Tuesday, October 11, 2016

மலேசியாவில் வேண்டும் தமிழ் மரபுத் திங்கள்


மலேசியாவில் தமிழ்மொழி உணர்வையும் ஈடுபாட்டையும் அதிகப்படுத்தும் நோக்கத்தில் 'தமிழ் மரபுத் திங்கள்' கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்த  வேண்டும் எனச் சமூக நட்பு ஊடகங்களில் செய்திகள் மிகப் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. தலைவர்களும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் இதனை அரசாங்கத்திடம் முன்மொழிய வேண்டும் என நட்பூடகங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது.

கனடா நாட்டில் அடுத்த ஆண்டு தொடங்கி சனவரி மாதம் 'தமிழ் மரபுத் திங்கள்' கொண்டாடப்பட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கனடாவின் நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர் திரு.கேரி ஆனந்தசங்கரி இந்தத் தீர்மானம் குறித்து அறிவித்தார். உலகம் முழுக்க வாழும் தமிழர்களை இந்த அறிவிப்பு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவிற்கு முன்பாகவே  கடந்த 10 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்பிரல் மாதம் தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், கலந்துரையாடல், இசை நிகழ்ச்சி, மாநாடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன்வழி தமிழ்மொழி உணர்வையும் எழுச்சியையும் சிங்கப்பூரில் ஏற்படுத்த முடிகிறது.

சிங்கப்பூரில் மோகன் ராசு
இதேபோல் மலேசியாவிலும் தமிழ் மரபுத் திங்கள் ஒரு மாத காலத்திற்குக் கொண்டாடப்பட வேண்டும் என்பது மலேசியத் தமிழர்களின் ஆவலாக உருவெடுத்துள்ளது.

இதனை அரசாங்கமே முன்னின்று நடத்துவதற்குரிய வாய்ப்புகள் உண்டா என ஆராய்ந்து செயல்படுத்த முயற்சிகள் எடுக்கலாம். இல்லையேல், தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் அமைப்புகளும் பொதுக்குழு ஒன்றனை அமைத்து தன்னார்வ அடிப்படையில் செயல்படக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராயலாம்.

இதுபற்றி முகநூலில் பகிரப்பட்ட சில பகிர்வுகளை இங்கே தருகின்றேன்..

மன்னர் மன்னன் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்:-
முரசு மென்பொருள் நிறுவனர்; கணிமை வல்லுநர் முத்து நெடுமாறன்
மலேசியத் தமிழ் அறவாரிய உறுப்பினர், ஆசிரியர் சரவணன்
சிங்கப்பூரைச் சேர்ந்த நித்திஷ்
புதுக்கவிஞர், ஆசிரியர் ந.பச்சைபாலன், ஆசிரியர் இரமணி உள்பட முகநூல் அன்பர்கள்
மலேசியாவில் 200 ஆண்டுத் தமிழ்க்கல்விக் கொண்டாட்டம் நடைபெறும் இந்தத் தருணத்தில் அதன் நினைவாக இனி வரும் ஆண்டுகளில் தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடலாம். அதற்குரிய முன்னெடுப்புகளை நம் தலைவர்களும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் ஆவன செய்யலாம். மலேசியத் திருநாட்டில் தமிழைத் தொடர்ந்து நிலைபெபெறச் செய்யவும் இளையோர் மனங்களில் தமிழை வேறூன்றச் செய்யவும் இது ஏதுவாக அமையும். சிந்திப்போமே.!

@சுப.நற்குணன்

No comments:

Post a Comment

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்