Thursday, September 08, 2011

சிங்கையில், உலகத் தமிழாசிரியர் மாநாடு

மாநாட்டு அரங்கம்
உலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று (08.09.2011)  வியாழக்கிழமை சிங்கப்பூரின் டவுண்டவுன் ஈசுட்டில் (Downtown East) தொடங்குகிறது.

இன்று தொடங்கி 10.09.2011 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டைத் தென்கிழக்காசிய கல்வி ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் திரு.கே.கேசவபாணி காலை மணி 9:00க்குத் தொடக்கி வைக்கிறார்.

இது சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 9-ஆவது மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் கருப்பொருள் 'உலகமயமாதலும் தமிழ்க் கற்றல் கற்பித்தலும்' என்பதாகும். 

மாநாட்டுப் பேராளர்கள்
ஏறக்குறைய 360 பேராளர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். அமெரிக்கா, கனடா, பிரான்சு, டென்மார்க்கு, இந்தியா, அசுத்திரேலியா, செர்மனி, இலங்கை, மொரிசியசு, மலேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 130 பேராளர்களும், சிங்கையிலிருந்து 230 பேராளர்களும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கிட்டதட்ட 40 கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. கற்றல் கற்பித்தல் தொடர்பான பயிலரங்குகளும் நடைபெற உள்ளன.

மலேசியப் பேராளர்கள்:- (இ-வ) புஸ்பராணி, கோவி.சந்திரன், அ.சு.பாஸ்கரன் (முகமை அமைப்பாளர்), சுப.நற்குணன், நடராஜா, தமிழரசி
மலேசியாவிலிருந்து கல்வி அமைச்சின் சார்பில் ஏறக்குறைய 60 பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.அ.சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் கல்விக் கழக விரிவுரையாளர்கள், இடைநிலைப்பள்ளி - தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
பேராளர்கள்

முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு 1992ஆம் ஆண்டில் நடந்தது. இந்தியா,  மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இதுவரை 8 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 

முகமை விருந்தினர்
"இந்த மாநாடு உலகத் தமிழாசிரியர்களை ஒருங்கிணைக்கின்றது. மேலும், தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் சிங்கப்பூர் முன்னணி வகிக்கின்றது என்பதை மற்றவர்கள் உணர்ந்துகொள்ள இந்த மாநாடு வழிவகுக்கும்" என்று சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் சி.சாமிக்கண்ணு கூறினார்.

அறிவிப்பாளர்கள்:- மீனாட்சி, ஜெயதீசன் (சிங்கை ஆசிரியர்கள்)
@சுப.நற்குணன்
 

No comments:

Post a Comment

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்