழியைப் படித்தார்.

"திருக்குறளை அதன் மூலத்திலேயே படிப்பதற்காகவே, யான் தமிழ் கற்றேன்" என்று இதனை அவரே பதிவு செய்திருக்கிறார்.

கோட்டு சூட்டுடன் இருந்த காந்தியை வெள்ளாடைத் துறவிபோல மாற்றிய பெருமையும் தாய்த் தமிகழத்திற்கே உரியதாகும். அந்த வரலாற்று நிகழ்வு 1921இல் மதுரையில் நடந்தது. அரை நிருவாணமாகவும் கிழிந்த ஆடைகளுடனும் தன் இந்திய நாட்டு உடன்பிறப்புகள் இருப்பதைப் பார்த்த காந்தியின் மனம் தன் வழக்கமான குஜராத்தி பாணி உடையை துறந்து அரை நிருவாண கோலத்திற்கு மாறியது.

மேலும், தமிழ், தமிழ் நாடு, தமிழ் மக்கள் தொடர்பாகக் காந்தி செய்துள்ள பணிகளும் எழுதியுள்ள குறிப்புகளும் சில:-

1.தமிழை நன்றாகக் கற்றுக்கொண்ட காந்தி 'இந்தியன் ஒபினியன்' என்ற இதழை தமிழிலும் நடத்தினார். அன்றைய தமிழகத்தின் செய்திகள் மற்றும் தலைசிறந்த பெரியோர்களைப் பற்றி இந்தியன் ஒபினியனில் எழுதிவந்தார்.

2.தமிழைக் கற்பதிலும், தமிழ்ப் பண்பாடு இலக்கியங்களை அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அண்ணல் காந்தி தம் துணைவியார் கசுதூரிபாவையும், மகன் மணிலாலையும் தமிழகம் அனுப்பினார்.

3.தமது மூன்றாவது மகனான தேவதாசுக்கு இலட்சுமி என்ற தமிழ்பெண்ணை மணமுடித்து வைத்தார்.

4.திருக்குறள் மீது அளவற்ற மரியாதை கொண்ட காந்தி, "திருவள்ளுவ மாமுனிவரை இன்னும் வட இந்தியர்கள் தெரிந்து கொள்ளவில்லையே...." என்ற ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார்.

5.ஒளவையின் ஆத்திச்சூடி, கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம், மாணிக்கவாசகரின் திருவாசகம் போன்றவைகளைத் தமிழாசிரியர்கள் துணைகொண்டு படித்தார். அதோடு, அவை பற்றி பொதுக்கூட்டங்களில் மேற்கோள் காட்டி பேசியுமுள்ளார்.

6.அவரது சேவாகிராமத்திலும், சபர்மதி ஆசிரமத்தலும் நடந்த வழிபாடுகளிலும் பூசைகளிலும் திருவாசகப்பாடல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

7.சபர்மதி ஆசிரமத்தில் தமிழ் பள்ளிகூடம் ஒன்றையும் காந்திநடத்தினார்.

8.மதுரைமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து வழிபட்டபோது, 'எனதுநீண்டநாள் ஆசை நிறைவேறியது' என நெஞ்சுருக எழுதிவைத்தார் மகாத்மா.


9.தமிழகத்தில் திலகருக்கு இணையாக நாட்டுபற்று உணர்வை; எழுச்சியை உருவாக்கிய வ.உ.சிதம்பரனார் பற்றியும், சிறைமீண்டு சிதம்பரனார் செய்து வந்த தொண்டுகள் பற்றியும் மிக உயர்ந்த எண்ணம் கொண்டிருந்த காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து நிதிதிரட்டி தென்நாட்டு திலகருக்கு அனுப்பி உதவியிருக்கிறார்.

10.தென்ஆப்பிரிக்கச் சத்யாகிரகம் அங்கு குடியேறிவாழ்ந்த இந்தியர்களுக்காக ஆரம்பிக்கபட்டதென்றும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழர்களே மிகுதியானவர்கள் என்றும் காந்தியடிகள் தமது சொற்பொழிவுகளிலும், கட்டுரைகளிலும் பலமுறை பதிவுசெய்துள்ளார்.

11.தென்ஆப்பிரிக்க போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு முதன்முதலில் 27 வயது இளைஞராகக் காந்தி 1896ல் தமிழகத்தில் பரப்புரை செய்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் "தமிழர்கள் ஒரு சிறு அவமதிப்பையும் சகித்து கொள்ளாத இனத்தினர்" என்று பேசியுள்ளார்.


12.தென்ஆப்பிரிக்கவிடுதலை போராட்டத்திற்கு இறைவனால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்கள் தான் தமிழர்கள்.....எந்தவித பலனையும் எதிர்பாராமல் பணியாற்றிய அந்த எளிய தமிழர்கள் தான் எனக்கு உணர்வூட்டினார்கள். அவர்களெல்லாம் தியாகம் செய்ய எங்களுக்குப் புகழ்கிடைத்தது என்று எழுதியுள்ளார்.

13.காந்தியை முதன்முதலாக உலகத்திற்கு "மகாத்மா" என்று அடைமொழியிட்டு அறிவித்தவர் 'சுதேசமித்ரன்' இதழ் ஆசிரியர் ஜீ.சுப்பிரமணிய ஐயர்தான்!

14.காந்தியை 'தேசத்தந்தை' என்று இந்தியாவிற்குத் தெரிவித்தவர்கள் தமிழக மாணவர்கள் தாம்!

15.காந்தி வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் வெளியாகியது இந்தியமொழிகளிலேயே முதன்முதலில் தமிழில் தான்!

16.காந்தியடிகள் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு அகிலமெல்லாம் சுற்றி, மூன்றாண்டுகள் முழுமுச்சாய் தவமிருந்து பதிவுசெய்தவர் தமிழரான ஏ.கே.செட்டியார்.தான்!

அண்ணல் காந்தியடிகளைப் போற்றி மதிக்கின்ற தமிழ் மக்கள், அந்த மகாத்மாவே போற்றிய தாய்தமிழை அறிந்து; புரிந்து; தெளிந்து உயிரினும் மேலாகப் போற்றிட வேண்டும்.
Blog Widget by LinkWithin