Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு. Show all posts
Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு. Show all posts

Thursday, February 21, 2013

கோலாலம்பூரில் "தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்" உலகப் பரந்துரை மாநாடு-3


எதிர்வரும் 24-2-2013இல் தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம் எனும் உலகப் பரந்துரை மாநாடு மலேசியத் தலைநரான கோலாலும்பூர், தான்சிறீ சோமா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெறவுள்ளது.

இம்மாநாட்டின் ஏற்பாடுளை மலேசியாவின் மூன்று தேசிய அமைப்புகளான மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், மலேசியத் தமிழ் நற்பணிக்கழகம், மலேசியத் திராவிடர்க் கழகம் ஆகியன செய்து வருகின்றன். மேலும் மலேசிய நாட்டில் இயங்கிவரும் 15க்கும் மேற்பட்ட தமிழுணர்வுக் கொண்ட அமைப்புகள் இம்மாநாடு சிறக்கத் துணைபுரிந்து வருகின்றன. 

மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் “தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம்” எனும் தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டம் வெற்றி பெறும் வகையில் கருத்துப் பரப்புரைகளைச் செய்து துணை நிற்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழக அரசு, புதுவை அரசு, மலேசிய அரசு இன்னும் பிறநாடுகளிலிருந்து அவ்வந்த நாடுகளின் சார்பாகத் தமிழ் அறிஞர்கள் தமிழ் ஆய்வாளர்கள் இந்த உலகப் பரந்துரை மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.   


இம்மாநாட்டில் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கலை ஒட்டிய சிறப்புத் தீர்மானங்களும், தமிழக மற்றும் உலக அரசுகளின் செயற்பாட்டுக்கான பொதுத் தீர்மானங்களும், ஈழத் தமிழர் நலன் குறித்து உலக அரசுகளுக்கான வேண்டுரைகளும் நிறைவேற்றப்படவுள்ளன.

இம்மாநாடு காலை 8.00 மணிக்குத் தொடங்கி பகல் 2.00 மணிக்கு முடிவுறும். இம்மாநாட்டில் தமிழ்மறை ஓதப்பட்டு நிகழ்ச்சிகள் முறையாகத் தொடங்கும்
  
இம்மாநாட்டின் கருப்பொருளை ஒட்டி தமிழறிஞர்கள் தத்தம் கருத்துரைகளைச் சான்றுகளுடன் நிறுவர். பல அரிய கருத்துகளைத் தாங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டு மலர் வெளியீடு செய்யப்பெறும்.

இம்மாநாட்டைக்குறித்து உலக முழுவதும் உள்ள தமிழ்ச்செய்தி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களின் எழுச்சிக் குறித்து கருத்துப் பரப்புரைகளைச் செய்வதற்கும் தாளிகைகள், மாதிகைகள், ஏடுகள் ஆனைத்தும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கள் மலரை வெளிக்கொணர்வதற்கும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.   

1921 ஆம் ஆண்டு தமிழகத்தில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்புலவர்கள் ஒன்றுக்கூடி திருவள்ளூவராண்டினை முடிவு செய்து தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம் என அறிவிப்புச் செய்தனர்; இதனை உலகத் தமிழர்கள் ஏற்றுப் பின்பற்றவே வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாடு நடைபெறுகின்றது.


இம்மாநாட்டில் தமிழர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

மிராக எழுதற்கும் து னி அடையாளம் பேணுதற்கும் 
"தை முதல்நாளே மிழாண்டுத் தொடக்கம்" என்தை உத்தின் செவிளில் அறைதற்கும் மிழர்கள் அனைரும் லையெதிளுவோம்.. வாரீர்..! வாரீர்..!!
 

Friday, April 27, 2012

தமிழ்ப் புத்தாண்டு காப்புக்குழு நிறுவப்பட்டது



கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, காதல், வீரம், பெருமை பேசிக் கலைவதை வாடிக்கையாக்கிய தமிழன், தான் செய்த சாதனையை ஆவணப்படுத்துவதை கைக்கொள்ளாததால்தான் வந்தேறிகளுக்கு நல்ல வாய்ப்பாகப் போய் வசைபாட வசதியாகப் போய்விட்டது. மண்ணின் மைந்தர்களான நம் மரபார்ந்த பல விடயங்களுக்கு நாமே பின் ஆவணங்களைத் தேடியலைய வேண்டிய சோக நிலை ஏற்பட்டிருக்கிறது.

சுமார் 300 ஆண்டுகளுக்குமுன் பார்ப்பனன் உள்ளே நுழைந்தவுடனே தமிழில் உள்ள நூல்கள் அனைத்தையும் அப்படியே படியெடுத்து அவன் மரபார்ந்த நூலாக ஆக்கித் தமிழ்நூல்களை மறைத்தான்.

ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல் தமிழகத்துக்கு வந்து ஆய்வை மேற்கொண்ட போது தற்போது உலகப் புகழ்வாய்ந்த வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் நூலைப் பரிந்துரைக்க ஆள் இல்லை. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து தந்தை பெரியார் வந்து பார்ப்பனன் வேடம் கலைத்தார். திருக்குறள் மாநாடு நடத்தினார்.  

அதேபோல் ‘சங்க’த் தமிழ் என்றதற்கு ‘சங்கம்’ என்பதே தமிழ் இல்லை என்று எதிரிகள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். பின் அதற்கு நாம் பல சான்றுகளைக் காட்டவேண்டியதாகிவிட்டது.

இசையை, பரதக் கலையை, நாடகக் கலையை, ஔடத முறையை தமதென்று கூறி வாதிட்டார்கள். அதையும் போராடிக் காக்கவேண்டியதாகிவிட்டது.

தற்போது அவர்களே இன்னொரு குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார்கள். அதாவது பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் மறைமலையடிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டம் பொய்யானது என்றும், அந்தக் கூட்டம் நடைபெற்றபோது மறைமலையடிகள் தமிழ்நாட்டிலேயே இல்லை என்றும் ஊடகம் வாயிலாக தெரிவித்து தமிழர் மரபை திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

(பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த கூட்டத்தின் கையெழுத்து ஆவணத்தை கி.வ.ஜகந்தான் ஒரு ஊடகத்தில் கொடுத்து அது பிரசுரிக்கப் படாமல் காணடிக்கப்பட்டுவிட்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது. அதுதான் இவர்களுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. ஆனால் அவரே பல கூட்டங்களில் பேசிய குறிப்புகள், வாய்வழியாகச் சொல்லிய நபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.)

அதன் வலிமை வாய்ந்த குரலாகத் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முந்தைய அரசு சட்டசபையில் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய, தமிழக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட தை மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவது, கடைப்பிடிப்பது என்ற கொள்கையை அதே சட்டசபையில் எந்த போராட்டமோ, தமிழக எந்த அமைப்போ, மக்களோ போராடாத, கூக்குரலிடாதபோது தானே வலியவந்து தை முந்தைய அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்திருப்பது செய்த தவறையே திரும்பச் செய்யவைப்பது போலாகும் என்பதைக் கண்டித்து சென்னை பிரஸ் கிளப்பில் 26-04-2012ஆம் நாள் காலை 11 மணியளவில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தமிழ்ப் புத்தாண்டு காப்பு மாநாடு கூடிய விரைவில் நடத்துவது பற்றியும், அதன் ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது பற்றியும், தமிழ் ஆண்டுத் தொடக்கத்தை தற்போதைய தமிழக அரசு சித்திரையை முதலாக வைத்துத் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.  

இந்தச் சந்திப்பில் இறைக்குருவனார் தலைமையில் கி.த.பச்சையப்பன், முனைவர் அரணமுறுவல், இலக்குவனார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். குறிப்பிட்ட அளவில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை எடுத்துவைத்தார்கள். இக்கூட்டத்தில் இன்னும் பத்து நாளில் தமிழ் ஆண்டுக் காப்புக் குழுவுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதென்றும், இன்னும் மூன்று மாதத்தில் தமிழ் ஆண்டுக் காப்பு மாநாடு நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பில் தமிழகத்திலுள்ள உணர்வுள்ள தமிழ் அமைப்புகள் அனைவரும் தாங்களாகவே வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய தமிழாய்வறிஞர் இறைக்குருவனார், தற்போதைய அதிமுக அரசு சித்திரை மாதத்தைத் தமிழ் ஆண்டு தொடக்கமாக பலர் முன்பு வாழ்த்துச் சொன்னார்கள். அதனால் சித்திரை முதல் நாள் தமிழ் ஆண்டுத் தொடக்கம் என்கிறார். இதே அதிமுக அரசில் முன்பு எம்.ஜி.ஆர். தலைமையில் ஒரு மாநாட்டில் இனி தமிழ் ஆண்டு தை நாளில்தான் கொண்டாடப்படவேண்டும் என்று தீர்மானம் போட்டு நடத்தப்பட்டது. ஆனால் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா அவர் கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வினா எழுப்பியதோடு, ஏன் தை மாதத்தில் தமிழ்ஆண்டுப் பிறப்பு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கு தமிழர் மரபார்ந்த பல செய்திகளைத் தக்கச் சான்றோடு விளக்கிக் கூறி அரங்கை அதிரச்செய்தார்.

பின்பு பேசிய முனைவர் அரணமுறுவல், தை தமிழ் ஆண்டு தொடக்கமாக மாற்றியதற்கு தமிழக மக்களோ, தமிழ் அமைப்புகளோ போராடபோது அவர்களாகவே இந்த மாற்றத்தை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது, இந்த அறிவிப்பை மாற்றவில்லை யானால் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தொடர் அறப்போராட்டங்களை நடத்துவோம் எனத் தெரிவித்தார்.

அடுத்து பேசிய கி.த. பச்சையப்பன், தமிழகத்தை தமிழர் ஆளாததுதான் இந்த நிலைக்குக் காரணம். தமிழரென்றால் தமிழ் உணர்வு இருக்கும் என்றார்.

இறுதியாகப் பேசிய இலக்குவனார் தமிழ் ஆண்டு காப்புக்குழு நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.

கொஞ்சம் தாமதம் (நேரம் அல்ல காலம்) ஆனாலும் நல்ல தொடக்கம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு தமிழ் ஆண்டு காப்பு மாநாட்டுத் தொடக்கம் இங்கிருந்து ஆரம்பமாகிவிட்டது.

தமிழ் நாட்டில் தமிழ் அமைப்புகளுக்குப் பஞ்சமில்லை. தமிழனின் பண்பாட்டுக்கே பங்கம் நிகழும்போது நிச்சயமாக உருண்டோடும் நெல்லியாக இல்லாமல் அதிமானுக்கு அவ்வைப்பிராட்டி ஊட்டிய நெல்லிக்கனியாக ஒட்டுமொத்த இந்த மாநாட்டில் தமிழக அமைப்புகளும், தமிழக மக்களும் இணைவார்கள் என்ற நம்பிக்கை அங்கு குழுமியிருந்த அனைவர் கண்களிலும் தெரிந்தது.



Saturday, January 14, 2012

பொங்கல் 2012 - தமிழ்ப் புத்தாண்டு 2043

திருத்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள்;
திருவள்ளுவராண்டு 2043
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து.
 
 
தமிழ் தமிழாக வாழட்டும்;
தமிழர் தமிழராக வாழ்வோம்;
தமிழ்ப் புத்தாண்டு நன்நாளில்
உறுதி கொள்வோம் - உயர்வு பெறுவோம்.

அன்புடன்:- சுப.நற்குணன்
 
பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டுச்  சிறப்புக் கட்டுரைகள்:-
 
 
  

Saturday, January 15, 2011

தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து


திருத்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள்;
திருவள்ளுவராண்டு 2042
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து.
திருத்தமிழ் சிறப்புக் கட்டுரைகள்:-

Saturday, January 23, 2010

எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (2)


*இதன் முதற்பகுதியைப் படிக்க இங்கு சொடுக்கவும்.

தைத்திங்கள் பிறக்கும் பொழுதெல்லாம் பொங்லோடு சேர்ந்து சில புரட்டுகளும் நடைபெறுவது இயல்பாகிவிட்டது. இந்தக் கோளாறுகளை எல்லாம், கோளாறுகள் என்றே தெரியாமலே பலர் குளறுபடிகள் செய்கிறார்கள். இவர்களுக்கு இடையில், ஒரு குறிப்பிட்டக் கூட்டத்தார் மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு பொங்கலில் சில கோளாறுகளைச் செய்துவருகின்றனர்; பொங்கலன்று பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் நுண்ணரசியல் விளையாட்டு காட்டுகின்றனர்.

அவற்றை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?

கோளாறு 1:- பொங்கல் முதல்நாள், சூரியப் பொங்கல் எனப்படுகிறது. காலையில் கதிரவன் உதயமாகும் நேரத்தில் பொங்கல் வைக்கவேண்டும் என்பதுதான் காலாகாலமாகப் பின்பற்றப்படும் வழக்கம். அதுதான் இயற்கையானதும் இயல்பானதும்கூட. ஆனால் இன்றோ, பொங்கலுக்கு நல்ல நேரம் குறிக்கப்படுகிறது. அந்த நல்ல நேரத்தைத் தெரிந்துகொள்ள நமது மக்கள் பயபத்தியோடு காத்திருப்பதும், பிறகு சாமிக்குற்றம் வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கி நல்ல நேரப்படி பொங்கல் வைப்பதும் பாரிய நகைச்சுவை.

அப்படி குறித்துக் கொடுக்கப்படும் நேரம் எதுவாக இருக்கிறது தெரியுமா? சூரியன் நன்றாகக் கொளுந்துவிட்டு காயும் நேரமாக இருக்கும் அல்லது சூரியன் உச்சி மண்டைக்கு மேலே வரும் மதிய நேரமாக இருக்கும். மாலை நேரத்தில் பொங்கல் வைக்கும் நல்ல நேரம் குறித்துக்கொடுக்கபட்ட கதையும் உண்டு. அதற்கும் மேலே போய், காலையில் ஒரு நேரம் மாலையில் ஒரு நேரம் என்று ஒரே நாளில் இரண்டு நேரங்கள் குறித்துக் கொடுக்கிறார்கள். இதைவிட கொடுமை ஒன்றும் இவ்வாண்டு நடந்தது. பொங்கல் வைக்கும் நல்ல நேரம் இரவு 8.00 மணி என்று முதலில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டதுதான் அது. அப்புறம், பொங்கல் அமாவாசையில் வருகிறது. அதனால், மறுநாள்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்று கூடவே இன்னொரு புரளி வேறு.

இப்படி பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்துக்கொடுக்கும் கோளாறு எப்படி ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? என்பதை விளக்கி எழுதினால், சோதிட மேதைகள், பத்திமான்கள், ஏன் ஊதுவத்தி வணிகர்கள் கூட வம்புக்கு வந்துவிடுவார்கள். அதனால், அதை எழுதாமல் விடுகிறேன்.


கோளாறு 2:- சூரியப் பொங்கலுக்கு மெனக்கெட்டு நேரம் குறித்து கொடுக்கின்ற சோதிடக் குருமார்கள், ஏனோ தெரியவில்லை மாட்டுப் பொங்கலுக்கும் மறுநாள் காணும்(கன்னிப்) பொங்கலுக்கும் நேரம் குறித்துக் கொடுப்பதில்லை. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையில் இத்தனை மணிக்குதான் பழையத் தட்டுமுட்டு துணிமணிகளைக் கொளுத்த வேண்டும் என்றும் நேரம் குறித்துக் கொடுப்பதில்லை. மண்டையைக் குழப்பும் இந்தக் கோளாறுக்காக எங்கே போய் முட்டிக்கொள்வதோ தெரியவில்லை!

கோளாறு 3:- பொங்கலை அறுவடைத் திருநாள் என்றும் தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இப்போது புதிதாக ஒரு புராணப் புழுகை அள்ளிவிடத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பிட்ட கடவுளர் ஒருவர் சூரியனாகவே வடிவெடுத்தாராம். அதனால், பொங்கலன்று சூரியப் பகவானோடு அந்தக் கடவுளரையும் சேர்த்து வழிபட்டால் கோடானும் கோடி நன்மை உண்டாகுமாம். இப்படி, இயற்கை வழிபாட்டை ஒட்டிய பொங்கலின் பண்பாட்டுச் சிறப்பை மழுங்கடித்து அதில் மதச்சாயத்தைப் பூசியும் குறிப்பிட்ட ஒரு சமயத்திற்குச் சார்புபடுத்தியும் கோளாறு செய்யப் பார்க்கிறது ஒரு தரப்பு.


கோளாறு 4:- பொங்கல் நாளில் அதாவது தை முதல் நாளில்தான் தமிழ்ப் புத்தாண்டாகிய திருவள்ளுவராண்டு பிறக்கிறது. இலக்கியத்திலும், வானியலிலும் இதற்குத் தக்க சான்று உண்டு. தமிழ்க்கடல் மறைமலை அடிகள், திரு.வி.க, பேராசிரியர் கா.நமசிவாயர், சிவனியப் பெரியார் சச்சிதானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார், உ.வே.சாமிநாத ஐயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி அய்வுசெய்து, தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தனர். தமிழ்நாடு அரசும் இதனை ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆயினும், தை முதல் நாளை இன்னமும் தமிழ்ப் புத்தாண்டாகச் சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சமயஞ்சார்ந்த அமைப்புகளும் தலைவர்களும் இதனை ஏற்பதே இல்லை. அதற்கேற்றவாறு மக்களையும் தவறாக வழிநடத்துகின்றனர். இவர்கள் தைப்பொங்கல் வாழ்த்து மட்டுமே சொல்கிறார்கள். மறந்தும்கூட, தமிழ்ப் புத்தாண்டு என்று மூச்சுப் பரிவதே இல்லை.

சமய நாட்டமுள்ளவர்கள், தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழர்தம் வரலாற்று உண்மையை இருட்டடிப்பு செய்வதில் மிகவும் குறியாக இருக்கின்றனர்.

கோளாறு 5:- மலேசியாவில் வெளிவரும் இரு நாளிகைகள் பொங்கல் வாழ்த்தோடு தமிழ்ப் புத்தாண்டு என்றும் அறிவித்து செய்தி போடுகின்றன. ஆனால், சில ஏடுகளில் தமிழ்ப் புத்தாண்டு என்று ஒரு இடத்திலும்கூட வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் இப்படியொரு வரலாற்று மறைப்பைச் செய்வதற்குச் சில பின்னணிகளும் அடிப்படைகளும் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் இங்கு விரிவாகப் பேச விருப்பமில்லை.

கோளாறு 6:- நாட்டில் குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளும், சமயம் சார்ந்த அமைப்புகளும், பொது இயக்கங்களும் கூட தமிழ்ப் புத்தாண்டைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை; வாழ்த்து சொல்லுவதும் இல்லை. அப்படி ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்வதும் இல்லை. இவர்களின் இந்த நடிப்பு இன்னும் எத்தனை காலத்திற்கு நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். (ஆனாலும், இவ்வாண்டு எதிர்க்கட்சிகளில் இருக்கும் நமது தலைவர்கள் வழங்கிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நாளிகைகளில் வெளிவந்திருந்தன. மாற்றத்திற்கான ஒரு நல்ல தொடக்கமாக இந்தச் சொல்லலாம்.)


கோளாறு 7:- அரசியலாளர்கள் சிலர், சில செய்தியிதழ்கள் போலவே தமிழ் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களும் தமிழ்ப் புத்தாண்டைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கின்றன. அவ்வளவு ஏன். கண்ட கண்ட குப்பைகளையெல்லாம் உளறிக்கொட்டி கிளறிமூடும் தனியார் வானொலிகூட பொங்கல்! பொங்கல்! என்று முழங்கியதே தவிர தமிழ்ப் புத்தாண்டு என்று ஒருமுறைகூட சொல்லவில்லை. பெர்னாமா தொலைக்காட்சி அலைவரிசை மட்டுமே தன்னுடைய செய்தியில் தமிழ்ப் புத்தாண்டு பற்றி கொஞ்சமாகப் பேசியது.

இத்தனையையும் வைத்துப் பார்க்கும்போது, பொங்கலைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துவிடக் கூடாது, ‘தைப் பிறப்பே தமிழ்ப் புத்தாண்டு’ என்பது மக்கள் மனதில் பதிந்துவிடக் கூடாது என்பதில் சில தரப்பினர் மிக மிகக் கண்ணும் கருத்துமாக இருப்பதைக் காண முடிகிறது . எது எப்படியோ. ஒன்றுமட்டும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. இந்த நுண்ணரசியலுக்குப் பின்னணியில் யாரோ ஒரு தனியாள் அல்லது ஒரு இயக்கம் கண்டிப்பாக இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ்ப் புத்தாண்டை இருட்டடிப்புச் செய்வதற்கான ஆதரவும் அதற்குரிய சதித்திட்டமும் வேறொரு நாட்டிலிருக்கும் ஆரிய வழித்தோன்றல்கள் வழியாக இவர்களுக்குக் கிடைக்கலாம்.



இத்தனைக் கோளாறுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டும் சதிராட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.

பொங்கல் திருநாளைச் சமயம் கடந்த பண்பாட்டு விழாவாகவும், உலகத் தமிழருக்கு உரிய தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்ற காலம் மலரவேண்டும். அவ்வாறு மலரும் நாளே தமிழின விடுதலை நாளாக இருக்கும்; தமிழரின் விடிவுக்குரிய தொடக்கமாக அமையும்.

Wednesday, January 20, 2010

எங்கூரு பொங்கல் கொண்டாட்டமும் கோளாறும் (1)



எங்க ஊரு (மலேசியா) பொங்கல் இப்போதெல்லாம் கோலாகலமாக நடைபெறுகிறது. அப்படியானால், முன்பெல்லாம் இப்படி இல்லையோ என நீங்கள் கேட்கலாம். அதற்கு “ஆமாம்” என்பதே பதில்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம், இப்போது போல இருந்ததில்லை. ஆனால், இன்றோ வீட்டுக்கு வீடு பொங்கல் வைப்பது கட்டாயாமான ஒன்றாகிவிட்டது.

இன்றைய நிலையில் பொங்கல் கொண்டாட்டம் பல புதிய பரிணாமங்களைக் கண்டுவிட்டது. இற்றைநாள் பொங்கலில் பெருமைப்படத்தக்க பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை என்னென்ன என்று கொஞ்சம் விரிவாகக் காண்போமா?

மலேசியாவில் பொங்கல் கொண்டாட்டங்கள்

1.இப்போது மலேசியத் தமிழர்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு பொங்கல் வைக்கின்றனர். இது பொங்கலுக்குக் கிடைத்திருக்கும் பெருமதியாகக் கொள்ளலாம்.


2.பொது இடங்களில் நூறு, இருநூறு, ஆயிரம் எனப் பெருந்திரளாக மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைத்து சாதனை புரிகின்றனர். இதனால், மற்ற இனத்தாரின் கவனம் பொங்கல் மீது இப்போது விழுந்திருக்கிறது.

3.தமிழர்களோடு இணைந்து மலாய்க்காரர், சீனர் என மூவினத்தவரும் பொங்கலிடும் புதிய பண்பாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வருகின்றது.

4.நாட்டுப் பிரதமர் தொடங்கி மற்ற இனத்தைச் சார்ந்த அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் தீபாவளிக்கு மட்டுமே வாழ்த்துச் செய்தி வழங்கிய காலம் மாறி, இப்போது பொங்கலுக்கும் வாழ்த்துச் செய்தி தருகிறார்கள்.




5.மலேசியத் தமிழ் நாளிதழ்கள் பொங்கலை முன்னிட்டு சிறப்புப் பக்கங்கள், இணைப்புகள் வெளியிடுகின்றன. அதோடு, தங்கள் ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறையும் விடுகின்றனர். இது பொங்கலுக்குத் தரப்படும் மரியாதை எனவும் சொல்லலாம்.

6.நாட்டில் வெளிவரும் வார, மாத இதழ்கள் அனைத்தும் பொங்கல் சிறப்பிதழ் வெளியிட்டு பொங்கல் குதூகலத்தை அதிகப்படுத்துகின்றன.

7.ஒலி – ஒளி ஊடகங்கள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் படைக்கின்றன. அதுவும், சொந்த நிகழ்ச்சிகளாக உள்ளூர் நிகழ்ச்சிகளாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

8.தமிழ் சார்ந்த இயக்கங்கள் பொங்கல் விழா, தமிழர் திருநாள் முதலான பெயர்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துகின்றன. கலை, இலக்கியப் போட்டிகளும் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.

9.கோலாலம்பூரில் செயல்படும் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவில் தமிழர் திருநாள் விழாவை நடத்தி நாடு முழுவதும் தமிழ் உணர்வைப் பரவச் செய்கிறது.

10.பொங்கல் அன்றுதான் திருவள்ளுவர் நாளும் வருகின்றது. திருக்குறளைத் தமிழர் மறையாக ஏற்றுக்கொண்டு தமிழ் வாழ்வு வாழும் தமிழன்பர்கள் திருவள்ளுவர் நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். கூட்டு வழிபாடு, திருவள்ளுவர் குருபூசை என்ற பெயர்களில் ஒன்றுகூடி அகவழிபாடு செய்கின்றனர்.

11.பொங்கலன்று திறந்த இல்ல விருந்துகளும் இப்போது ஆங்காங்கு நடைபெறுகின்றன. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலை வெளிப்படுத்தும் வகையில் இவ்விருந்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முற்றிலும் மரக்கறி உணவுகள் பரிமாறப்படுகின்றன. விருந்தினர்கள் அனைவரும் தமிழ்ப் பண்பாட்டு உடையில் வந்து விருந்தோம்பலில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

12.நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் பொங்கலன்று சிறப்பு விடுமுறை எடுக்கின்றன. இது புதிய பண்பாடாக உருவாகி இருக்கிறது. முன்பெல்லாம் திருவிழா, தீமிதி, சித்திரைப் பௌர்ணமி என்று விடுமுறை எடுத்து வந்த தமிழ்ப்பள்ளிகள் இப்போது பொங்கலுக்கு விடுமுறை எடுத்துக்கொள்கின்றன.

13.சில தமிழ்ப்பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றுசேர்ந்து பொங்கலிட்டு மகிழ்கின்றனர். தவிர, பொங்கல் தொடர்பாக பல போட்டிகளும் நடத்தப்படுகின்றன. நமது மாணவர் சமுதாயத்தில் தமிழ்ப் பண்பாட்டு உணர்வுகளை வளர்ப்பதற்காக தமிழ்ப்பள்ளிகளில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.

14.இதேபோல், இப்போதெல்லாம் கல்லூரி, பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக் கழகம் முதலான உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் நமது மாணவர்கள் ஒன்றுகூடி பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதையும் காண முடிகிறது.


15.நாட்டில் உள்ள பல கிறித்துவ தமிழன்பர்கள் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மதத்தால் கிறித்துவர்கள் ஆனாலும் இனத்தால் தமிழர்களே என்ற உனர்வோடு அவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி பொங்கலிட்டு மகிழ்கின்றனர். பொங்கல் சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாட்டு விழா என்பதற்கு இதுவோர் நல்ல சான்று.

16.இத்தனையும் போக, தை முதல் நாள் பொங்கல் மட்டுமல்ல; தமிழ்ப் புத்தாண்டும் கூட. எனவே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் தமிழ் நாளேடுகளும் சில தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதோடு நெஞ்சை நிமிர்த்தி ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என்று உரக்க அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

17.மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய இரு நாளேடுகளும் மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், தமிழியல் ஆய்வுக் களம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம், தமிழ் வாழ்வியல் இயக்கம் முதலான அமைப்புகளும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக வலியுறுத்தி வருகின்றன.

18.தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மலேசியாவில் தொடர்ந்து தமிழ் நாள்காட்டி வெளியிடப்பெறுகின்றது. தமிழியல் ஆய்வுக் களம் இந்த அரும்பணியைச் செய்து வருகின்றது. இப்போது பிறந்துள்ள திருவள்ளுவராண்டு 2041ஐ முன்னிட்டு முழுக்க முழுக்கத் தமிழை முன்படுத்திய நாள்காட்டி வெளியிடப்பட்டிருக்கிறது.

இப்படியாக, மலேசியாவில் பொங்கல் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருவகையில், இவையெல்லாம் தமிழ்ப் பண்பாட்டுச் செழுமையின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.

அதற்காக, நமது மக்களிடையே தமிழ்ப் பண்பாட்டின் எச்சங்கள் இன்னும் ஆழமாக இருக்கின்றன; நமது மக்களிடையே தமிழ்ப் பண்பாட்டு உணர்வுகள் மேலோங்கி வருகின்றன என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ள முடியாது.

காரணம், மேலே சொன்ன அத்தனைக்கும் நேர்மாறான கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. அல்லது, திட்டமிட்டு சில கோளாறுகள் செய்யப்படுகின்றன. பொங்கல் பெயரில் நடக்கின்ற குளறுபடிகளை அடுத்த இடுகையில் எழுதுவேன்.

அதுவரை.. நீங்களும் கொஞ்சம் உங்கள் சிந்தனைக் குதிரையை ஓடவிடுங்களேன்..!

Thursday, January 14, 2010

பொங்கலோ பொங்கல்! தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து!



திருத்தமிழ் வலைப்பதிவு வாசகர்களாகிய திருத்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்



இனிய பொங்கல் திருநாள்;
தமிழ்ப் புத்தாண்டு 2041 நல்வாழ்த்து.


தமிழ் தமிழாக;
தமிழர் தமிழராக;
தமிழ்ப் புத்தாண்டு நன்நாளில்
உறுதி கொள்வோம் - உயர்வு பெறுவோம்.


அன்புடன்:- சுப.நற்குணன்



பொங்கல் சிறப்புக் கட்டுரை படிக்க இங்கு சொடுக்கவும்

Sunday, January 11, 2009

தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு


மலர்ந்தொளிரும் தைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்றது. அதனை முன்னிட்டு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்" கூறும் அதேவேளையில், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான வரலாற்றினைத் திரும்பிப் பார்க்க அன்போடு அழைக்கிறேன்.

கடந்த திருவள்ளுவராண்டு 2039 (அதாவது ஆங்கில ஆண்டு 2008)இல், தமிழ்நாட்டு அரசு தமிழகத்தின் ஆளுநர் வழியாகத் தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என உலகத்திற்கு அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாக வரவேற்றுப் பேருவகை அடைந்தனர்.

இந்த அறிவிப்பின் வழியாக, தமிழர்களிடையே பலகாலம் நிலவிவந்த "தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரை முதல் நாளா?" என்ற கருத்து வேறுபாட்டுக்கு முடிந்த முடிவாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்பாக...

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டுமுறையை அதிகாரப்படியாக ஏற்றுக்கொண்டு 1971ஆம் ஆண்டுமுதல் அரசு நாட்குறிப்பிலும் அதன்பின்னர் 1972 முதற்கொண்டு அரசிதழிலும் 1981 தொடங்கி அரசாங்கத் தொடர்புடைய அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வந்துள்ளது.

இதற்கும் முன்பாக...

1921ஆம் ஆண்டு தமிழ்க்கடல் தவத்திரு மறைமலையடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கூட்டம் நடத்தப்பெற்றது. சைவம், வைணவம், புத்தம், சமணம், இந்து, கிறித்துவம், முகமதியம் என எல்லா சமயங்களையும் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுமுறைகளின் அடிப்பையில் முப்பெரும் உண்மைகளை உலகத்திற்கு அறிவித்தனர்.

1.தைமுதல் நாளே தமிழாண்டுப் பிறப்பு
2.திருவள்ளுவர் பெயரில் தமிழாண்டைப் பின்பற்றுதல்
3.ஆங்கில ஆண்டுடன் (ஏசு கிறித்து பிறப்பாண்டு) 31 ஆண்டுகளைச் கூட்டித் திருவள்ளுவராண்டைக் கணக்கிட வேண்டும்.

தமிழுக்கு அரணாக இருந்துவிளங்கிய 500 தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டு தமிழ் ஒன்றையே முன்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பை வெளியிட்டனர்.

அன்றுதொடங்கி உலகம் முழுவதுமுள்ள தமிழ்ப் பற்றாளர்கள் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றிப் போற்றி கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழாண்டு முறைப்படி தங்கள் வாழ்வியலை அமைத்துக்கொண்டு தமிழியல் நெறிப்படி வாழ்ந்தும் வருகின்றனர்.

இதற்கெல்லாம் முன்பாக...

தைப் பொங்கல் விழா நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக தமிழர்கள் பலகாலமாகக் கொண்டாடி வந்துள்ளனர். இதற்கான அகநிலைச் சான்றுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" என்று நற்றிணையும்
"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்
""தைஇத் திங்கள் தண்கயம் போல்" என்று புறநானூறும்
"தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று ஐங்குறுநூறும்
"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்


தைத் திங்களில் புத்தாண்டு தொடங்கிய தமிழரின் வரலாற்றை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியப் பாடல்களில் சான்றுகள் இவ்வாறு இருக்க, பாமர மக்கள் வழக்கிலும் பழமொழி வடிவத்தில் சில சான்றுகளும் இருக்கின்றன.

"தைப் பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியும்
"தை மழை நெய் மழை" என்ற பழமொழியும்

தமிழர் புத்தாண்டுக்கான வரவேற்பையும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புக்கு இருக்கின்ற சிறப்பிடத்தையும் பறைசாற்றுகின்றன.

மேற்சொன்ன அனைத்துக்கும் மேலாக...


உலகத்தில் இயற்கை என்று ஒன்று இருக்கின்றது. அது இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திற்கு ஏற்பவே உலகத்தின் அனைத்து நடப்புகளும் அமைகின்றன. அந்தவகையில், இயற்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவ மாதம் முதல் நாளில் சூரியன் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தைத் (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் என்றும் கூறுவர்.

ஆக, சூரியன் வடதிசை நோக்கிப் புறப்படும் புதிய பயணத்தைத் தொடங்கும் நாளில் தமிழர்கள் பொங்கல் வைப்பதும் அதனைச் சூரியப் பொங்கல் என்று வழங்குவதும் மிகப் பொருந்த அமைந்துள்ளன. ஆகவே, இதனைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டது இயற்கையின் சட்டத்திற்கும் உட்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

இத்தனைக்கும் இடையில்...

ஆதியிலிருந்து தைத் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது. கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சித்திரைப் புத்தாண்டுக் கணக்கும் தமிழருக்கு உரியதே.

பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியதுதான்.

இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.


இதுமட்டுமல்லாது, தொல்காப்பியர் காலத்தில், அதாவது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல்நாளில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடிதோட் செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது.

முடிவும் விடிவும் இதுதான்!

ஓர் இடைக்கால மாற்றம் என்பதாலும், ஆரிய வலைக்குள் சிக்கிக் கொண்டதாலும், மீட்க முடியாத அளவுக்குக் கலப்படம் நேர்ந்துவிட்டதாலும், பார்ப்பனியக் கூறுகளும் மத ஊடுறுவல்களும் அளவுக்கதிமாக நேர்ந்துவிட்டதாலும் சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கமுடியாது என 1921இல் 500 தமிழறிஞர்கள் எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பதை ஆய்வுப்பார்வையும் அறிவுநோக்கும் கொண்ட எவரும் ஒப்புவர். அதுபோலவே ஆவணிப் புத்தாண்டும் வழக்கற்றுப் போனதோடு காலச்சூழலும் மாறிப்போய்விட்டது.

இந்நிலையில், அகநிலையிலும் புறநிலையிலும் தமிழர்கள் விடுதலை பெற்ற இனமாக வாழவும் உயரவும் தனித்திலங்கவும் தைப்பிறப்பையே தமிழாண்டுப் பிறப்பாக – தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! கடவுளின் தீர்ப்பு!

உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

முந்தையக் கட்டுரைகள்:-

பி.கு:-இந்தப் பதிவை மலேசியாஇன்று இணையத் தளத்தில் காண்க.

Monday, April 14, 2008

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1


முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.

மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.

கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.

உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.

அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2



தமிழர் கண்ட கால அளவீடு

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்)
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3


தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும்.

பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது.

இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-

1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை

2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு

4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு

5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.

இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 4


சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.

அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.

ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம்! தமிழர்மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது.
Blog Widget by LinkWithin