Friday, February 08, 2008

பல சமயத்தார் போற்றும் பைந்தமிழ்


உலகப் பெருமொழிகள் ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்திருக்கின்றன. மொழிக்கும் வேறு சமயம் வேறாக இருந்தாலும், மாந்தவியல் தொடர்பின் காரணமாகவும், புவியியல் தொடர்பின் காரணமாகவும், பழங்காலத் தொடர்பின் காரணமாகவும் சில மொழிகளுக்கும் சமயங்களுக்கும் ஆழமான உறவு ஏற்பட்டுவிட்டதைக் காணமுடிகிறது.

விவிலியம் எழுதப்பெற்ற இலத்தின்மொழி கிறித்துவத்திற்குத் தொடர்பான மொழியாக இருக்கின்றது. புத்தர் பேசிய பாலிமொழி புத்த சமயத்தோடு பிணைந்துள்ளது. அரபுமொழி இசுலாத்தின் மொழியாக ஆகியுள்ளது. அதுபோல், சமற்கிருதம் இந்துமதத்தின் மொழியாக வழங்குகிறது. மேற்குறித்த அத்தனை மொழிகளைப்போல் அல்லாமல், தமிழ்மொழி மட்டும் மாறுபட்டும் தனிச்சிறப்புப் பெற்றும் விளங்குகிறது. குறிப்பிட்ட எந்தவொரு மதத்தையும் அல்லது சமயத்தையும் சாராமல், அனைத்து சமயங்களுக்கும் பொதுவான மொழியாகவும் எல்லா மதத்தையும் அரவணைத்துப் போற்றும் மொழியாகவும் உலகப் பெருநெறிகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் தமிழ்மொழி விளங்கிவருவது வியப்பளிக்கும் செய்தியாகும்.

பல சமயத்தைச் சார்ந்தோர் தங்கள் சமயத்தைப் போற்றிய அதே அளவீட்டில் ஒரு மொழியைப் போற்றியுள்ளார்கள் என்றால் அது தமிழ்மொழியாக மட்டும்தான் இருக்கமுடியும். இந்த மாபெரும் உண்மை தமிழ் இலக்கியங்களில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதற்கான சில சான்றுகள் பின்வருமாறு:-

1.வான்புகழ் கொண்ட தமிழர் மறையாம் திருக்குறள் எந்தவொரு சமயத்தையும் சாராமல் மிகமிகப் பொதுமையான முறையில் எழுதப்பெற்ற முந்துதமிழ் நூலாக விளங்குகிறது. திருக்குறள் தமிழ் எந்தவொரு சமயமதத்திற்கும் உட்பட்டு இயங்கவில்லை. உலகம் முழுவதற்கும் ஏற்றதாகிய திருவள்ளுவர் காட்டும் கடவுள்நெறி தமிழ்மொழியில் குறட்பாக்களாகப் பாடப்பெற்றுள்ளது.

2.வள்ளுவரின் கடவுள்நெறிக்கு இணையாக பொதுமையாக வைத்துச் சொல்லப்படும் தகுதியைக் கொண்டது சிலப்பதிகாரம். நெஞ்சை அள்ளும் இந்தச் சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் ஒரு சமயத்துறவியாவார். இதுபோலவே, சீவகச் சிந்தாமணியை அருளிய திருத்தக்க தேவரும் சமணரே ஆவார். வளையாபதியும் குண்டலகேசியும் கூட சமணக் காப்பியங்களே.

3.சிலம்போடு சேர்த்து இரட்டைக் காப்பியமாகப் போற்றப்படும் மணிமேகலை நூலை ஆக்கியவர் சாத்தனார். இவர் புத்த சமயத்தைச் சேர்ந்தவர்.

4.ஐஞ்சிறு காப்பிய நூல்களான சூளாமணி, உதயணன்காதை, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம் ஆகியவற்றை பாடியோரும் பௌளத்தரும் சமணருமே ஆவர்.

5.கம்பர் பாடிய கம்பராமாயணமும் வில்லிப்புத்தூரார் பாடிய மகாபாரதமும் வைணவ சமயத்தை வலியுறுத்தும் காபியங்கள். திருமால் பெருமை பாடும் நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களும் வைணவ வழிவந்த நூல்களே.

6.சிவ நெறியை போற்றவும் தமிழ்மொழியை அடிமை விலங்கிலிருந்து மீட்கவும் சேக்கிழார் பாடிய பெரிய புராணம் சைவ சமயக் காப்பியம். அதோடு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகிய நால்வர் அருளிய தேவார திருவாசகத் திருப்பாடல்களும் பன்னிரு திருமுறைகளும் சைவ சமயம் சார்ந்தவை.

7.கிறித்துவ நெறிசார்ந்த தேம்பாவணி எனும் நூலை வீரமாமுனிவர் எனும் கிறித்துவப் பாதிரியார் வரைந்தார். அழகுத் தமிழில் ஏசுகாவியம் பாடிய கிருட்டிணப் பிள்ளை ஒரு கிறித்துவர்.

8.இசுலாமியக் கருத்துகளைச் சீறாப்புராணம் வழி தமிழில் வழங்கியவர் முகமதியச் சமயத்தவரான உமறுப் புலவர்.

இப்படி உலகின் முகாமையான சமயங்களைச் சார்ந்தவர்கள் பலரும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்ட மொழி தமிழாகும். தமிழ்ப் புலவோர்களும் சான்றோர்களும் தங்களின் சமயம் எதுவாக இருந்தாலும் அதற்கு நிகராகத் தமிழை ஏற்றுக்கொண்டு போற்றிவளர்த்துள்ளனர். சமய வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் தமிழால் ஒற்றுமையைப் பேணிவந்துள்ளனர்.

3 comments:

  1. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய கட்டுரை.தொடர்ந்து எழுதுங்கள்.எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.!வாழ்க தமிழ்!

    ReplyDelete
  2. ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.தமிழில் உள்ள பல முக்கியமான செய்திகளை எழுதி வரும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.உங்களின் நல்ல தமிழ் கட்டுரைகள்,எனக்கு மிகவும் பயனாக அமைகிறது.எனது ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.!வாழ்க தமிழ்!
    அன்புடன்:ஆதிரையன்,செலாமா,பேரா.

    ReplyDelete
  3. ஒருவர் தமிழில் பேசுகிறார் என்பதை புறம் தள்ளி அதில் உள்ள சமயத்தை நோக்குகிறார் எனில், தவறு பேசுபவரிடம் இல்லை. அதை கேட்பவரிடம் உள்ளது என்பதை அவரும், மற்றோர்களும் தமிழை நோக்கவில்லை என்றாகிறது. இந்த சபையின் பெயரே “திருத்தமிழ்”. அவ்வாறு இருக்கும் போது, சமயம் கலக்காத தமிழொன்று இருக்குமா? சற்றே சிந்தியுங்கள்!
    தமிழன்புடன் முரளீதரன்.

    ReplyDelete

வணக்கம் திருத்தமிழ் அன்பர்களே. உங்கள் எண்ணங்களையும் ஏடல்களையும் இங்கே மறுமொழியாக இட்டுச்செல்லுங்கள். நன்றி.
அன்புடன்;
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்