Tuesday, February 26, 2008

மெய்ப்பாடு என்பது என்ன?


உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் உடலின் வழியாக வெளிபட்டுத் தோன்றும். அவ்வாறு ஊணர்வுகள் வெளிப்படும் விதமே மெய்ப்பாடு எனப்படுகிறது. மெய்ப்பாடு எட்டு வகைப்படும் என தமிழர்கள் கண்டனர். இதனைத் தொல்காப்பியம் தெளிவுற விளக்குகின்றது. பின்னாளில் இதே மெய்ப்பாட்டை வடநாட்டவர் ஒன்பதாக்கிக் கொண்டனர். அதனை அவர்கள் நவரசம் என்று பெயரிட்டு அழைத்தனர்.

3000 ஆண்டுகளுக்கும் பழமையான தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் எட்டு வகை மெய்ப்பாடுகளைப் பற்றி பின்வருமாறு விளக்குகின்றது.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.

இந்த எட்டுவகை மெய்ப்பாடுகள் எவ்வெவ்வாறான வழிகளில் வெளிப்பட்டுத் தோன்றும் என காண்போம்.

1.நகை:- இது எள்ளல், இளமை, பேதமை, மடன் எனும் நான்கின்வழி தோன்றும்.

2.அழுகை:- இது இளிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கின்வழி தோன்றும்.

3.இளிவரல்:- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கின்வழி தோன்றும்.

4.மருட்கை:- இது புதுமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கின்வழி தோன்றும்.

5.அச்சம்:- அணங்கு, விலங்கு, கள்வர், இறை எனும் நான்கின்வழி தோன்றும்.

6.பெருமிதம்:- இது கல்வி, தறுகண், இசைமை கொண்ட இவை நான்கின்வழி தோன்றும்.

7.வெகுளி:- உறுப்பறை, குடிகோள், அலை, கொலை எனும் நான்கின்வழி தோன்றும்.

8.உவகை:- செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கின்வழி தோன்றும்.

உள்ளத்து உணர்ச்சிகளை உற்றுநோக்கியும் உணர்ந்துபர்த்தும் கண்டுபிடித்திருக்கும் தமிழர்களின் அறிவுக்கூர்மையும் மனநுட்பமும் நம்மை வியக்கச் செய்கிறன்றன. இத்தகைய நுட்பமான உணர்வுகள் இயற்கையிலேயே அமையப் பெற்ற தமிழ் மக்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.



No comments:

Post a Comment

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்